Sirach - Chapter 22
Holy Bible

1 சோம்பேறிகள் மாசுபடிந்த கல் போன்றவர்கள்: அவர்களது இழிவு கண்டு எல்லோரும் எள்ளி நகையாடுவர்.
2 சோம்பேறிகள் குப்பைமேட்டுக்கு ஒப்பானவர்கள்: அதைத் தொடுவோர் அனைவரும் கையை உதறித் தட்டிவிடுவர்.
3 நற்பயிற்சி பெறாத மகனைப் பெற்ற தந்தை இகழ்ச்சி அடைவார்: அத்தகைய மகளோ அவருக்கு இழிவைக் கொணர்வாள்.
4 அறிவுத்திறன் கொண்ட மகள் கணவரை அடைவாள்: இழிவாக நடப்பவள் தன் தந்தைக்கு வருத்தம் ஏற்படுத்துவாள்.
5 நாணமற்ற மகள் தன் தந்தைக்கும் கணவருக்கும் இகழ்ச்சியைக் கொணர்வாள்: அவ்விருவரும் அவளை இகழ்வர்.
6 நேரத்திற்குப் பொருந்தாத பேச்சு புலம்பவேண்டிய நேரத்தில் இன்னிசை எழுப்புவதைப் போன்றது: கண்டிப்பும் நற்பயிற்சியும் எக்காலத்திலும் ஞானத்தைக் கொடுக்கும்.
7 [நல்வாழ்க்கை வாழப் பயிற்றவிக்கப் பெற்ற மக்கள் தங்கள் பெற்றோரின் இழிபிறப்பை மறைத்துவிடுகிறார்கள்.
8 ஒழுக்கத்தில் வளர்க்கப்படாமல் இறுமாப்பும் பிடிவாதமும் கொண்ட மக்கள் தங்களின் குலப்பெருமைக்கு அவமானம் கொணர்வார்கள்.]
9 மூடருக்குக் கல்வியறிவு புகட்டுவோர் உடைந்துவிட்ட பானை ஓடுகளை ஒட்டுவோருக்கு ஒப்பாவர்: ஆழ்ந்த தூக்கத்தில் இருப்போரைத் தட்டி எழுப்புவோர் போலாவர்.
10 மூடரோடு பேசுவோர் தூக்கக்கலக்கத்தில் உள்ளவரோடு பேசுவோருக்கு ஒப்பாவர்: பேச்சின் முடிவில், அது என்ன? என மூடர் கேட்பர்.
11 இறந்தோருக்காக அழு: ஒளி அவர்களைவிட்டு மறைந்து விட்டது. மூடருக்காக அழு: அறிவுக்கூர்மை அவர்களை விட்டு அகன்றுவிட்டது. இறந்தோருக்காக அமைதியாக அழு: அவர்கள் அமைதியில் துயில் கொள்கிறார்கள். மூடரின் வாழ்வு சாவைவிடக் கொடிது.
12 இறந்தோருக்காக ஏழு நாள் துயரம் கொண்டாடப்படும்: மூடருக்காகவும் இறைப்பற்றில்லாதோருக்காகவும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துயரம் கொண்டாடப்படும்.
13 அறிவிலிகளோடு மிகுதியாய்ப் பேசாதே: மதியீனரிடம் செல்லாதே. உனக்குத் தொல்லை ஏற்படாதவாறு எச்சரிக்கையாய் இரு: அவர்களோடு தொடர்பு கொண்டால் நீயும் பாழாவாய். அவர்களை விட்டு விலகிப்போ: அப்போது ஓய்வு காண்பாய்: அவர்களின் அறிவின்மையால் சோர்வுறமாட்டாய்.
14 ஈயத்தைவிடக் கனமானது எது? மூடர் என்பதைவிட அவர்களுக்கு வேறு என்ன பெயர் பொருந்தும்?
15 மதி கெட்டோரைப் பொறுத்துக் கொள்வதைவிட மணல், உப்பு, இரும்புத் துண்டு ஆகியவற்றைச் சுமப்பது எளிது.
16 கட்டடத்தில் இணைக்கப்பட்ட மர உத்திரங்களை நிலநடுக்கத்தால்கூட அசைக்க முடியாது. ஆழ்ந்த சிந்தனையில் முதிர்ச்சிபெற்ற உள்ளம் கொண்டவர்கள் எந்தக் குழப்பத்திலும் தளர்ச்சியுற மாட்டார்கள்.
17 அறிவுக்கூர்மை கொண்ட சிந்தனையில் அமைந்த உள்ளம் சுவரை அழகு செய்யும் பூச்சுப் போன்றது. 
18 உயர்ந்த இடத்தில் அமைக்கப்பட்ட வேலி காற்றை எதிர்த்து நிற்காது: மூடத்தனமான எண்ணங்கள் கொண்ட கோழை உள்ளம் எவ்வகை அச்சுறத்தல்களையும் எதிர்த்து நிற்காது.
19 கண்ணைக் குத்திக்கொள்வோர் கண்ணீரை வரவழைக்கின்றனர்: உள்ளத்தைக் குத்திக்கொள்வோர் உணர்ச்சிகளை வெளிக்காட்டுகின்றனர்.
20 பறவைகள் கல்லெறிவோர் அவற்றை அச்சுறுத்தி ஓட வைக்கின்றனர்: நண்பர்களைப் பழிப்போர் நட்பை முறித்துவிடுகின்றனர்.
21 உன் நண்பருக்கு எதிராக வாளை நீ உருவியிருந்தபோதிலும் நம்பிக்கை இழந்துவிடாதே. மீண்டும் நட்பு ஏற்பட வழி உண்டு.
22 உன் நண்பருக்கு எதிராகப் பேசியிருந்தாலும் அஞ்சாதே. நல்லிணக்கத்துக்கு வழி உண்டு. இகழ்ச்சி, இறுமாப்பு, இரகசியங்களை வெளியிடல், வஞ்சகத்தாக்குதல் ஆகியவற்றினின்று எந்த நண்பருமே ஓடிவிடுவர்.
23 அடுத்திருப்பவர்களது வறுமையில் அவர்களது நம்பிக்கையைப் பெறு: அவர்களது வளமையை முழுமையாய்ப் பகிர்ந்து கொள்வாய். துன்பவேளையிலும் அவர்களைச் சார்ந்திரு: அதனால் அவர்களின் உரிமைச்சொத்தில் நீயும் பங்கு கொள்வாய்.
24 சூளையிலிருந்து நெருப்புக்குமுன் ஆவியும் புகையும் வெளிவருகின்றன. கொலைக்கு முன்னே இழிசொல் இடம் பெறும்.
25 நண்பருக்குப் பாதுகாப்பு அளிக்க நான் வெட்கப்படமாட்டேன்: அவரது பார்வையினின்று என்னை மறைத்துக் கொள்ளவும் மாட்டேன்.
26 அவர்களால் எனக்குத் தீங்கு நேர்ந்தால், அதைக் கேள்வியுறுவோர் அனைவரும் அவர்களிடம் எச்சரிக்கையாய் இருப்பர்.
27 நான் வீழ்ச்சியுறாதிருக்கவும் என் நாவே என்னை அழிக்காதிருக்கவும் என் வாயைக் காவல் செயபவர் யார்? என் உதடுகளை நுண்ணறிவு எனும் முத்திரையிட்டு மூடுபவர் யார்?

Holydivine