Sirach - Chapter 4
Holy Bible

1 குழந்தாய், ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே: கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே.
2 பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே: வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே.
3 உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே: வறுமையில் உழல்வோருக்குக் காலம் தாழ்த்தாமல் உதவி செய்.
4 துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே: ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிகொள்ளாதே.
5 உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே: உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே.
6 ஏழைகள் கசப்புணர்வினால் உன்னைச் சபித்தால், அவர்களைப் படைத்தவர் அவர்களுடைய வேண்டுதலுக்குச் செவிசாய்ப்பார்.
7 மக்களின் அன்புக்கு உரியவனாய் இரு: பெரியோர்களுக்குத் தலை வணங்கு.
8 ஏழைகளுக்குச் செவிசாய்: அவர்களுக்கு அமைதியாக, கனிவோடு பதில் சொல்.
9 ஒடுக்குவோரின் கையினின்று ஒடுக்கப்பட்டோரை விடுவி: நீதியான தீர்ப்பு வழங்குவதில் உறுதியாய் இரு.
10 கைவிடப்பட்டோர்க்குத் தந்தையாய் இரு: அவர்களின் அன்னையர்க்குத் துணைவன்போல் இரு. அப்போது நீ உன்னத இறைவனின் பிள்ளைபோல் இருப்பாய்: தாயைவிட அவர் உன்மீது அன்புகூர்வார்.
11 ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்: தன்னைத் தேடுவோர்க்குத் துணைநிற்கும்.
12 ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்: அதனை வைகறையிலேயே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர்.
13 அதனைப் பற்றிக்கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக்கொள்வர்: அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார்.
14 அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்: ஞானத்துக்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர்.
15 ஞானத்துக்குப் பணிவோர் மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்குவர்: அதற்குச் செவிசாய்ப்போர் பாதுகாப்பாய் வாழ்வர்:
16 ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்: அவர்களுடைய வழி மரபினரும் அதனை உடைமையாக்கிக் கொள்வர்:
17 முதலில் அவர்களை அது கோணல் வழியில் அழைத்துச் செல்லும்: அவர்களுக்கு அச்ச நடுக்கத்தை வருவிக்கும்: தனக்கு அவர்கள்மீது நம்பிக்கை ஏற்படும்வரை அவர்களை அது கண்டிக்கும், வதைக்கும்: தன் நெறிமுறைகளால் அவர்களைச் சோதிக்கும்.
18 அது மீண்டும் அவர்களிடமேவந்து அவர்களை மகிழ்விக்கும்: அவர்களுக்குத் தன் இரகசியங்களை வெளிப்படுத்தும்.
19 அதைவிட்டு அவர்கள் விலகிச் சென்றால், அவர்களை அது கைவிட்டுவிடும்: அழிவுக்கு அவர்களை இட்டுச் செல்லும்.
20 தக்கநேரம் பார்: தீமையைக்குறித்து விழிப்பாயிரு: உன்னைப்பற்றியே நாணம் அடையாதே.
21 ஒரு வகை நாணம் பாவத்திற்கு இட்டுச்செல்லும்: மற்றொரு வகை நாணம் மாட்சியையும் அருளையும் தரும்.
22 பாகுபாடு காட்டி உனக்கே கேடு வருவித்துக் கொள்ளாதே: பணிவின் பெயரால் வீழ்ச்சி அடையாதே.
23 பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்துவிடாதே. 
24 ஞானம் பேச்சில் புலப்படும்: நற்பயிற்சி வாய்மொழியால் வெளிப்படும்.
25 உண்மைக்கு மாறாகப் பேசாதே: உன் அறியாமைக்காக நாணம் கொள்.
26 உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே: ஆற்றின் நீரோட்டத்தைத் தடை செய்யமுயலாதே.
27 மூடருக்கு அடிபணியாதே: வலியோருக்குப் பாகுபாடு காட்டாதே.
28 இறக்கும்வரை உண்மைக்காகப் போராடு: கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார்.
29 பேச்சில் துடுக்காய் இராதே: செயலில் சோம்பலாகவும் ஈடுபாடின்றியும் இராதே.
30 வீட்டில் சிங்கம்போல் இராதே: பணியாளர்முன் கோழையாய் இராதே.
31 பெறுவதற்காக மட்டும் கைகளை விரித்து வைத்திராதே: கொடுக்கும் நேரத்திலோ உன் கைகளை மூடிக்கொள்ளாதே.

Holydivine