Sirach - Chapter 1
Holy Bible

1 ஞானமெல்லாம் ஆண்டவரிடமிருந்து வருகின்றது: அது என்றும் அவரோடு இருக்கின்றது. 
2 கடல் மண்லையோ மழைத்துளியையோ முடிவில்லாக் காலத்தையோ யாரே கணக்கிடுவர்?
3 வான்வெளியின் உயரத்தையோ நிலவுலகின் அகலத்தையோ ஆழ்கடலையோ ஞானத்தையோ யாரே தேடிக் காண்பர்?
4 எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது: கூர்மதி கொண்ட அறிவுத்திறன் என்றென்றும் உள்ளது.
5 [உயர்வானில் உள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று: என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள்.] 
6 ஞானத்தின் ஆணிவேர் யாருக்கு வெளியிடப்பட்டது? அதன் நுணுக்கங்களை அறிந்தவர் எவர்? 
7 [ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத் தெளிவாக்கப்பட்டது? அதன் பரந்த பட்டறிவைப் புரிந்துகொண்டவர் யார்?]
8 ஆண்டவரே ஒருவரே ஞானியாவார்: தம் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்திற்குரியவர்.
9 அவரே ஞானத்தைப் படைத்தவர்: அதனைக் கண்டு கணக்கிட்டவர்: தம் வேலைப்பாடுகளையெல்லாம் அதனால் நிரப்பியர்.
10 தம் ஈகைக்கு ஏற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார்: தம்மீது அன்புகூர்வோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார்.
11 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே மாட்சியும் பெருமையுமாகும்: அதுவே மகிழ்ச்சியும் அக்களிப்பின் மணிமுடியுமாகும்.
12 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உள்ளத்தை இன்புறுத்துகிறது: மகிழ்வையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் வழங்குகிறது.
13 ஆண்டவரிடம் அச்சம் கொள்வோரது முடிவு மகிழ்ச்சிக்கு உரியதாய் அமையும்: அவர்கள் இறக்கும் நாளில் ஆசி பெறுவார்கள்.
14 ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம்: அது இறைப்பற்றுள்ளோருக்கு தாய் வயிற்றிலிருக்கும்பொழுதே வழங்கப்பெறுகிறது.
15 ஞானம் மனிதர் நடுவில் முடிவில்லாத அடித்தளத்தை அமைத்துள்ளது: அவர்களுடைய வழிமரபினரிடையே நீங்காது நிலைத்திருக்கும்.
16 ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் நிறைவு: அது தன் கனிகளால் மனிதருக்கும் களிப்பூட்டுகிறது.
17 அது அவர்களின் இல்லம் முழுவதையும் விரும்பத்தக்க நலன்களால் நிரப்பிவிடும்: தன் விளைச்சலால் அவர்களின் களஞ்சியங்களை நிறைத்திடும்.
18 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் மணிமுடி: அது அமைதியைப் பொழிந்து, உடல்நலனைக் கொழிக்கச் செய்கிறது.
19 ஆண்டவரே அதனைக் கண்டு கணக்கிட்டார்: அறிவாற்றலையும் நுண்ணறிவையும் மனிதருக்கு மழையெனப் பொழிந்திட்டார்: அதை உறுதியாய்ப் பற்றிக்கொண்டோரை மாட்சியால் உயர்த்திட்டார்.
20 ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் ஆணிவேர்: அதன் கிளைகள் நீடிய வாழ்நாள்கள்.
21 [ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் பாவங்களை விரட்டிவிடுகிறது. அது இருக்கும்போது சினத்தையெல்லாம் அகற்றிவிடுகிறது.]
22 நேர்மையற்ற சினத்தை நியாயப்படுத்த முடியாது: சினத்தால் நிலை தடுமாறுவோர் வீழ்ச்சி அடைவர். 
23 பொறுமையுள்ளோர் தக்க காலம்வரை அமைதி காப்பர்: பின்னர், மகிழ்ச்சி அவர்களுள் ஊற்றெடுத்துப் பாயும். 
24 அவர்கள் தக்க நேரம்வரை நா காப்பார்கள். பலருடைய வாய் அவர்களது அறிவுக்கூர்மையை எடுத்துரைக்கும்.
25 ஞானத்தின் கருவூலங்களில் அறிவார்ந்த பொன்மொழிகள் உண்டு: பாவிகளுக்கு இறைப்பற்று அருவருப்பைத் தரும். 
26 ஞானத்தை நீ அடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி: அப்போது ஆண்டவரே உனக்கு ஞானத்தை வாரி வழங்குவார். 
27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானமும் நற்பயிற்சியுமாகும். பற்றுறுதியும் பணிவும் அவருக்கு மகிழ்ச்சி தரும். 
28 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தைப் புறக்கணியாதே: பிளவுபட்ட உள்ளத்தோடு அவரிடம் செல்லாதே. 
29 மனிதர்முன் வெளிவேடம் போட வேண்டாம். நாவடக்கம் கொள். 
30 நீ வீழ்ச்சியுறாதவாறு செருக்குக் கொள்ளாதே. உன்மீதே மானக்கேட்டை வருவித்துக்கொள்ளாதே. ஆண்டவருக்கு நீ ஆஞ்சி நடவாததாலும் உன் உள்ளத்தில் கள்ளம் நிறைந்திருந்ததாலும் ஆண்டவர் உன் மறைவான எண்ணங்களை வெளிப்படுத்துவார்: சபையார் எல்லார் முன்னிலையில் உன்னைத் தாழ்த்துவார்.

Holydivine