Amos - Chapter 6
Holy Bible

1 சீனோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு!
2 கல்னேக்குப் போய்ப் பாருங்கள்: அங்கிருந்து சிறந்த நகரமாகிய ஆமாத்துக்குப் போங்கள்: பிறகு பெலிஸ்தியரின் நகரான காத்துக்குச் செல்லுங்கள்: அந்த அரசுகள் உங்கள் அரசுகளை விடச் சிறந்தவையோ? உங்கள் நாடுகள் அவர்களுடைய நாடுகளைவிடப் பரப்பளவில் பெரியவையோ?
3 தீய நாளை இன்னும் தள்ளிவைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்: ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள்.
4 தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும் கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு!
5 அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப்போல புதிய இசைக்கருவிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள்.
6 கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்: உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக்கொள்கின்றார்கள்.
7 ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்: அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.
8 தலைவராகிய ஆண்டவர் தம்மீது ஆணையிட்டுக் கூறுகிறார்: படைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு சொல்கிறார்: யாக்கோபின் செருக்கை நான் வெறுக்கிறேன்: அவனுடைய கோட்டைகளை அருவருக்கிறேன். நகரையும் அதிலுள்ள யாவரையும் நான் கைவிட்டு விடுவேன்.
9 ஒரு வீட்டில் பத்துப்பேரே இருந்தாலும் அவர்களும் மாண்டு போவார்கள்.
10 வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள்: ஒருவன், வீட்டில் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், உன்னுடன் வேறு யாரேனும உளரோ? என்று கேட்க, அவன், இல்லை என்று பதில் சொல்லி பேசாதே, ஆண்டவரின் பெயரைச் சொல்லக் கூடாது என்பான்.
11 ஆண்டவர்தாமே ஆணையிடுகின்றார்: பெரிய மாளிகைகளைத் தரைமட்டமாக்குவார்: சிறிய வீடுகளைத் தவிடுபொடியாக்குவார்.
12 பாறைகள்மேல் குதிரைகள் ஓடுமோ? எருதுகளைக் கட்டிக் கடலை உழுவதுண்டோ? நீங்கள் நீதியை நஞ்சாக மாற்றினீர்கள், நேர்மையின் கனியை எட்டிக்காயாய் ஆக்கினீர்கள்.
13 லோதபார் ஊரைப் பிடித்தது குறித்துப் பூரிப்பு அடைகிறீர்கள்: நம் சொந்த வலிமையால் கர்னாயிமைப் பிடித்து நமதாக்கிக் கொள்ளவில்லையா? என்கிறீர்கள். 
14 இஸ்ரயேல் வீட்டாரே! உங்களுக்கு எதிராக வேற்றினம் ஒன்றைத் தூண்டிவிடுவேன். அவர்கள் ஆமாத்து வாயிலில் இருந்து அராபா நீரோடை வரையில் உங்களை ஒடுக்கித் துன்புறுத்துவார்கள் , என்கிறார் படைகளின் கடவுளாகிய ஆண்டவர்.

Holydivine