Baruch - Chapter 4
Holy Bible

1 ஞானமே கடவுளுடைய கட்டளைகள் அடங்கிய நூல்: என்றும் நிலைக்கக்கூடிய திருச்சட்டம். அதைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வாழ்வர்: அதைக் கைவிடுவோர் உயிரிழப்பர்.
2 யாக்கோபே, திரும்பி வா: ஞானத்தை ஏற்றுக்கொள்: அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட,
3 உனது மாட்சியை மற்றவருக்கு விட்டுக்கொடாதே: உன் சிறப்புரிமைகளை வேற்று மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே.
4 இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்: ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்.
5 இஸ்ரயேலின் புகழை நிலைநாட்டும் என் மக்களே, வீறுகொள்வீர்.
6 நீங்கள் வேற்றினத்தாரிடம் விற்கப்பட்டது உங்கள் அழிவிற்காக அன்று: நீங்கள் கடவுளுக்குச் சினமூட்டியதால்தான் பகைவரிடம் ஒப்படைக்கப்பட்டீர்கள்.
7 கடவுளை விடுத்துப் பேய்களுக்குப் பலியிட்டதால் உங்களைப் படைத்தவருக்குச் சினமூட்டினீர்கள்.
8 உங்களைப் பேணிக் காத்துவந்த என்றுமுள கடவுளை மறந்தீர்கள்: உங்களை ஊட்டிவளர்த்த எருசலேமை வருத்தினீர்கள்:
9 கடவுளின் சினம் உங்கள்மீது வரக்கண்டு எருசலேம் கூறியது: சீயோன் அண்டை நாட்டவரே, கேளுங்கள்: கடவுள் எனக்குப் பெருந்துயர் அனுப்பியுள்ளார்.
10 ஏனெனில் என்றுமுள்ளவர் என் புதல்வர், புதல்வியர் மீது சுமத்திய அடிமைத்தனத்தை நான் கண்டேன்.
11 மகிழ்ச்சியோடு நான் அவர்களைப் பேணி வளர்த்தேன்: ஆனால் அழுகையோடும் துயரத்தோடும் அனுப்பி வைத்தேன்.
12 நானோ கைம்பெண்: எல்லாராலும் கைவிடப்பட்டவள். என்பொருட்டு யாரும் மகிழ வேண்டாம்: என் மக்களின் பாவங்களை முன்னிட்டு நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன். ஏனெனில் அவர்கள் கடவுளின் சட்டத்தைவிட்டு விலகிச் சென்றார்கள்.
13 கடவுளுடைய நெறிமுறைகளை அவர்கள் அறிந்திலர்: அவருடைய கட்டளைகளின் வழியில் சென்றிலர்: நற்பயிற்சியின் நெறியில் அவர்தம் நீதியின்படி நடந்திலர்.
14 சீயோனின் அண்டை நாட்டார் கூடிவரட்டும்: என் புதல்வர், புதல்வியர்மீது என்றுமுள்ளவர் சுமத்திய அடிமைத் தனத்தை எண்ணிப்பார்க்கட்டும்.
15 ஏனெனில் அவர்களுக்கு எதிராய்த் தொலையிலிருந்து ஒரு நாட்டையும் வேற்று மொழி பேசும் இரக்கமற்ற மக்களினத்தையும் கடவுள் கொண்டு வந்தார். அவர்கள் முதியோரை மதிக்கவில்லை. சிறுவர்களுக்கு இரக்கங் காட்டவில்லை.
16 கைம்பெண்ணின் அன்பு மைந்தர்களைக் கடத்திச் சென்றார்கள்: புதல்வியரிடமிருந்து அவளைப் பிரித்து, தனிமையில் விட்டுச் சென்றார்கள்.
17 நானோ உங்களுக்கு எவ்வகையில் உதவ இயலும்?
18 இக்கேடுகளை உங்களுக்கு வருவித்தவரால்தான் உங்கள் பகைவரிடமிருந்து உங்களை விடுவிக்க இயலும்.
19 போங்கள், என் மக்களே, உங்கள் வழியே போங்கள். நான் கைவிடப்பட்டவள்.
20 அமைதிக்குரிய ஆடைகளைக் களைந்துவிட்டேன்: மன்றாட்டுக்குரிய சாக்கு உடை அணிந்துள்ளேன்: என்றுமுள்ளவரை நோக்கி என் வாழ்நாள் முழுவதும் கூக்குரலிடுவேன்.
21 என் பிள்ளைகளே, வீறுகொள்வீர்: கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர். பகைவரின் ஆற்றலினின்றும் கைவன்மையினின்றும் அவர் உங்களை விடுவிப்பார்.
22 என்றுமுள்ளவர் உங்களை மீட்பார் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. தூயவரிடமிருந்து எனக்கு மகிழ்ச்சி கிடைத்தது: ஏனெனில், என்றுமுள உங்கள் மீட்பர் விரைவில் உங்களுக்கு இரக்கங் காட்டுவார்.
23 நான் உங்களைத் துயரத்தோடும் அழுகையோடும் அனுப்பி வைத்தேன். கடவுளோ முடிவில்லா மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் உங்களை மீண்டும் என்னிடம் அழைத்து வருவார்.
24 உங்கள் அடிமைத்தனத்தை இப்பொழுது காண்பதுபோன்று உங்கள் கடவுளிடமிருந்து வரவிருக்கும் மீட்பையும் சீயோனின் அண்டை நாட்டார் விரைவில் காண்பர். அம்மீட்பு மிகுந்த மாட்சியோடும் என்றுமுள்ளவரின் போரொளியோடும் உங்களை வந்தடையும்.
25 என் மக்களே, கடவுளிடமிருந்து உங்கள் மீது வந்துற்ற சினத்தைப் பொறுமையோடு தாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் பகைவர் உங்களைத் துன்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர்களது அழிவை நீங்கள் விரைவில் காண்பீர்கள்: அவர்களை ஏறி மிதிப்பீர்கள்.
26 செல்லமாய் வளர்க்கப்பெற்ற என் மக்கள் கரடு முரடான பாதையில் நடந்தார்கள்: பகைவர் கவர்ந்து செல்லும் ஆட்டு மந்தைபோன்று அவர்கள் கடத்திச்செல்லப்பட்டார்கள்.
27 என் மக்களே, வீறுகொள்வீர்: கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர். இத்துயரங்களை உங்கள்மீது அனுப்பி வைத்தவர் உங்களை நினைவுகூர்வார்.
28 கடவுளைவிட்டு அகன்று செல்வதில் முன்பு நீங்கள் முனைந்து நின்றீர்கள். அதைவிடப் பன்மடங்கு ஆர்வத்துடன் அவரைத் தேடும் பொருட்டு இப்பொழுது அவரிடம் திரும்பி வாருங்கள்.
29 ஏனெனில், இக்கேடுகளை உங்கள் மீது வரச்செய்தவரே உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.
30 எருசலேம், வீறுகொள். இப்பெயரைக் கொடுத்தவரே உனக்கு ஆறுதல் வழங்குவார்.
31 உன்னைத் துன்புறுத்தி உன் வீழ்ச்சி கண்டு மகிழ்ந்தோர் இரங்கத்தக்கவர்:
32 உன் மக்கள் அடிமைகளாய் இருந்த நகர்களும் இரங்கத்தக்கவை: உன் மைந்தர்களை அடிமைகளாய் ஏற்றுக்கொண்ட நகரும் இரங்குதற்குரியது.
33 உன் வீழ்ச்சி கண்டு அது மகிழ்ந்ததுபோல, உன் அழிவு கண்டு இன்புற்றது போல, தன் பாழ்நிலை கண்டு அது பெருந்துயர் அடையும்.
34 அதனுடைய மக்கள்திரளில் அது கொண்ட இறுமாப்பை அகற்றிவிடுவேன்: அதன் செருக்கை அழுகையாய் மாற்றி விடுவேன்.
35 என்றுமுள்ளவரிடமிருந்து நீண்டநாள் அதன்மேல் நெருப்பு வந்து விழும்: பன்னெடுங் காலம் அது பேய்களின் இருப்பிடமாய் அமையும்.
36 எருசலேமே, கீழ்த்திசையை நோக்கு: கடவுளிடமிருந்து உனக்கு வரும் மகிழ்ச்சியைப் பார்.
37 உன்னை விட்டுப் பிரிந்துசென்ற உன் மைந்தர்கள் இதோ! திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள்: கீழ்த்திசைமுதல் மேற்றிசைவரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுளின் மாட்சியில் திளைத்த வண்ணம் வந்துகொண்டிருக்கின்றார்கள்.

Holydivine