Baruch - Chapter 5
Holy Bible

1 எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு: கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள்.
2 கடவுளிடமிருந்து வரும் நீதியை ஆடையாய்ப் புனைந்து கொள்: என்றுமுள்ளவரின் மாட்சியை மணிமுடியாக உன் தலைமீது சூடிக்கொள்.
3 கடவுள் வானத்தின்கீழ் உள்ள எல்லா நாடுகளுக்கும் உன் பேரொளியைக் காட்டுவார்.
4 நீதியில் ஊன்றிய அமைதி , இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி என்னும் பெயர்களால் கடவுள் உன்னை என்றென்றும் அழைப்பார்.
5 எருசலேமே, எழுந்திரு: உயர்ந்த இடத்தில் எழுந்து நில். கீழ்த்திசையை நோக்கு: கீழ்த்திசைமுதல் மேற்றிசை வரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உன் மக்கள் தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுள் தங்களை நினைவு கூர்ந்ததற்காக மகிழ்வதைப் பார்.
6 பகைவர்கள் கடத்திச் சென்ற உன் மக்கள் உன்னைவிட்டுப் பிரிந்து சென்ற பொழுது நடந்து சென்றார்கள்: ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்ப அழைத்துவரும் பொழுது அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல் உயர்மிகு மாட்சியுடன் அழைத்துவரப்படுவார்கள்.
7 கடவுளின் மாட்சியில் இஸ்ரயேல் பாதுகாப்புடன் நடந்துவரும் பொருட்டு, உயர் மலைகள் என்றென்றும் உள்ள குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார்.
8 மேலும், காடுகளும் நறுமணம் வீசும் மரங்கள் அனைத்தும் கடவுளின் கட்டளையால் இஸ்ரயேலுக்கு நிழல் கொடுத்தன.
9 கடவுள் தம் மாட்சியின் ஒளியில் மகிழ்ச்சியோடும், தம்மிடமிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் இஸ்ரயேலை அழைத்து வருவார்.

Holydivine