Micah - Chapter 5
Holy Bible

1 அரண்சூழ் நகரில் வாழும் மக்களே! உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்: உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது: இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.
2 நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர்: உன்னிடமிருந்தே தோன்றுவார்: அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.
3 ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்: அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.
4 அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்: அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்: ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்:
5 அவரே அமைதியை அருள்வார். அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும்போதும், நம் அரண்களை அழித்தொழிக்கும்போதும் அவர்களுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரையும் மக்கள் தலைவர் எண்மரையும் நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.
6 அவர்கள் அசீரியா நாடு முழுவதையும் நிம்ரோது நாட்டை அதன் நுழைவாயில்கள் வரையிலும் தங்கள் வாளுக்கு இரையாக்குவார்கள்: அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும் போதும், நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும், நம்மை அவர்களிடமிருந்து விடுவிப்பார்கள்.
7 அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர் ஆண்டவரிடமிருந்து வரும் பனியைப் போலவும் மனிதருக்காக காத்திராமலும் மானிடர்க்காகத் தாமதிக்காமலும், புல்மேல் பெய்கின்ற மழைத்துளிகள் போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.
8 மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர் காட்டு விலங்குகளிடையே இருக்கும் சிங்கம் போலவும், ஆட்டு மந்தைக்குள் நுழைந்து யாரும் விடுவிக்க இயலாத நிலையில் அவற்றை மிதித்துத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும் சிங்கக் குட்டி போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.
9 உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்: உன்னுடைய எதிரிகள் அனைவரும் அழிந்தொழிவார்கள்.
10 அந்நாளில், நான் உன்னிடமுள்ள உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்: உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன் என்கிறார் ஆண்டவர்.
11 உன் நாட்டிலுள்ள நகர்களைத் தகர்த்தெறிவேன்: உன் அரண்கள் அனைத்தையும் தரைமட்டமாக்குவேன்.
12 உன்னுடைய மாயவித்தைக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன்: குறிசொல்லுவோர் உன்னிடம் இல்லாதொழிவர்.
13 நீ செய்து வைத்திருக்கும் சிலைகளையும் படிமங்களையும் உடைத்தெறிவேன்: உன் கைவினைப் பொருள்கள்முன் இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.
14 நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப் பிடுங்கி எறிவேன்: உன் நகரங்களை அழித்தொழிப்பேன்.
15 எனக்குச் செவி கொடாத வேற்றினத்தார்மேல் சினத்துடனும் கடும் சீற்றத்துடனும் பழிதீர்த்துக் கொள்வேன்.

Holydivine