Sirach - Chapter 40
Holy Bible

1 எல்லா மனிதரும் கடும் உழைப்புக்கே படைக்கப்பட்டிருக்கின்றனர்: தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த நாள்முதல் நிலம் என்னும் தாயிடம் எல்லாரும் அடக்கமாகும் நாள்வரை ஆதாமின் மக்கள்மீது வலிய நுகம் சுமத்தப்பட்டிருக்கிறது.
2 எதிர்காலத்தையும் இறுதி நாளையையும் பற்றிய எண்ணங்கள் மனிதருடைய சிந்தனையைக் குழப்பி, உள்ளத்தை அச்சுறுத்துகின்றன.
3 மேன்மைமிகு அரியணையில் அமர்ந்திருப்போர்முதல் புழுதியிலும் சாம்பலிலும் உழலத் தாழ்த்தப்பட்டோர்வரை,
4 கருஞ்சிவப்பு உடையும் பொன்முடியும் அணிந்தோர்முதல் முரட்டுத் துணி உடுத்தியோர்வரை எல்லாருக்கும் சீற்றம், பொறாமை, கலக்கம், குழப்பம், சாவுபற்றிய அச்சம், வெகுளி, சண்டை ஆகியவை உண்டு.
5 கட்டிலின்மீது ஓய்வு கொள்ளும் நேரத்தில், இரவு நேரத் தூக்கம் மனிதரின் அறிவைக் குழப்புகிறது.
6 சிறிது நேர ஓய்வும் ஓய்வாகத் தோன்றுவதில்லை: பகலில் நேரிடுவதுபோன்று உறக்கத்திலும் அவர்கள் கலக்கம் அடைகிறார்கள். போர்க்களத்திலிருந்து தப்பிவந்தவர்போலத் தீயக் கனவுகளால் உள்ளத்தில் குழப்பம் அடைகிறார்கள்.
7 தாங்கள் பாதுகாப்பு அடையும் காலத்தில் விழித்துக் கொள்கிறார்கள்: தாங்கள் அஞ்சியிருந்ததற்குத் தகுந்த காரணமில்லையே என வியப்படைகிறார்கள்.
8 மனிதர் முதல் விலங்குகள் வரை எல்லா உயிரினங்களுக்கும் சாவு, படுகொலை, சண்டை, வாள், பேரிடர், பஞ்சம்,
9 அழிவு, நோவு ஆகியவை உண்டு. பாவிகளுக்கோ இவை ஏழு மடங்கு மிகுதியாகும்.
10 இவையெல்லாம் நெறிகெட்டவர்களுக்கெனப் படைக்கப்பட்டவை: அவர்களை முன்னிட்டே வெள்ளப் பெருக்கும் உண்டாயிற்று.
11 மண்ணிலிருந்து வந்த யாவும் மண்ணுக்கே திரும்பும்: தண்ணீரிலிருந்து வந்த யாவும் கடலுக்கே திரும்பும்.
12 எல்லாக் கையூட்டும் அநீதியம் அழித்தொழிக்கப்படும்: பற்றுறுதி என்றென்றும் நிலைத்திடும்.
13 அநீதருடைய செல்வம் ஆற்றைப்போல வற்றிப்போகும்: மழையின்போது விழும் பேரிடியைப்போல மறைந்து போகும்.
14 வள்ளன்மை கொண்டோர் மகிழ்ச்சி அடைவர்: கட்டளைகளை மீறுவோர் முடிவில் அழிவர்.
15 இறைப்பற்றில்லாதோரின் வழிமரபினர் மிகுதியாகக் கிளைவிடார்: இவர்கள் பாறையின் உச்சியில் உள்ள தூய்மையற்ற வேர்கள்.
16 எல்லா நீர்நிலைகளிலும் ஆற்றங்கரைகளிலும் வளரும் நாணல், புல் வகைகளுக்கு முன்னரே பிடுங்கி எறியப்படும்.
17 இரக்கம் என்பது நலமிகு பூங்காபோன்றது: தருமம் என்றும் நிலைக்கும். 
18 தன்னிறைவு கொண்டோர், தொழில் புரிவோர் ஆகியோருடைய வாழ்க்கை இனிமையானது: புதையலைக் கண்டுபிடிப்போருடைய வாழ்க்கை அவர்கள் இருவரின் வாழ்க்கையினும் இனிமையானது. 
19 பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும் நகர்களைக் கட்டியெழுப்புவதும் ஒருவருடைய பெயரை நிலைக்கச் செய்கின்றன. மாசற்ற மனைவி இந்த இரண்டினும் மேலாக மதிக்கப்படுவாள். 
20 திராட்சை இரசமும் இன்னிசையும் இதயத்தை மகிழ்விக்கின்றன. ஞானத்தின்மேல் கொண்ட அன்பு இவ்விரண்டினும் மேலானது. 
21 குழலும் யாழும் இன்னிசை எழுப்பிகின்றன: இனிய சொல் இவ்விரண்டினும் சிறந்தது. 
22 வனப்பையும் அழகையும் கண் நாடுகிறது: விளைநிலத்தின் பசுமை இவ்விரண்டினும் உயர்ந்தது. 
23 நண்பரும் தோழரும் எப்போதும் சந்திக்கத் தக்கவர்கள்: தன் கணவருடன் வாழும் மனைவி இவ்விருவரினும் மேலானவள். 
24 உடன்பிறந்தோரும் உதவி செய்வோரும் துன்பத்திலிருந்து விடுவிப்பர்: தருமம் செய்தல் இவ்விருவரினும் சிறந்தது. 
25 பொன்னும் வெள்ளியும் கால்களுக்கு உறுதி தரும்: அறிவுரை இவ்விரண்டினும் மேலாக மதிக்கப்பெறும். 
26 செல்வமும் வலிமையும் உள்ளத்தை உயர்த்துகின்றன: ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இவ்விரண்டினும் மேலானது. ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தில் எக்குறையுமில்லை: அதைக் கொண்டிருக்கும்போது உதவி தேடத் தேவையில்லை. 
27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் நலமிகு பூங்காபோன்றது: அது எல்லா மாட்சியையும்விடப் பாதுகாப்பு அளிக்கிறது. 
28 குழந்தாய், பிச்சையெடுத்து வாழாதே: பிச்சையெடுப்பதினும் சாவதே மேல்.
29 பிறரிடமிருந்து உணவை எதிர்பார்க்கிற மனிதரின் வாழ்க்கையை வாழ்க்கை எனச் சொல்லமுடியாது: பிறருடைய உணவால் ஒருவர் தம் வாழ்வை மாசுபடுத்துகிறார்: அறிவாற்றல் படைத்தோரும் நற்பயிற்சி பெற்றோரும் இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வர்.
30 பிச்சையெடுத்தல் வெட்கம் இல்லாதவரின் வாயில் இனிக்கும்: ஆனால், அது வயிற்றில் நெருப்பாய்ப் பற்றியெரியும்.

Holydivine