Sirach - Chapter 29
Holy Bible

1 இரக்கம் காட்டுவோர் தமக்கு அடுத்திருப்பவருக்குக் கடன் கொடுக்கின்றனர்: பிறருக்கு உதவி வெய்வோர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
2 அடுத்திருப்பவருக்கு அவருடைய தேவைகளில் கடன் கொடு: உரிய காலத்தில் பிறருடைய கடனைத் திருப்பிக்கொடு.
3 சொல் தவறாதே: அடுத்தவர் மீது நம்பிக்கை வை: உனக்குத் தேவையானதை எப்போதும் நீ கண்டடைவாய்.
4 வாங்கின கடனைக் கண்டெடுத்த பொருள்போலப் பலர் கருதுகின்றனர்: தங்களுக்கு உதவியோருக்குத் தொல்லை கொடுக்கின்றனர்.
5 கடன் வாங்கும்வரை கடன் கொடுப்பவரின் கையை முத்தமிடுவர்: அடுத்திருப்பவரின் செல்வத்தைப் பற்றித் தாழ்ந்த குரலில் பேசுவர்: திருப்பிக் கொடுக்கவேண்டிய போது காலம் தாழ்த்துவர்: பொறுப்பற்ற சொற்களைக் கூறுவர்: காலத்தின்மேல் குறை காண்பர்.
6 அவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க முடிந்தாலும் பாதியைக் கொடுப்பது அரிது. அதையும் கண்டெடுத்த பொருள் என்றே எண்ணிக்கொள்வர்: இல்லையேல், கடனைத் திருப்பித் தராமல் எமாற்றிவிடுவர்: இவ்வாறு தாமாகவே எதிரியை உண்டாக்கிக் கொள்வர்: சாபத்தையும் வசைமொழியையும் திருப்பிக் கொடுப்பர்: மாண்புக்குப் பதிலாக இகழ்ச்சியைத் தருவர்.
7 பலர் கடன் கொடாமலிருந்தது தீய எண்ணத்தினால் அன்று: காரணமின்றி ஏமாற்றப்படலாமோ என்னும் அச்சத்தினால்தான்.
8 தாழ்நிலையில் இருப்போர் குறித்துப் பொறுமையாய் இரு: நீ இடும் பிச்சைக்காக அவர்கள் காத்திருக்கும்படி செய்யாதே.
9 கட்டளையைமுன்னிட்டு ஏழைகளுக்கு உதவிசெய்: தேவையின்போது அவர்களை வெறுங்கையராய்த் திருப்பி அனுப்பாதே.
10 பணத்தை உன் சகோதரர்களுக்காகவோ நண்பர்களுக்காகவோ செலவிடு: அழிந்து போகும்படி அதைக் கல்லுக்கு அடியில் மறைத்துவைக்காதே.
11 உன்னத இறைவனின் கட்டளைப்படி உன் செல்வத்தைப் பயன்படுத்து: அது பொன்னிலும் மேலாக உனக்குப் பயனளிக்கும்.
12 உன் களஞ்சியத்தில் தருமங்களைச் சேர்த்துவை: அவை எல்லாத் தீமையினின்றும் உன்னை விடுவிக்கும்.
13 வலிமையான கேடயத்தையும் உறுதியான ஈட்டியையும்விட அவை உன் பகைவரை எதிர்த்து உனக்காகப் போராடும்.
14 நல்ல மனிதர் தமக்கு அடுத்திருப்பவருக்குப் பிணையாய் நிற்பர்: வெட்கம் கெட்டோர் அவர்களைக் கைவிட்டுவிடுவர்.
15 பிணையாளர் செய்த நன்மைகளை மறவாதே: அவர்கள் தங்கள் வாழ்வையே உனக்காகத் தந்துள்ளார்கள்.
16 பாவிகள் பிணையாளர் செய்த நன்மைகளை அழிக்கிறார்கள்: நன்றி கெட்டவர்கள் தங்களை விடுவித்தவர்களையே கைவிட்டு விடுவார்கள்.
17 பிணையாய் நின்றதால் செல்வர் பலர் சீரழிந்தனர்: திரை கடல் போல் அலைக்கழிக்கப்பட்டனர்.
18 அது வலிய மனிதரை வெளியே துரத்தியது: அயல்நாடுகளில் அலையச் செய்தது.
19 பயன் கருதித் தங்களையே பிணையாளர் ஆக்கிக் கொண்ட பாவிகள் தங்களையே தீர்ப்புக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள்.
20 உன்னால் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவு: நீயே விழுந்துவிடாமல் எச்சரிக்கையாய் இரு.
21 வாழ்வின் அடிப்படைத் தேவைகளாவன: தண்ணீர், உணவு, உடை, மானம் காக்க வீடு.
22 அடுத்தவர் வீட்டில் உண்ணும் அறுசுவை உணவைவிடத் தன் கூரைக்கு அடியில் வாழும் ஏழையின் வாழ்வே மேல்.
23 குறைவோ நிறைவோ எதுவாயினும், இருப்பதைக் கொண்டு மனநிறைவு கொள்: அப்போது உன் வீட்டாரின் பழிச்சொற்களை நீ கேட்கமாட்டாய்.
24 வீடு வீடாய்ச் செல்வது இரங்கத்தக்க வாழ்க்கை: இத்தகையோர் போய்த் தங்கும் இடத்தில் பேசவும் துணியமாட்டார்கள்.
25 நீ விருந்தோம்பிப் பருகக் கொடுத்தாலும் செய்நன்றி பெறமாட்டாய்: மேலும், பின்வரும் கடுஞ் சொற்களையே கேட்பாய்:
26 அன்னியனே, வா இங்கே: உணவுக்கு ஏற்பாடு செய்: ஏதாவது உன் கையில் இருந்தால் எனக்கு உண்ணக் கொடு.
27 அன்னியனே, மாண்புடையோர் முன்னிலையிலிருந்து வெளியே போ: என் சகோதரன் என்னுடன் தங்குகிறான்: எனக்கு வீடு தேவை.
28 வீட்டாரின் கடுஞ்சொல்லும் கடன் கொடுத்தோரின் பழிச்சொல்லும் அறிவுள்ள மனிதரால் தாங்க முடியாதவை.

Holydivine