Ezekiel - Chapter 28
Holy Bible

1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், நானே கடவுள்: நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன் என்று சொல்கின்றாய், ஆனால் நீ கடவுளைப்போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல: மனிதனே!
3 தானியேலை விட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை!
4 உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்: உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய். 
5 உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்: உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது.
6 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுளைப்போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால்,
7 மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்: அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்: உன் பெருமையைக் குலைப்பர்.
8 படு குழியில் தள்ளுவர் உன்னை: கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே!
9 அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் நானே கடவுள் என்று சொல்வாயோ? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய். 
10 விருத்தசேதனம் செய்யப் படாதவனைப்போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
11 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
12 மானிடா! தீர் நகரின் மன்னனைக் குறித்து, இரங்கற்பா ஒன்று பாடு. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ நிறைவின் மாதிரியாகவும் ஞானத்தின் நிறைவாகவும் அழகின் முழுமையாகவும் இருந்தாய்.
13 கடவுளின் தோட்டமாகிய ஏதேனில் இருந்தாய்! விலையுயர்ந்த கற்கள் உன்னை அழகுபடுத்தின! பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், படிகச் பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்திருப்பாய். பொன்னாடை உன் அழகை வெளிக்காட்டிற்று. நீ பிறந்த அன்றே இவை படைக்கப்பட்டுத்
14 காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்: கடவுளின் தூய மலையில் நீ இருந்தாய்: ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய்.
15 நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய்.
16 பரந்த உன் வாணிபத்தால் வன்முறை நிறைந்தது உன்னில்: பாவம் செய்தாய் நீயே! எனவே, வெறுப்புடன் உன்னைக் கடவுளின் மலையினின்று வெளியேற்றினேன்: ஓ! காவல்காக்கும் கெருபே! உன்னை ஒளிவீசும் கற்கள் நடுவினின்று வெளியே தள்ளினேன்.
17 உன் அழகின் காரணமாய் உன் இதயம் செருக்குற்றது: உன் மாட்சியின் காரணமாய் உன் ஞானத்தைக் கெடுத்துக் கொண்டாய்: எனவே நான் உன்னைத் தரையில் தள்ளிவிட்டேன்: மன்னர்கள் முன்னே உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.
18 உன் மிகுதியான பாவங்களாலும் நேர்மையற்ற வாணிபத்தாலும் உன் திருத்தலங்களைத் தீட்டுப்படுத்தினாய்: எனவே உன் நடுவினின்று நெருப்பு வரச்செய்தேன். உன்னைப் பார்த்தோர் கண்முன்னே முற்றிலும் உன்னைத் தரையில் சாம்பலாக்கினேன்.
19 உன்னைத் தெரிந்த எல்லா நாடுகளும் உன்னைக் கண்டு மருண்டு திகிலுறுகின்றன. நடுங்கற்குரிய முடிவுக்கு வந்து விட்டாய் நீ: இனிமேல் நீ இருக்கமாட்டாய்.
20 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
21 மானிடா! சீதோனுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அதற்கெதிராய் இறைவாக்காகச் சொல்.
22 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சீதோனே, நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்: உன் நடுவில் என் மாட்சியை வெளிப்படுத்தும்போது, நான் உன்மீது தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றும்போது, உன் நடுவில் என் தூய்மையைக் காண்பிக்கும்போது, நானே ஆண்டவர் என உன்னிலுள்ளோர் அறிந்து கொள்வர்.
23 உன்னிடத்தில் கொள்ளை நோய் வரச்செய்து, உன் தெருக்களில் குருதி ஓடச் செய்வேன். கொலை செய்யப்பட்டோர் உன் நடுவில் விழுந்துகிடப்பர்: உனக்கு எதிராய் எப்பக்கமும் வாள் இருக்கும்: அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வர்.
24 இஸ்ரயேல் நாட்டினர்க்கு அவர்களை வன்னெஞ்சுடன் நடத்திய அண்டை நாட்டினர் இனிமேல் காலில் குத்தும் முள்ளாகவும் தைத்து வலிகொடுக்கும் நெரிஞ்சிலாகவும் இருக்கமாட்டார். அப்போர், அவர்கள் நானே தலைவராகிய ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வர்.
25 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டினரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்க்கையில் எல்லா மக்களினங்கள் நடுவிலும் நான் என் தூய்மையைக் காண்பிப்பேன். நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்த அவர்களின் சொந்த நாட்டில் அப்போது வாழ்வர்.
26 அவர்கள் அங்கே அச்சமின்றிக் குடியிருப்பர்: வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைப்பர். அவர்களை வன்னெஞ்சுடன் நடத்திய அண்டை நாட்டினர் அனைவர் மீதும் தண்டனைத் தீர்ப்புகளை நான் நிறைவேற்றும்போது, அவர்கள் மட்டும் அச்சமின்றி வாழ்வர். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வர்.

Holydivine