Sirach - Chapter 24
Holy Bible

1 ஞானம் தன்னையே புகழ்ந்து கொள்கிறது: தன் மக்கள் நடுவே தனது மாட்சியை எடுத்துரைக்கிறது.
2 உன்னத இறைவனின் மன்றத்தில் திருவாய் மலர்ந்து பேசுகிறது: அவரது படைத்திரள்முன்பாக தமது மாட்சியை எடுத்துரைக்கிறது.
3 உன்னதரின் வாயினின்று நான் வெளிவந்தேன்: மூடுபனிபோன்று மண்ணுலகை மூடிக்கொண்டேன்.
4 உயர் வானங்களில் நான் வாழ்ந்து வந்தேன்: முகில்தூணில் அரியணை கொண்டிருந்தேன்:
5 வானத்தையெல்லாம் நானே தனியாகச் சுற்றிவந்தேன்: கீழுலகின் ஆழத்தை ஊடுருவிச் சென்றேன்.
6 கடலின் அலைகள்மேலும் மணணுலகெங்கும் மக்கள் அனைவர் மீதும் நாடுகள் மீதும் ஆட்சி செலுத்தினேன்.
7 இவை அனைத்தின் நடுவே ஓய்வு கொள்ள ஓர் இடத்தை நான் விரும்பினேன்: யாருடைய உரிமைச் சொத்தில் நான் தங்குவேன்?
8 பின், அனைத்தையும் படைத்தவர் எனக்குக் கட்டளையிட்டார்: என்னைப் படைத்தவர் என் கூடாரம் இருக்கவேண்டிய இடத்தை முடிவு செய்தார். யாக்கோபில் தங்கி வாழ்: இஸ்ரயேலில் உன் உரிமைச்சொத்தைக் காண்பாய் என்று உரைத்தார்.
9 காலத்திற்கு முன்பே தொடக்கத்தில் அவர் என்னைப் படைத்தார். எக்காலமும் நான் வாழ்ந்திடுவேன்.
10 தூய கூடாரத்தில் அவர் திருமுன் பணிசெய்தேன்: இதனால் சீயோனில் உறுதிப்படுத்தப்பெற்றேன்.
11 இவ்வாறு அந்த அன்புக்குரிய நகரில் அவர் எனக்கு ஓய்விடம் அளித்தார்: எருசலேமில் எனக்கு அதிகாரம் இருந்தது.
12 ஆண்டவரின் உரிமைச்சொத்தாகிய பங்கில் மாட்சிமைப்படுத்தப் பெற்ற மக்கள் நடுவே நான் வேரூன்றினேன்.
13 லெபனோனின் கேதுருமரம் போலவும் எர்மோன் மலையின் சைப்பிரசுமரம் போலவும் நான் ஓங்கி வளர்ந்தேன்.
14 எங்கேதி ஊரின் பேரீச்சமரம் போலவும். எரிகோவின் ரோசாச்செடி போலவும் சமவெளியின் அழகான ஒலிவமரம் போலவும், பிளாத்தான்மரம் போலவும் நான் ஓங்கி வளர்ந்தேன்.
15 இலவங்கப் பட்டைபோலும், பரிமளத்தைலம் போலும் மணம் கமழ்ந்தேன்: சிறந்த வெள்ளைப்போளம்போல நறுமணம் தந்தேன்: கல்பானும், ஓனிக்சா எனும் நறுமணப் பொடிகள்போலும், உடன்படிக்கைக் கூடாரத்தில் எழுப்பப்படும் புகைபோலும் நறுமணம் வீசினேன்.
16 தேவதாருமரத்தைப்போல் என் கிளைகளைப் பரப்பினேன்: என் கிளைகள் மாட்சியும் அருளும் நிறைந்தவை.
17 நான் அழகு அளித்திடும் திராட்சைக் கொடி, மாட்சி, செல்வத்தினுடைய கனிகள், என் மலர்கள்.
18 நானே தூய அன்பு, அச்சம், அறிவு, தூய நம்பிக்கை ஆகியவற்றின் அன்னை. கடவுளால் குறிக்கப்பட்ட என் பிள்ளைமேல் நான் பொழியப்படுவேன்.
19 என்னை விரும்புகிற அனைவரும் என்னிடம் வாருங்கள்: என் கனிகளை வயிறார உண்ணுங்கள்.
20 என்னைப்பற்றிய நினைவு தேனினும் இனியது: என் உரிமைச்சொத்து தேனடையினும் மேலானது.
21 என்னை உண்பவர்கள் மேலும் பசி கொள்வார்கள்: என்னைக் குடிப்பவர்கள் மேலும் தாகம் கொள்வார்கள்.
22 எனக்குக் கீழ்ப்படிவோர் இகழ்ச்சி அடையார்: என்னோடு சேர்ந்து உழைப்போர் பாவம் செய்யார்.
23 இவ்வாறு ஞானம் கூறிய அனைத்தும் உன்னத இறைவனின் உடன்படிக்கை நூலாகும். மோசே நமக்குக் கட்டளையிட்ட, யாக்கோபின் சபைகளுக்கு உரிமைச் சொத்தாக வழங்கப்பெற்ற திருச்சட்டமாகும்.
24 [ஆண்டவரில் வலிமை கொள்வதை விட்டுவிடாதே. அவர் உனக்கு வலுவூட்டும் பொருட்டு அவரைப் பற்றிக்கொள். எல்லாம் வல்ல ஆண்டவர் ஒருவரே கடவுள்: அவரைத்தவிர வேறு மீட்பர் இல்லை.]
25 பீசோன் ஆறுபோன்றும் அறுவடைக்காலத்தில் திக்ரீசு ஆறு போன்றும் திருச்சட்டம் ஞானத்தால் நிறைந்து வழிகிறது.
26 யூப்பிரத்தீசு ஆறுபோல, அறுவடைக்காலத்தில் பெருக்கெடுத்தோடும் யோர்தான் ஆறுபோல, அது அறிவுக்கூர்மையால் நிரம்பி வழிகிறது.
27 திராட்சை அறுவடைக் காலத்தில் நைல் ஆறு வழிந்தோடுவதைப் போல் அது நற்பயிற்சியைப் பெருக்கெடுத்து ஓடச்செய்யும்.
28 முதல் மனிதன் ஞானத்தை முழுமையாக அறியவில்லை: இறுதி மனிதனும் அதன் ஆழத்தைக் கண்டானில்லை. 
29 ஞானத்தின் எண்ணங்கள் கடலினும் பரந்தவை: அதன் அறிவுரைகள் படுகுழியை விட ஆழமானவை.
30 நான் ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் போன்றவன்: தோட்டத்தில் ஓடிப் பாயும் வாய்க்கால் போன்றவன்.
31 எனது தோட்டத்துக்கு நான் நீர் பாய்ச்சுவேன்: எனது பூங்காவை நீரால் நிரப்புவேன் என்று சொல்லிக் கொண்டேன். உடனே என் கால்வாய் ஆறாக மாறிற்று:
32 நான் நற்பயிற்சியை விடியல் போன்று ஒளிரச் செய்வேன்: அது தொலைவிலும் தெரியும்படி செய்வேன்.
33 போதனைகள் இறைவாக்குப் போன்று பொழிவேன்: அதைக் காலங்களுக்கெல்லாம் விட்டுச் செல்வேன்.
34 எனக்காக மட்டும் உழைக்கவில்லை: ஞானத்தைத் தேடுவோர் அனைவருக்காகவும் உழைத்தேன் என அறிந்து கொள்ளுங்கள்.

Holydivine