Sirach - Chapter 15
Holy Bible

1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் இவற்றையெல்லாம் செய்வார்கள்: திருச்சட்டத்தைக் கற்றுத் தேர்ந்தவர்கள் ஞானத்தை அடைவார்கள்.
2 தாய் போன்று ஞானம் அவர்களை எதிர்கொள்ளும்: இளம் மணமகள்போல அவர்களை வரவேற்கும்.
3 அறிவுக் கூர்மை எனும் உணவை அவர்கள் அருந்தக் கொடுக்கும்: ஞானமாகிய நீரைப் பருக அளிக்கும்.
4 அவர்கள் அதன்மீது சாய்ந்து கொள்வார்கள்: விழமாட்டார்கள்: அதைச் சார்ந்து வாழ்பவர்கள் இகழ்ச்சி அடையமாட்டார்கள்.
5 அடுத்திருப்பவருக்கு மேலாக அது அவர்களை உயர்த்தும்: சபை நடுவில் பேச நாவன்மை நல்கும்.
6 அவர்கள் அக்களிப்பையும் மகிழ்ச்சியின் முடியையும் கண்டடைவார்கள்: நிலையான பெயரை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
7 அறிவிலிகள் ஞானத்தை அடையமாட்டார்கள்: பாவிகள் அதைக் காணமாட்டார்கள்:
8 இறுமாப்பினின்று அது விலகி நிற்கும்: பொய்யர் ஒரு போதும் அதை நினைத்துப்பாரார்.
9 பாவிகளின் வாயிலிருந்து வரும் இறைப்புகழ்ச்சி தகாதது: அது ஆண்டவரிடமிருந்து அவர்களுக்கு அருளப்படவில்லை.
10 ஞானத்தினின்று இறைப்புகழ்ச்சி வெளிப்படவேண்டும்: ஆண்டவரே அதை வளமுறச் செய்வார்.
11 ஆண்டவரே என் வீழ்ச்சிக்குக் காரணம் எனச் சொல்லாதே: தாம் வெறுப்பதை அவர் செய்வதில்லை.
12 அவரே என்னை நெறிபிறழச் செய்தார் எனக் கூறாதே: பாவிகள் அவருக்குத் தேவையில்லை.
13 ஆண்டவர் அருவருப்புக்குரிய அனைத்தையும் வெறுக்கிறார்: அவருக்கு அஞ்சிநடப்போர் அவற்றை விரும்புவதில்லை.
14 அவரே தொடக்கத்தில் மனிதரை உண்டாக்கினர்: தங்கள் விருப்புரிமையின்படி செயல்பட அவர்களை விட்டுவிட்டார்.
15 நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி: பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது.
16 உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்: உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்.
17 மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.
18 ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல் மிக்கவர்: அனைத்தையும் அவர் காண்கிறார்.
19 ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்: மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார்.
20 இறைப்பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டதில்லை: பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை.

Holydivine