Sirach - Chapter 23
Holy Bible

1 தந்தையாகிய ஆண்டவரே, என் வாழ்வின் தலைவரே, என் வாய் கூறுவதையெல்லாம் பொருட்படுத்தாதேயும்: அவற்றின் பொருட்டு நான் வீழ்ச்சியுறாதவாறு செய்யும்.
2 என் தவறுகளுக்காக என்னை விட்டுவைக்காமலும் என் பாவங்களைக் கவனிக்கத் தவறாமலும் இருக்குமாறு, என் எண்ணங்களைக் கட்டுப்படுத்தத் தண்டனை கொடுப்பவர் யார்? என் உள்ளத்திற்கு ஞானத்தின் நற்பயிற்சியை அளிப்பவர் யார், 
3 இல்லையேல், என் தவறுகள் பெருகிவிடும்: என் பாவங்கள் மிகுந்துவிடும். என் எதிரிகள் முன் நான் வீழ்ச்சியுறுவேன்: என் பகைவர் என்னைக்குறித்து மகிழ்வர்.
4 தந்தையாகிய ஆண்டவரே, என் வாழ்வின் கடவுளே, இறுமாப்புள்ள பார்வைக்கு நான் இடம் கொடாதிருக்கச் செய்யும்.
5 தீய நாட்டங்களை என்னிடமிருந்து அகற்றும்.
6 பேருண்டி விருப்பமும் சிற்றின்ப ஆசையும் என்னை மேற்கொள்ள விடாதேயும்: தகாத எண்ணங்களுக்கு என்னை ஒப்புவிக்காதேயும்.
7 குழந்தைகளே, நாவடக்கம்பற்றிக் கேளுங்கள்: நாவைக் காப்போர் எதிலும் சிக்கிக்கொள்ளமாட்டார்கள்.
8 பாவிகள் தங்கள் நாவினாலேயே அகப்பட்டுக்கொள்வார்கள்: வசை கூறுவோரும் செருக்குக்கொண்டோரும் அதனால் இடறிவிழுகின்றனர்.
9 ஆணையிட உன் நாவைப் பழக்கப்படுத்தாதே: தூய கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டே இராதே.
10 விசாரணைக்கு உள்ளாகி அடிக்கடி அடிபடும் அடிமையிடம் அதன் வடுக்கள் காணப்படாமல் போகா: எப்போதும் ஆணையிடுவோரும் கடவுளின் பெயரைப் பயன்படுத்துவோரும் பாவங்களினின்று கழுவப்படமாட்டார்கள்.
11 அடிக்கடி ஆணையிடுபவர்கள் தீநெறியில் ஊறியவர்கள்: இறைத் தண்டனை அவர்களது வீட்டை விட்டு அகலாது. அவர்கள் தவறாக ஆணையிட்டால் பாவம் அவர்கள் மீதே இருக்கும்: தங்கள் ஆணையைப் புறக்கணித்தால் அவர்களது பாவம் இரு மடங்காகும். வீணாக ஆணையிடுவோர் பாவத்தினின்று விடுபடார்: அவர்களது வீடு பேரிடரால் நிரப்பப்படும்.
12 சாவுக்கு ஒப்பிடக்கூடிய தீய சொற்கள் உண்டு: யாக்கோபின் உரிமைச்சொத்தில் அவை காணாதிருக்கட்டும். இறைப்பற்றுள்ளோர் இவை அனைத்திலிருந்து விலகி நிற்பர்: அவர்கள் பாவச் சேற்றில் புரளமாட்டார்கள்.
13 பண்பற்ற பேச்சுக்கு உன் நாவைப் பழக்காதே: அது பாவத்துக்குரிய பேச்சு.
14 பெரியோர்கள் நடுவே நீ அமர்ந்திருக்கும்போது உன் தந்தை தாயை நினைவில்கொள். இல்லையேல், அவர்கள் முன்னிலையில் உன்னையே மறப்பாய்: உன் தீய பழக்கத்தால் அறிவிலிபோன்று நடந்து கொள்வாய்: நீ பிறவாமல் இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும் என விரும்புவாய்: உன் பிறந்த நாளையும் சபிப்பாய்.
15 வசைமொழி பேசிப் பழக்கப்பட்டோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் நற்பயிற்சி பெறப்போவதில்லை.
16 இரண்டு வகை மாந்தர் பாவங்களைப் பெருக்குகின்றனர்: மூன்றாவது வகையினர் சினத்தைத் தூண்டிவிடுகின்றனர்.
17 கொழுந்துவிட்டு எரியும் காமவெறி கொண்டோர்: அவர்களது காமவெறி எரிந்து அடங்கினாலன்றி அணையாது. தம் உறவினர்களோடு முறையற்ற உறவு கொள்வோர்: அந்த ஆசை அடங்கும்வரை தீநெறியை அவர்கள் விடமாட்டார்கள். தகாத உறவு கொள்வோருக்கு எல்லா உணவும் இனியதே: இறக்கும்வரை அவர்கள் தளர்ந்து போக மாட்டார்கள்
18 பிறர்மனை நாடுவோர்: என்னைப் பார்ப்பவர் யார்? இருள் என்னைச் சூழ்ந்துள்ளது. சுவாகள் என்னை மறைத்துக் கொள்கின்றன. யாரும் என்னைக் காண்பதில்லை. நான் ஏன் கவலைப்படவேண்டும்? உன்னத இறைவன் என் பாவங்களை நினைத்துப்பாரார் எனத் தங்களுக்குள் சொல்லிக்கொள்வர்.
19 மனிதரின் கண்கள் கண்டுவிடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆண்டவரின் கண்கள் கதிரவனைவிடப் பத்தாயிரம் மடங்கு ஒளி படைத்தவை: அவை மாந்தரின் வழிகளையெல்லாம் காண்கின்றன: மறைந்திருப்பவற்றை அறிகின்றன என்பதை அவர்கள் அறியார்கள்.
20 அனைத்தும் படைக்கப்படுமுன்பே ஆண்டவர் அவற்றை அறிந்திருந்தார்: அவற்றைப் படைத்து முடித்த பின்னும் அவற்றை அறிந்துள்ளார்.
21 காமுகர் நகர வீதிகளில் தண்டிக்கப்படுவர்: எதிர்பாராத இடத்தில் பிடிபடுவர்.
22 தன் கணவரை விட்டுவிலகி, வேறு ஆடவன்மூலம் அவருக்கு வழித்தோன்றலை உருவாக்கும் மனைவிக்கும் அவ்வாறே நேரும்.
23 முதலாவதாக, அவள் உன்னத இறைவனின் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில்லை: இரண்டாவதாக, தன் கணவருக்கு எதிராகக் குற்றம் புரிகிறாள்: மூன்றாவதாக, தன் கெட்ட நடத்தையால் விபசாரம் செய்கிறாள்: அடுத்தவர்மூலம் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள்.
24 அவள் சபைமுன் அழைத்து வரப்படுவாள்: அவளுடைய பிள்ளைகளும் விசாரணைக்கு ஆளாவர்.
25 அவளிள் பிள்ளைகள் வேரூன்றமாட்டார்கள்: அவளின் கிளைகளும் கனிகள் கொடா.
26 அவள் சாபத்துக்குரிய நினைவை விட்டுச்செல்வாள்: அவள் அடைந்த இழிவு ஒரு நாளும் அழியாது.
27 ஆண்டவருக்கு அஞ்சுவதைவிட மேலானது எதுவுமில்லை என்றும், ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைவிட இனிமையானது எதுவுமில்லை என்றும் அவளுக்குப்பின் வாழ்வோர் உணர்ந்துகொள்வர்.

Holydivine