Sirach - Chapter 41
Holy Bible

1 ஓ, சாவே! தம் உடைமைகளோடு அமைதியாய் வாழ்வோருக்கும் எவ்வகைக் கவலையுமின்றி எல்லாவற்றிலும் வளமை அடைவோருக்கும் நல்ல உணவைச் சுவைத்து மகிழ இன்னும் வலிமையுள்ளோருக்கும் உன் நினைவு எத்துணைக் கசப்பாய் உள்ளது!
2 ஆனால், ஓ, சாவே! வறுமையுற்யோருக்கும் வலிமை குன்றியோருக்கும் முதியோருக்கும் பொறுமை இழந்தோருக்கும் உன் முடிவு வரவேற்கத்தக்கது!
3 இறப்பின் தீர்ப்புக்கு அஞ்சாதே! உனக்குமுன் இருந்தவர்களையும் உனக்குப்பின் வரப்போகிறவர்களையும் எண்ணிப்பார்.
4 இந்தத் தீர்ப்பை எல்லா மனிதருக்கும் ஆண்டவர் விதித்துள்ளார். பின்பு ஏன் உன்னத இறைவனின் விருப்பத்தை ஏற்க மறுக்கிறாய்? நீ வாழ்ந்தது பத்து ஆண்டா, நூறு ஆண்டா, ஆயிரம் ஆண்டா என்பதுபற்றிப் பாதாளத்தில் கேள்வி எழாது. 
5 பாவிகளின் மக்கள் அருவருப்புக்குரிய மக்களாவர்: இறைப்பற்றிலாதோரின் பதுங்கிடத்தில் அவர்கள் கூடுவர்.
6 பாவிகளுடைய மக்களின் உரிமைச்சொத்து அழிந்துபோகும்: அவர்களுடைய வழிமரபில் இகழ்ச்சியே நிலைக்கும்.
7 இறைப்பற்றில்லாத தந்தையைப் பற்றி மக்கள் முறையிடுவார்கள்: அவர்கள் அவரால் இகழ்ச்சி அடைவார்கள்.
8 இறைப்பற்றில்லாதவர்களே, ஐயோ, உங்களுக்குக் கேடு வரும்! உன்னத இறைவனின் திருச்சட்டத்தைக் கைவிட்டவர்களே, ஐயோ, உங்களுக்குக் கேடு வரும்!
9 நீங்கள் பிறந்தபோது சாபத்திற்குப் பிறந்தீர்கள்: நீங்கள் சாகும்போது சாபமே உங்கள் பங்காகும்.
10 மண்ணிலிருந்து வந்ததெல்லாம் மண்ணுக்கே திரும்பும்: இறைப்பற்றில்லாதோறும் சாபத்திலிருந்து அழிவுக்குச் செல்வர்.
11 மனிதர் தங்களது உடலைப் பற்றியே புலம்புவர். பாவிகளுடைய கெட்ட பெயர் துடைக்கப்படும்.
12 உன் பெயரைப்பற்றி அக்கறை கொள்: ஆயிரம் பெரிய பொற் புதையல்களை விட உனக்கு அது நிலைத்து நிற்கும்.
13 நல்வாழ்க்கை சில நாள்களே நீடிக்கும்: நற்பெயர் என்றென்றும் நிலைக்கும்.
14 குழந்தைகளே, நற்பயிற்சியை அமைதியாய்க் கடைப்பிடியுங்கள். மறைக்கப்பட்ட ஞானம், காணப்படாத புதையல் இவை இரண்டாலும் என்ன பயன்?
15 தம் ஞானத்தை மறைக்கும் மனிதரைவிடத் தம் மடமையை மறைக்கும் மானிடர் சிறந்தோர்.
16 ஆகவே எந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்: சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல: எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது.
17 உங்கள் தாய் தந்தையர் முன்னிலையில் கெட்ட நடத்தைபற்றி நாணம் கொள்ளுங்கள்: ஆட்சியாளர்முன்னும் வலியோர் முன்னும் பொய்யைப் பற்றி வெட்கப்படுங்கள்.
18 நடுவர்முன்னும் ஆளுநர் முன்னும் குற்றத்தைப் பற்றியும், தொழுகைக் கூடத்திலும் மக்கள் முன்னும் சட்ட மீறல்பற்றியும்,
19 தோழர் முன்னும் நண்பர்முன்னும் அநீதிபற்றியும், நீங்கள் வாழ்கின்ற இடத்தில் திருட்டைப்பற்றியும்,
20 ஆணையையும் உடன்படிக்கையையும் முறித்தல்பற்றியும், உணவு மேசை மீது உன் முழங்கைகளை வைப்பதுபற்றியும், 
21 கொடுக்கும்போதும் வாங்கும்போதும் மதியாமை பற்றியும், வணக்கம் செலுத்துவோர்முன் அமைதி காத்தல் பற்றியும்,
22 விலைமாதரை நோக்குவதுபற்றியும், உறவினரின் விண்ணப்பத்தை புறக்கணிப்பது பற்றியும்,
23 அடுத்தவரின் பங்கையும் பரிசையும் பறித்துக்கொள்வதுபற்றியும், மணமான பெண்ணை உற்றுநோக்குவதுபற்றியும்
24 ஒருவருடைய பணிப் பெண்ணோடு தகாத பழக்கம் வைத்துக்கொள்வது பற்றியும், - அவளுடைய படுக்கையை நெருங்காதே -
25 நண்பர்களைத் திட்டுவதுபற்றியும், - அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கியபின் அவர்களை இகழாதே -
26 நீங்கள் கேள்வியுற்றதைத் திருப்பிச் சொல்வதுபற்றியும் இரகசியங்களை வெளிப்படுத்துவது பற்றியும் வெட்கப்படுங்கள்.
27 அப்போது நீங்கள் உண்மையான நாணம் கொள்வீர்கள்: எல்லா மனிதரின் பரிவும் உங்களுக்குக் கிடைக்கும்.

Holydivine