Judith - Chapter 5
Holy Bible

1 இஸ்ரயேல் மக்கள் போருக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்: மலைப்பாதைகளை மூடிவிட்டார்கள்: உயர்ந்த மலையுச்சிகளைக் காவலரண் செய்து வலிமைப்படுத்தியுள்ளார்கள்: சமவெளிகளில் வழித்தடைகளை அமைத்துள்ளார்கள் என்று அசீரியரின் படைத்தலைவன் ஒலோபெரினுக்குத் தெரிவிக்கப்பட்டது.
2 அப்பொழுது அவன் கடுஞ் சினமுற்றான்: மோவாபு நாட்டுத் தலைவர்கள், அம்மோன் நாட்டுப் படைத் தலைவர்கள், கடலோராப் பகுதிகளின் ஆளுநர்கள் ஆகிய அனைவரையும் அழைத்தான்.
3 கானான் நாட்டு மக்களே, எனக்கு மறுமொழி கூறுங்கள்: மலைநாட்டில் வாழும் இந்த மக்கள் யார்? இவர்கள் குடியிருக்கும் நகர்கள் யாவை? இவர்களுடைய படைவீரர்களின் எண்ணிக்கை என்ன? இவர்களுடைய ஆற்றலும் வலிமையும் எதில் அடங்கும்? இவர்களின் மன்னர் யார்? இவர்களுடைய படைத் தலைவன் யார்?
4 மேற்கு நாடுகளில் குடியிருக்கும் எல்லா மக்கள் நடுவிலும் இவர்கள் மட்டும் வந்து என்னைச் சந்திக்க மறுத்தது ஏன்? என்று அவர்களை வினவினான்.
5 அம்மோனியா யாவருக்கும் தலைவரான அக்கியோர் ஒலோபெரினிடம் பின்வருமாறு கூறினார்: "என் தலைவரே, உம் பணியாளனின் வாயினின்று வரும் சொல்லைக் கேளும். மலைநாட்டில் உமக்கு அருகே வாழ்பவர்களான இந்த மக்களைப்பற்றிய உண்மையை உமக்கு எடுத்துரைப்பேன். உம் பணியாளனின் வாயினின்று பொய் எதுவும் வராது.
6 இந்த மக்கள் கல்தேயரின் வழிமரபினர்.
7 கல்தேயா நாட்டில் வாழ்ந்த தங்கள் மூதாதையரின் தெய்வங்களை இவர்கள் வழிபட விரும்பாததால், ஒரு காலத்தில் மெசப்பொத்தாமியாவில் குடியேறினார்கள்.
8 அதாவது, தங்கள் மூதாதையரின் வழியை விட்டு விட்டு, தாங்கள் அறியவந்த கடவுளான விண்ணக இறைவனைத் தொழுதார்கள். இதனால், கல்தேயர் தங்கள் தெய்வங்களின் முன்னிலையினின்று இவர்களை விரட்டியடித்தபொழுது இவர்கள் மெசப் பொத்தாமியாவுக்குத் தப்பியோடி அங்கு நீண்டநாள் தங்கியிருந்தார்கள்.
9 பின்னர் தாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டுக் கானான் நாட்டுக்குச் செல்லுமாறு, அவர்களுடைய கடவுள் அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவ்வாறே அவர்கள் அங்குக் குடியேறி, பொன், வெள்ளி, பெருந்திரளான கால்நடைகள் ஆகியவற்றால் வளமையுற்றார்கள்.
10 கானான் நாடெங்கும் பஞ்சம் நிலவியபொழுது அவர்கள் எகிப்து நாட்டுக்குச் சென்றார்கள்: அங்கு உணவு வளம் நீடித்தவரை தங்கியிருந்தார்கள். அப்பொழுது அவர்களது இனம் எண்ண முடியாத அளவுக்குப் பல்கிப் பெருகியது.
11 ஆகையால், எகிப்து மன்னன் அவர்கள்மீது பகைமை கொண்டு, செங்கல் செய்யும் கடின வேலையை அவர்கள் மீது வஞ்சகமாய்ச் சுமத்தினான்: அவர்களைக் கொடுமைப்படுத்தி அடிமைகளாக்கினான்.
12 எனவே, அவர்கள் தங்கள் கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். அவரும் எகிப்து நாடு முழுவதையும் தீராக் கொள்ளைநோய்களால் தாக்கினார். ஆகையால், எகிப்தியர் அவர்களைத் தங்களிடமிருந்து விரட்டியடித்தனர்.
13 அப்பொழுது கடவுள் அவர்கள் கண்முன் செங்கடலை வறண்டுபோகச் செய்தார்.
14 அவர் சீனாய், காதேசு-பர்னேயா வழியாக அவர்களை நடத்திச் செல்ல, அவர்கள் பாலைநிலத்தில் வாழ்ந்த யாவரையும் விரட்டியடித்தார்கள்:
15 பின்னர் எமோரியரின் நாட்டில் குடியேறினார்கள்: தங்களின் வலிமையால் கெஸ்போனியர் யாவரையும் அழித்தொழித்தார்கள்: யோர்தான் ஆற்றைக் கடந்து, மலைநாடு முழுவதையும் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள்.
16 கானானியர், பெரிசியர், எபூசியர், செக்கேமியர் ஆகியோரையும் அங்கிருந்து துரத்திவிட்டு, அங்கே நீண்டநாள் வாழ்ந்து வந்தார்கள். 
17 அவர்கள் தங்கள் கடவுள் முன்னிலையில் பாவம் செய்யாதவரையில் வளமுடன் வாழ்ந்தார்கள்: ஏனெனில், அநீதியை வெறுக்கும் கடவுள் அவர்கள் நடுவே இருக்கிறார்.
18 ஆனால், அவர்களுக்கென்று அவர் வகுத்துக் கொடுத்திருந்த வழியைவிட்டு விலகிச் சென்றபோது அவர்கள் பல போர்களால் பெரிதும் அழிந்தார்கள்: அயல்நாட்டுக்குக் கைதிகளாய்க் கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களுடைய கடவுளின் கோவில் தரைமட்டமானது. அவர்களின் நகர்களைப் பகைவர்கள் கைப்பற்றினார்கள்.
19 ஆனால், இப்பொழுது அவர்கள் தங்கள் கடவுளிடம் மனந்திரும்பி வந்துள்ளார்கள்: தாங்கள் சிதறடிக்கப்பட்ட இடங்களிலிருந்து திரும்பி வந்துள்ளார்கள்: தங்களது திருவிடம் அமைந்துள்ள எருசலேமை மீண்டும் உரிமையாக்கிக் கொண்டுள்ளார்கள்: பாழடைந்து கிடந்த மலைநாட்டில் மீண்டும் குடியேறியுள்ளார்கள்.
20 எனவே, தலைவர் பெருமானே, இப்போது இந்த மக்களிடம் தவறு ஏதேனும் காணப்பட்டால், இவர்கள் தங்களின் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், இவர்கள் செய்த பாவத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியுமானால், நாம் புறப்பட்டுச் சென்று இவர்களைப் போரில் முறியடிக்கலாம்.
21 ஆனால், இந்த இனத்தாரிடம் குற்றம் ஒன்றும் இல்லையானால், என் தலைவரே, இவர்களைத் தாக்காது விட்டுவிடும்: இல்லையெனில் இவர்களின் கடவுளாகிய ஆண்டவர் இவர்கள் சார்பாக இருந்து, இவர்களைப் பாதுகாக்க, நாம் அனைத்துலகின் பழிப்புக்கும் உள்ளாவோம்.
22 அக்கியோர் பேசி முடித்தவுடன் கூடாரத்தைச் சூழ்ந்து நின்று மக்கள் எல்லாரும் முறுமுறுத்தார்கள். ஒலோபெரினின் அலுவலர்களும் கடலோரத்திலும் மோவாபிலும் வாழ்ந்தோர் யாவரும், அக்கியோரைக் கொன்று போடுங்கள்.
23 இஸ்ரயேலருக்கு நாம் அஞ்சத் தேவையில்லை: ஏனெனில், அம்மக்கள் கடுமையாய்ப் போரிடும் வலிமையோ ஆற்றலோ அற்றவர்கள்.
24 ஆகவே, ஒலோபெரின், எம் தலைவரே, நாம் மேலே முன்னேறிச் செல்வோம். உமது பெரும் படைக்கு அவர்கள் இரையாவார்கள் என்று கூறினர்.

Holydivine