Ezekiel - Chapter 19
Holy Bible

1 நீயோ, இஸ்ரயேலின் தலைவர்களைப்பற்றிப் புலம்பல் பாடி,
2 சொல்: சிங்கங்களின் நடுவில் எப்படிப்பட்ட பெண் சிங்கமாய்த் திகழ்ந்தவள் உன் தாய்! இளஞ்சிங்கங்களிடையே இருந்து அவள் தன் குட்டிகளை வளர்த்தாள்.
3 அவள் வளர்த்த குட்டிகளுள் ஒன்று இளஞ்சிங்கமாக வளர்ச்சியுற்றது: அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.
4 வேற்றினத்தார் அதனைப்பற்றிக் கேள்வியுற்று, அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்: அதனைச் சங்கிலிகளால் கட்டி எகிப்துக்குக் கொண்டு போயினர்.
5 தாய்ச்சிங்கமோ, தான் நம்பிக்கையோடு காத்திருந்தது வீணாயிற்று என்று கண்டாள்: எனவே தன் குட்டிகளுள் வேறொன்றை எடுத்து அதனையும் ஓர் இளஞ்சிங்கமாக உருவாக்கினாள்.
6 அது சிங்கங்களோடு நடமாடி ஓர் இளஞ்சிங்கம் ஆயிற்று: அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.
7 அது கோட்டைகளைத் தாக்கி, நகர்களைச் சூறையாடிற்று: அதன் கர்ச்சிக்கும் ஒலி கேட்டபோதெல்லாம் நாடும் அதிலுள்ளயாவும் திகிலுற்றன.
8 அண்டை நாடுகளிலிருந்து வேற்றினத்தார் அதற்கெதிராக எப்பக்கமும் எழுந்தனர்: தங்கள் வலையை அதன்மீது வீச, அது அவர்கள் குழியில் விழுந்தது.
9 அவர்கள் அதனைச் சங்கிலிகளால் கட்டி, கூண்டிலடைத்து, பாபிலோனின் மன்னனிடம் கொண்டு வந்தனர். இனியும் அதன் கர்ச்சனை இஸ்ரயேல் மலைகளின் மீது ஒலிக்காதபடி அரண்களுக்குள் அதனை அடைத்து வைத்தனர்.
10 திராட்சைத் தோட்டத்தில் நீரருகே நடப்பட்ட திராட்சைக் கொடிபோல் இருந்தாள் உன் தாய்: மிகுந்த நீர்வளத்தின் காரணத்தால் அது கிளைகளும் கனிகளுமாகத் தழைத்திருந்தது.
11 அரச செங்கோலுக்கேற்ற உறுதியான கிளைகள் அதற்கிருந்தன: அடர்ந்த கிளைகள் நடுவே அது உயர்ந்தோங்கிற்று. திரளான கிளைகளோடு அது உயர்ந்து தென்பட்டது.
12 ஆனால், அது சினத்தோடு பிடுங்கப்பட்டு தலையிலே எறியப்பட்டது: கீழைக் காற்றினால் அது காய்ந்து போனது: அதன் கனி உதிர்ந்து போயிற்று: தண்டு உலாந்து தீக்கிரையாயிற்று.
13 இப்போதோ, அது பாலை நிலத்தில், வறண்ட, நீரற்ற நிலப்பரப்பில் நடப்பட்டுள்ளது.
14 அதன் தண்டிலிருந்து நெருப்பு கிளம்பி அதன் கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது: அரச செங்கோலாயிருக்கத்தக்க உறுதியான தண்டு இனி அதில் தோன்றாது. இதுவே புலம்பல்: இதனை இரங்கற்பாவவெனக் கொள்க.

Holydivine