Sirach - Chapter 36
Holy Bible

1 எல்லாவற்றிற்றும் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாயிரும்: எங்களைக் கண்ணோக்கும்: உம்மைப்பற்றிய அச்சம் எல்லா நாடுகள் மீதும் நிலவச் செய்யும்.
2 அயல் நாடுகளுக்கு எதிராக உம் கையை உயர்த்தும். அவர்கள் உம் வலிமையைக் காணட்டும்.
3 அவர்கள் முன்னிலையில் எங்கள் வழியாக உமது தூய்மையைக் காட்டியது போல், எங்கள் முன்னிலையில் அவர்கள் வழியாக உமது மாட்சியைக் காட்டும்.
4 ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என நாங்கள் அறிந்துள்ளதுபோல் அவர்களும் உம்மை அறிந்து கொள்ளட்டும்.
5 புதிய அடையாளங்களை வழங்கும்: வியத்தகு செயல்களை நிகழ்த்தும்: உம் கையினை, வலக்கையினை மாட்சிமைப்படுத்தும்.
6 சினத்தைத் தூண்டிச் சீற்றத்தைப் பொழியும்: எதிரியை ஒழித்துப் பகைவரைப் பாழாக்கும்.
7 காலத்தை விரைவுபடுத்தி ஆணையை நினைவுக்கூரும்: அவர்கள் உம் அரும் பெரும் செயல்களை எடுத்துரைக்கட்டும்.
8 தப்பிப் பிழைத்தோரைச் சினம் என்னும் நெருப்பு விழுங்கட்டும்: உம் மக்களுக்குத் தீங்கிழைப்போர் அழிவைக் காணட்டும்.
9 எங்களைத்தவிர வேறு யாரும் இல்லை எனக் கூறும் பகை வேந்தர்களின் தலைகளை நசுக்கும்.
10 யாக்கோபின் குலங்களை ஒன்று கூட்டும்: தொடக்கத்தில்போன்று அவர்களை உமது உரிமைச்சொத்தாக்கும்.
11 ஆண்டவரே, உம் பெயரால் அழைக்கப்பெற்ற மக்களுக்கு இரக்கங் காட்டும்: உம் தலைப்பேறாகப் பெயரிட்டழைத்த இஸ்ரயேலுக்குப் பரிவுகாட்டும்.
12 உமது திருவிடம் இருக்கும் நகரின்மீது, நீர் ஓய்வுகொள்ளும் இடமாகிய எருசலேம்மீது கனிவு காட்டும்.
13 உமது மகிழ்ச்சியால் சீயோனை நிரப்பும்: உமது மாட்சியால் உம் மக்களை நிரப்பும்.
14 தொடக்கத்தில் நீர் படைத்தவற்றுக்குச் சான்று பகரும்: உம் பெயரால் உரைக்கப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றும்.
15 உமக்காகப் பொறுமையுடன் காத்திருப்போருக்குப் பரிசு அளியும்: உம் இறைவாக்கினர்கள் நம்பத்தகுந்தவர்கள் என மெய்ப்பித்துக் காட்டும்.
16 ஆண்டவரே, உம் மக்களுக்கு ஆரோன் வழங்கிய ஆசிக்கு ஏற்ப உம்மிடம் மன்றாடுவோரின் வேண்டுதலுக்குச் செவிசாயும். 
17 அப்போது, நீரே ஆண்டவர், என்றுமுள கடவுள் என்பதை மண்ணுலகில் உள்ள எல்லோரும் அறிந்துகொள்வர்.
18 வயிறு எல்லா வகை உணவுகளையும் உட்கொள்கிறது: எனினும் ஒரு வகை உணவு மற்றொன்றைவிட மேலானது.
19 வேட்டையாடிய உணவினை நாக்கு சுவைத்து அறிகிறது: அறிவுக்கூர்மை கொண்ட உள்ளம் பொய்யைப் பிரித்தறிகிறது.
20 மனக்கோட்டம் கொண்டோர் வருத்தத்தைக் கொடுப்பர்: பட்டறிவு கொண்டோர் அவர்களுக்கு எதிரடி கொடுப்பர்.
21 ஒரு பெண் எந்த ஆணையும் கணவனாக ஏற்றுக்கொள்வாள்: ஆனால், ஆணுக்கு ஒரு பெண்ணைவிட மற்றொருத்தி மேம்பட்டவளாகத் தோன்றுவான்.
22 பெண்ணின் அழகு அவளுடைய கணவனை மகிழ்விக்கும்: அவன் வேறு எதையும் அவ்வளவு விரும்புவதில்லை.
23 அவளது பேச்சில் இரக்கமும் கனிவும் இருக்குமானால் அவளுடைய கணவன் மற்ற மனிதர்களைவிட நற்பேறு உடையவன்.
24 மனைவியை அடைகிறவன் உடைமையைப் பெறுகிறான்: தனக்கு ஏற்ற துணையையும் ஆதரவு தரும் தூணையும் அடைகிறான்.
25 வேலி இல்லையேல் உடைமை கொள்ளையடிக்கப்படும்: மனைவி இல்லையேல் மனிதன் பெருமூச்சு விட்டு அலைவான்.
26 நகர்விட்டு நகருக்குத் தப்பியோடும் திறமையான திருடனை யாரே நம்புவர்?
27 அவ்வாறே, தங்குவதற்கு இடம் இல்லாமல், இரவு வந்ததும் கண்ட இடத்திலும் தங்கும் மனிதனை எவர் நம்புவர்?

Holydivine