Zechariah - Chapter 2
Holy Bible

1 நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நுலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன்.
2 எங்கே போகிறீர்? என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன் என்றார்.
3 என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு தூதர் அவருக்கு எதிரே வந்தார்.
4 வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஒடிச்சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப்போல் இருக்கும்!
5 ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்: அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன், என்கிறார் ஆண்டவர்.
6 எழுந்திருங்கள், வடநாட்டிலிருந்து ஓடிவாருங்கள், என்கிறார் ஆண்டவர்: உலகின் நான்கு திசைகளுக்கும் உங்களைச் சிதறடித்தவர் நானே, என்கிறார் ஆண்டவர்.
7 பாபிலோனில் குடியிருக்கும் சீயோனே! தப்பிப் பிழைத்துக்கொள்.
8 என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து, 'உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்' என்கிறார்.
9 'இதோ, அவர்களுக்கு எதிராக என் கையை ஓங்கப் போகிறேன்: தங்களுக்குப் பணிவிடை செய்தவர்களுக்கே கொள்ளைப்பொருள் ஆவார்கள்: அப்பொழுது நீங்கள், என்னை அனுப்பியது படைகளின் ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள்.
10 மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி: இதோ நான் வருகிறேன்: வந்து உன் நடுவில் குடிகொள்வேன் என்கிறார் ஆண்டவர்.
11 அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்; நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
12 ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார்.
13 மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாயிருங்கள்: ஏனெனில் அவர்தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.

Holydivine