Sirach - Chapter 7
Holy Bible

1 தீமை செய்யாதே: தீமை ஒருபோதும் உனக்கு நேராது.
2 அநீதியை விட்டு அகன்று செல்: அநீதியும் உன்னைவிட்டு விலகும்.
3 குழந்தாய், அநீதி எனும் நிலத்தில் விதைக்காதே: அப்போது அதில் நீ ஏழு மடங்கு விளைச்சலை அறுக்கமாட்டாய்.
4 ஆண்டவரிடமிருந்து உயர்நிலையைத் தேடாதே: பெருமைக்குரிய இருக்கையை மன்னரிடமிருந்து நாடாதே.
5 ஆண்டவர் திருமுன் உன்னையே நீதிமான் ஆக்கிக்கொள்ளாதே: மன்னர் முன் உன்னையே ஞானி ஆக்கிக்கொள்ளாதே.
6 நடுவர் ஆவதற்கு விரும்பாதே: அநீதியை நீக்க உன்னால் முடியாமல் போகலாம்: வலியவருக்கு அஞ்சி உன் நேர்மைக்கே இழுக்கு வருவிக்கலாம்.
7 நகர மக்களுக்கு எதிராகக் குற்றம் செய்யாதே: மக்கள்முன் உன் பெயரைக் கெடுத்துக்கொள்ளாதே.
8 செய்த பாவத்தையே மீண்டும் செய்யாதே: அவற்றுள் ஒன்றாவது உனக்குத் தண்டனை பெற்றுத் தரும்.
9 நான் அளிக்கும் எண்ணற்ற கொடைகளை ஆண்டவர் கண்ணோக்குவார்: உன்னத கடவுளுக்கு நான் செலுத்தும் பலிகளை ஏற்றுக்கொள்வார் எனச் சொல்லாதே.
10 நீ மன்றாடும்போது மனம் சோர்ந்து போகாதே: தருமம் செய்வதைப் புறக்கணியாதே.
11 கசப்புணர்வு கொண்டோரை எள்ளிநகையாடாதே: நம்மைத் தாழ்த்தவும் உயர்த்தவும் வல்லவர் ஒருவர் உள்ளார்.
12 பொய் புனைந்து உன் உடன்பிறப்பை ஏமாற்றாதே: உன் நண்பர்க்கும் அவ்வாறே செய்யாதே.
13 பொய் சொல்ல விரும்பாதே: பொய் பேசும் பழக்கம் நன்மை தராது.
14 மூப்பர் கூட்டத்தில் உளறாதே: நீ வேண்டும் போது பின்னிப் பின்னிப் பேசாதே.
15 கடும் உழைப்பையும் உழவுத் தொழிலையும் வெறுக்காதே: இவை உன்னத இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை.
16 பாவிகளின் கூட்டத்தோடு சேராதே: கடவுளின் சினம் காலம் தாழ்த்தாது வெளிப்படும் என்பதை மறவாதே.
17 பணிவையே பெரிதும் நாடு: இறைப்பற்றில்லாதவர்களுக்கு நெருப்பும் புழுக்களும் தண்டனையாகக் கிடைக்கும்.
18 பணத்துக்காக நண்பரைக் கைவிடாதே: உண்மையான சகோதரனை ஓபிர் நாட்டுப் பொன்னுக்காகவும் பண்டம் மாற்றாதே.
19 ஞானமுள்ள நல்ல மனைவியை இழந்துவிடாதே: அவளது நன்னயம் பொன்னைவிட உயர்ந்தது.
20 உண்மையுடன் உழைக்கும் உன் அடிமைகளுக்கும், தங்கள் உயிரையே உனக்காகக் கொடுக்கும் கூலியாள்களுக்கும், எவ்வகைத் தீங்கும் செய்யாதே.
21 அறிவுக்கூர்மை கொண்ட அடிமைக்கு அன்புகாட்டு: அவனுக்கு விடுதலை கொடுக்க மறுக்காதே.
22 உன் வீட்டில் விலங்குகள் இருந்தால் அவற்றைக் கவனித்துக்கொள்: அவை உனக்குப் பயன் கொடுத்தால் அவற்றை வைத்துக்கொள்.
23 உனக்குப் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு நற்பயற்சி அளி: இளமைமுதலே பணிந்திருக்கச் செய்.
24 உனக்குப் பெண் பிள்ளைகள் இருந்தால், அவர்களது கற்பில் அக்கறை காட்டு: அவர்களுக்கு மிகுதியாகச் செல்லம் கொடுக்காதே.
25 உன் மகளுக்குத் திருமணம் செய்துவை: உன் தலையாய கடமையைச் செய்தவன் ஆவாய். அறிவுக்கூர்மை படைத்தவருக்கே உன் மகளை மணமுடித்துக்கொடு.
26 உன் உள்ளத்திற்கு ஏற்ற மனைவி உனக்கு இருந்தால் அவளைத் தள்ளி வைக்காதே: நீ வெறுக்கும் மனைவியை நம்பிவிடாதே.
27 உன் தந்தையை உன் முழு உள்ளத்துடன் மதித்து நட: உன் தாயின் பேறுகாலத் துன்பத்தை மறவாதே.
28 அவர்கள் உன்னைப் பெற்றெடுத்தார்கள்: அதற்கு ஈடாக உன்னால் எதையும் செய்ய முடியாது என்பதை நினைவில் இருத்து.
29 உன் முழு உள்ளத்தோடு ஆண்டவருக்கு அஞ்சு: அவருடைய குருக்களை மதித்து நட.
30 உன்னை உண்டாக்கியவர்மீது உன் முழு வலிமையோடும் அன்பு செலுத்து: அவருடைய திருப்பணியாளர்களைக் கைவிடாதே.
31 ஆண்டவருக்கு அஞ்சு: குருக்களைப் பெருமைப்படுத்து: குருக்களுக்குரிய பங்காகிய முதற்கனி, குற்றம்போக்கும் பலி, உழைப்பின் பயன், தூய்மையாக்கும் பலி, தூய பொருள்களின் முதற்பயன் ஆகியவற்றை உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி கொடு.
32 ஏழைகளுக்குத் தாராளமாய்க் கொடு: இதனால் இறை ஆசி முழுமையாக உனக்குக் கிடைக்கும்:
33 உயிர் வாழ்வோர் அனைவருக்கும் கனிவோடு கொடு: உயிர் நீத்தோர்க்கும் அன்பு காட்ட மறவாதே.
34 அழுவோரைத் தவிர்க்காதே: புலம்புவோரோடு புலம்பு.
35 நோயாளிகளைச் சந்திக்கத் தயங்காதே: இத்தகைய செயல் மற்றவர்களின் அன்பினை உனக்குப் பெற்றுத் தரும்.
36 எல்லாவற்றிலும் உன் முடிவை நினைவில் கொள்: அவ்வாறேனில் ஒருபோதும் நீ பாவம் செய்யமாட்டாய்.

Holydivine