Micah - Chapter 6
Holy Bible

1 ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் சொல்: குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும்.
2 மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே, ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்: ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று உண்டு: இஸ்ரயேலோடு அவர் வாதாடப் போகின்றார்.
3 என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? எனக்கு மறுமொழி கூறுங்கள்.
4 நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்தேன்: அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டு வந்தேன்: உங்களுக்கு முன்பாக மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் அனுப்பிவைத்தேன்.
5 என் மக்களே, மோவாபு அரசன் பாலாக்கு வகுத்த திட்டத்தை நினைத்துப் பாருங்கள்: பெயோரின் மகன் பிலயாம் அவனுக்குக் கூறிய மறுமொழியையும், சித்திமுக்கும் கில்காலுக்கும் இடையே நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்: அப்போது ஆண்டவரின் மீட்புச் செயல்களை அறிந்து கொள்வீர்கள்.
6 ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா?
7 ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?
8 ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?
9 ஆண்டவரின் குரல் நகரை நோக்கிக் கூக்குரலிடுகின்றது: உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே உண்மையான ஞானம். நகரில் கூடியிருப்போரே! நான் கூறுவதைக் கேளுங்கள்:
10 கொடியோரின் வீட்டில் தீய வழியால் சேர்க்கப்பட்ட களஞ்சியங்களையும் சபிக்கப்பட்ட மரக்காலையும் நான் மறப்பேனோ?
11 கள்ளத் தராசையும் கள்ள எடைக் கற்களையும் கொண்ட பையை வைத்திருப்போரை நேர்மையாளர் எனக் கொள்வேனோ?
12 உங்களிடையே உள்ள செல்வர்கள் கொடுமை நிறைந்தவர்கள்: அங்கே குடியிருப்பவர்கள் பொய்யர்கள்: அவர்கள் வாயிலிருந்து வஞ்சனையான பேச்சே வெளிப்படுத்துகின்றது.
13 ஆதலால், நான் உங்களை உங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கத் தொடங்கியுள்ளேன்: நீங்கள் பாழாய்ப் போவீர்கள்.
14 நீங்கள் உணவருந்தினாலும் நிறைவடைய மாட்டீர்கள்: பசி உங்கள் வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருக்கும்: நீங்கள் எதையும் பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள், இழப்பீர்கள்: அப்படியே நீங்கள் எதையாவது பாதுகாப்பாக வைத்தாலும் அதை நான் வாளுக்கு இரையாக்குவேன்.
15 நீங்கள் விதைப்பீர்கள்: ஆனால், அறுவடை செய்யமாட்டீர்கள்: ஒலிவக் கொட்டைகளை ஆலைக்குள் இட்டு ஆட்டுவீர்கள், ஆனால், உங்களுக்கு எண்ணெய் தடவிக்கொள்ளமாட்டீர்கள்: திராட்சைப் பழம் பிழிவீர்கள்: ஆனால், திராட்சை இரசத்தைச் சுவைக்கமாட்டீர்கள்.
16 ஏனெனில், நீங்கள் ஒம்ரியின் கட்டளைகளைக் கடைப்பிடித்தீர்கள்: ஆகாசு குடும்பத்தாரின் செயல்கள் அனைத்தையும் பின்பற்றினீர்கள், அவர்களின் திட்டங்களைப் பின்பற்றி நடந்தீர்கள்: ஆதலால், நான் உங்களை அழிவுக்குக் கையளிப்பேன்: உங்களிடையே குடியிருப்போர் இகழ்ச்சிக்கு உள்ளாவர்: மக்களினங்களின் நிந்நதைக்கு ஆளாவீர்கள். 

Holydivine