Sirach - Chapter 49
Holy Bible

1 யோசியாவின் நினைவு, நறுமணப் பொருள் தயாரிப்பவரால் செய்யப்பட்ட தூபக் கலவைபோன்றது: எல்லாருடைய வாயிலும் தேனைப்போலும், திராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தின் இன்னிசைபோலும் இனியது.
2 மக்களைச் சீர்படுத்துவதில் நேர்மையாக நடந்துகொண்டார்: தீநெறியின் அருவருப்பை நீக்கினார்.
3 ஆண்டவரிடம் தம் உள்ளத்தைச் செலுத்தினார்: தீநெறியாளர்களின் காலத்தில் வாழ்ந்த இறைப்பற்றுள்ளோரை உறுதிப்படுத்தினார்.
4 தாவீது, எசேக்கியா, யோசியா, ஆகியோரைத்தவிர மற்ற அனைவரும் பாவத்திற்குமேல் பாவம் செய்தனர். ஏனெனில் உன்னத இறைவனின் திருச்சட்டத்தைக் கைவிட்டனர்: யூதாவின் மன்னர்களும் மறைந்துபோயினர்.
5 அவர்கள் தங்களுடைய வலிமையைப் பிறருக்கு விட்டுக்கொடுத்தார்கள்: தங்களுடைய மாட்சியை அயல் நாட்டாருக்குக் கையளித்தார்கள்.
6 திருவிடம் அமைந்திருந்த தெரிந்தெடுக்கப்பட்ட நகரை அவர்கள் தீக்கிரையாக்கினார்கள்: எரேமியா கூறியபடி அதன் தெருக்களைப் பாழாக்கினார்கள்.
7 தாயின் வயிற்றிலேயே இறைவாக்கினராகத் திருநிலைப்படுத்தப்பெற்று, பிடுங்கவும் துன்புறுத்தவும் இடிக்கவுமின்றி, கட்டியெழுப்பவும் நட்டுவைக்கவும் ஏற்படுத்தப்பெற்ற எரேமியாவை அவர்கள் கொடுமையாய் நடத்தினார்கள்.
8 எசேக்கியேல் கடவுளுடைய மாட்சியின் காட்சியைக் கண்டார்: கெருபுகள் தாங்கின தேரின்மேல் மிளிர்ந்த அம்மாட்சியை ஆண்டவர் அவருக்குக் காட்டினார். 
9 பகைவர்களை நினைவுகூர்ந்து புயலை அனுப்பினார்: நேரிய வழியில் நடந்தோருக்கு நலன்கள் புரிந்தார்.
10 பன்னிரண்டு இறைவாக்கினர்களின் எலும்புகள் அவர்களது கல்லறையிலிருந்து புத்துயிர் பெற்றெழுக. அவர்கள் யாக்கோபின் குலத்தாரைத் தேற்றினார்கள்: பற்றுறுதி கொண்ட நம்பிக்கையால் அவர்களை விடுவித்தார்கள்.
11 செருபாபேலை எவ்வாறு நாம் மேன்மைப்படுத்துவோம்? வலக்கையின் கணையாழிபோல் அவர் திகழ்ந்தார்.
12 அவரைப்போலவே யோசதாக்கின் மகன் யோசுவாவும் விளங்கினார். அவர்கள் தங்கள் காலத்தில் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டினார்கள்: என்றுமுள மாட்சிக்கென நிறுவப்பட்ட திருக்கோவிலை ஆண்டவருக்கு எழுப்பினார்கள்.
13 நெகேமியாவின் நினைவும் பெருமைக்குரியது. இடிந்து விழுந்த மதில்களை அவர் நமக்காக எழுப்பினார்: கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் பொருத்தினார்: நம் இல்லங்களை மீண்டும் கட்டினார்.
14 ஏனோக்குபோன்ற எவரும் மண்ணுலகின்மீது படைக்கப்படவில்லை. அவர் நிலத்திலிருந்து மேலே எடுத்துக் கொள்ளப்பெற்றார்.
15 யோசேப்பைப் போன்றவர் எவரும் பிறந்ததில்லை: அவர் சகோதரர்களின் தலைவராகவும் மக்களின் ஊன்றுகோலாகவும் திகழ்ந்தார். அவருடைய எலும்புகளும் காக்கப்பட்டன.
16 சேம், சேத்து ஆகியோர் மனிதருக்குள் மாட்சிமைப்படுத்தப்பெற்றனர். படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுள்ளும் ஆதாம் சிறந்து விளங்குகிறார்.

Holydivine