Sirach - Chapter 9
Holy Bible

1 உன் காதல் மனையாளைப் பார்த்துப் பொறாமைப்படாதே: உனக்கே தீங்கு விளைவிக்கும் தீய பழக்கங்களை அவளுக்குச் சொல்லிக்கொடாதே.
2 ஒரு பெண்ணுக்கு நீ அடிமையாகாதே: இல்லையேல், அவள் உன்னையே அடக்கியாள நேரிடும்.
3 நெறிகெட்டவளை அணுகிச் செல்லாதே: அவளது வலைக்குள் வீழ்ந்திடுவாய்.
4 பாடகியுடன் உனக்குத் தொடர்பு வேண்டாம். அவளது மயக்கும் வலையில் சிக்கிக்கொள்வாய்.
5 கன்னிப்பெண்ணை உற்று நோக்காதே: நீ தடுமாறி அவளால் தண்டனைக்கு ஆளாவாய்.
6 விலைமாதரிடம் உன் உள்ளத்தைப் பறிகொடாதே: உன் உரிமைச் சொத்தை நீ இழக்க நேரிடும்.
7 நகரின் தெருக்களில் அங்குமிங்கும் பராக்குப் பார்க்காதே: ஆள்நடமாட்டமற்ற இடங்களில் சுற்றித்திரியாதே.
8 அழகான பெண்ணிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்: பிறன் மனைவியின் அழகை உற்றுநோக்காதே. பெண்களின் அழகால் பலர் நெறி பிறழ்ந்துள்ளனர்: இதனால் காமம் தீயெனப் பற்றியெரியும்.
9 அடுத்தவருடைய மனைவியுடன் அமர்ந்து விருந்துண்ணாதே: அவளுடன் மது அருந்திக் களிக்காதே: உன் மனம் அவளிடம் மயங்கிவிடும்: முடிவில் உன் வாழ்வே வீழ்ச்சியுறும்.
10 உன் பழைய நண்பர்களைக் கைவிடாதே: புதிய நண்பர்கள் அவர்களுக்கு இணையாகமாட்டார்கள்: புதிய நண்பர்கள் புதிய மதுவைப் போன்றவர்கள். நாள் ஆக ஆகத்தான் அதை நீ சுவைத்துக் களிப்பாய்.
11 பாவிகளின் பெருமை கண்டு பொறாமை கொள்ளாதே: அவர்களுக்கு வரவிருக்கும் கேடு உனக்குத் தெரியாது.
12 இறைப்பற்றில்லாதவர்களுக்குப் பிடித்தமானவற்றில் இன்பம் கொள்ளாதே: அவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே தண்டனை பெறுவார்கள் என்பதை நினைவில் இருத்து.
13 கொலை செய்ய அதிகாரம் கொண்டவர்களை விட்டுத் தொலைவில் இரு: அப்பொழுது சாவுபற்றிய அச்சத்தால் நீ அலைக்கழிக்கப்படமாட்டாய்: அவர்களிடம் நீ சென்றால் தவறு ஏதும் செய்யாதே: செய்தால் உன் உயிரை அவர்கள் வாங்கிவிடுவார்கள். கண்ணிகள் நடுவே நீ நடக்கிறாய் என்றும் நகரின் கோட்டை கொத்தளங்களூடே செல்கிறாய் என்றும் அறிந்துகொள்.
14 அடுத்திருப்பவரை அறிய முடிந்தவரை முயறிசி செய்: ஞானிகளைக் கலந்து ஆலோசனை செய்.
15 அறிவுக்கூர்மை படைத்தவர்களோடு உரையாடு: உன் பேச்செல்லாம் உன்னத இறைவனின் திருச்சட்டம்பற்றி அமையட்டும்.
16 நீதிமான்கள் உன்னுடன் விருந்தாடட்டும்: ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உனது பெருமையாக இருக்கட்டும்.
17 கைவினைஞரின் திறமையைக் கொண்டே பொருள்கள் மதிப்புப் பெறுகின்றன: மக்கள் தலைவர் தம் பேச்சைக் கொண்டே ஞானியாய் மதிக்கப்படுகிறார்.
18 வாயாடியைக் கண்டு அவர்களின் நகரத்தார் அஞ்சுவர்: உளறு வாயரை ஊரார் வெறுப்பர்.

Holydivine