John - Chapter 9
Holy Bible

1 இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார்.
2 ' ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா? ' என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள்.
3 அவர் மறுமொழியாக, ' இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்.
4 பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது.
5 நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி ' என்றார்.
6 இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி,
7 ' நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும் ' என்றார். சிலோவாம் என்பதற்கு ' அனுப்பப்பட்டவர் ' என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.
8 அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், ' இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா? ' என்று பேசிக்கொண்டனர்.
9 சிலர், ' அவரே ' என்றனர்; வேறு சிலர் ' அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார் ' என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், ' நான்தான் அவன் ' என்றார்.
10 அவர்கள், ' உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது? ' என்று அவரிடம் கேட்டார்கள்.
11 அவர் அவர்களைப் பார்த்து, ' இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, ' சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைப் கழுவும் ' என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது ' என்றார்.
12 ' அவர் எங்கே? ' என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், ' எனக்குத் தெரியாது ' என்றார்.
13 முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள்.
14 இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்தநாள் ஓர் ஓய்வுநாள்.
15 எனவே, ' எப்படிப் பார்வை பெற்றாய்? ' என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர், ″ இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது ″ என்றார்.
16 பரிசேயருள் சிலர், ' ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது ' என்று பேசிக் கொண்டனர். ஆனால் வேறு சிலர், ' பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா? ' என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.
17 அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், ' உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்? ' என்று மீண்டும் கேட்டனர். ' அவர் ஓர் இறைவாக்கினர் ' என்றார் பார்வை பெற்றவர்.
18 அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை.
19 ' பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது? ' என்று கேட்டார்கள்.
20 அவருடைய பெற்றோர் மறுமொழியாக, ' இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவிலேயே பார்வையற்றவன்தான்.
21 ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன் தானே! நடந்ததை அவனே சொல்லட்டும் ' என்றனர்.
22 யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிடவேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள்.
23 அதனால் அவருடைய பெற்றோர், ' அவன் வயதுவந்தவன் தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள் ' என்றனர்.
24 பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், 'உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்' என்றனர்.
25 பார்வை பெற்றவர் மறுமொழியாக, ' அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்; நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன் ' என்றார்.
26 அவர்கள் அவரிடம், ' அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்? ' என்று கேட்டார்கள்.
27 அவர் மறுமொழியாக, ' ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒரு வேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ? ' என்று கேட்டார்.
28 அவர்கள் அவரைப் பழித்து, ' நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள்.
29 மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது ' என்றார்கள்.
30 அதற்கு அவர் ' இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே!
31 பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும்.
32 பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே!
33 இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது ' என்றார்.
34 அவர்கள் அவரைப் பார்த்து, ' பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்? ' என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.
35 யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, ' மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா? ' என்று கேட்டார்.
36 அவர் மறுமொழியாக, ' ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன் ' என்றார்.
37 இயேசு அவரிடம், ' நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர் ' என்றார்.
38 அவர், ' ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன் ' என்று கூறி அவரை வணங்கினார்.
39 அப்போது இயேசு, ' தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன் ' என்றார்.
40 அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, ' நாங்களுமா பார்வையற்றோர்? ' என்று கேட்டனர்.
41 இயேசு அவர்களிடம், ' நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் ″ எங்களுக்குக் கண் தெரிகிறது ″ என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள் ' என்றார்.

Holydivine