Sirach - Chapter 21
Holy Bible

1 குழந்தாய், பாவம் செய்துவிட்டாயா? இனிமேல் செய்யாதே: உன் பழைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேள்.
2 பாம்பைக் கண்டு ஓடுவதைப்போலப் பாவத்தைவிட்டு ஓடிவிடு: நீ பாவத்தின் அருகில் சென்றால் அது உன்னைக் கடிக்கும்: அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள் போன்றவை: அவை மனிதரின் உயிரைப் போக்கி விடும்.
3 நெறிகேடுகள் எல்லாமே இருமுனைக் கூர்வாள் போன்றவை: அதன் காயங்கள் ஆறமாட்டா.
4 திகிலும் இறுமாப்பும் செல்வங்களைப் பாழாக்கும்: செருக்குற்றோரின் வீடு பாழாகும்.
5 ஏழைகளின் வாயினின்று எழும் விண்ணப்பம் கடவுளின் செவிகளை எட்டும்: அவரது நீதித் தீர்ப்பு விரைவில் வரும்.
6 கடிந்துரையை வெறுப்போர் பாவிகளின் வழியில் நடக்கின்றனர்: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மனம் வருந்துவர்.
7 நாவன்மை படைத்தோர்பற்றிய பேச்சு தொலைவிலும் பரவும்: ஆனால் அவர்கள் நாத்தவறும்போது அறிவுள்ளோர் அதைக் கண்டுகொள்வர்.
8 மற்றவர்களின் பணத்தைக் கொண்டு தங்கள் வீட்டைக் கட்டுவோர் தங்கள் கல்லறைக்கு வேண்டிய கற்களைத் தாங்களே சேர்த்து வைப்போர் போன்றவர்கள். 
9 நெறிகெட்டோரின் கூட்டம் சணல் குப்பை போன்றது: கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவர்களின் முடிவு.
10 பாவிகளின் பாதை வழவழுப்பான கற்களால் பாவப்பட்டுள்ளது: அதன் முடிவில் கீழுலகின் வாயில் உள்ளது.
11 திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்போர் தங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்துகின்றனர்: ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தின் நிறைவே ஞானம்.
12 திறமை இல்லாதோருக்குக் கல்வியறிவு புகட்ட முடியாது: கசப்பை விளைவிக்கும் ஒருவகைத் திறமையும் உண்டு.
13 ஞானிகளின் அறிவு வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடும்: அவர்களின் அறிவுரை வாழ்வளிக்கும் நீரூற்றுக்கு நிகராகும்.
14 மூடரின் உள்ளம் ஓட்டைக் கலன் போன்றது: அதில் எவ்வகை அறிவும் தங்கி நிற்காது.
15 அறிவாற்றல் பெற்றோர் ஞானம் நிறைந்த பேச்சைக் கேட்டுப் புகழ்வர்: அது வளம் பெறச் செய்வர். அப்பேச்சை ஒழுக்கம் கெட்டோர் கேட்க நேரிட்டால் அதை விரும்புவதில்லை: அதை உள்ளத்திலிருந்தும் விரட்டிவிடுவர்.
16 மூடரின் உரை பயணத்தின் போது எடுத்துச் செல்லும் பெருஞ்சுமை போன்றது: அறிவுக்கூர்மை கொண்டோரின் பேச்சு இன்பம் தருகின்றது.
17 அறிவுத்திறன் வாய்ந்தோரின் வாய்மொழிகளைச் சபை விரும்பித் தேடும்: அவர்களின் கருத்துகளை உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துப் பார்க்கும்.
18 மூடர்களுக்கு ஞானம் பாழடைந்த வீடு போன்றது: மதியீனர்களுக்கு அறிவு பொருளற்ற உரை போன்றது.
19 அறிவிலிகளுக்கு அளிக்கும் நற்பயிற்சி கால்விலங்கு போன்றது: வலக்கையில் மாட்டப்பட்ட தளை போன்றது.
20 மூடர்கள் சிரிக்கும்போது உரத்த குரல் எழுப்புவர்: அறிவில் சிறந்தோர் அமைதியாகப் புன்னகைப்பர்.
21 அறிவுத்திறன் கொண்டோருக்கு நற்பயிற்சி பொன் நகையாகும்: வலக்கையில் அணிந்த கைவளையாகும்.
22 மூடர்களின் கால்கள் மற்றவர்களின் வீட்டுக்குள் விரைகின்றன: பட்டறிவு பெற்றவர்களின் கால்களோ நுழையத் தயங்குகின்றன.
23 அறிவிலிகள் கதவு வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பார்கள்: நற்பயிற்சி பெற்றோர் வெளியே காத்திருப்பர்.
24 நற்பயிற்சி பெறாதோர் கதவு அருகே நின்று ஒற்றுக் கேட்பர்: அறிவுத்திறன் வாய்ந்தோர் அதை இகழ்ச்சியாகக் கொள்வர்.
25 அறிவற்றோர் எளிதாகப் பிதற்றுவர்: நுண்ணறிவு கொண்டோர் சொற்களை அளந்து பேசுவர். 
26 அறிவிலார் சிந்திக்குமுன் பேசுவர்: அறிஞர் பேசுமுன் சிந்திப்பர்.
27 இறைப்பற்றில்லாதோர் தங்கள் எதிரியைச் சபிக்கும்போது தங்களையே சபித்துக்கொள்வர்.
28 புறங்கூறுவோர் தங்களையே மாசுபடுத்திக்கொள்வர்: சுற்றுப்புறத்தார் அவர்களை வெறுப்பர்.

Holydivine