Genesis - Chapter 26
Holy Bible

1 முன்பு ஆபிரகாமின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைத் தவிர, மேலும் ஒரு பஞ்சம் நாட்டில் உண்டாயிற்று. ஈசாக்கு பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கைக் காணக் கெராருக்குச் சென்றார்.
2 அப்போது ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ″எகிப்து நாட்டிற்கு நீ போகாமல், நான் உனக்குக் காட்டும் நாட்டிலே தங்கியிரு.
3 அந்நாட்டில் நீ அன்னியனாய் வாழ்வாய். நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன். இந்த நிலங்கள் அனைத்தையும் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் தருவேன். உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கூறிய வாக்கை உறுதிப்படுத்துவேன்.
4 உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன். உலகின் அனைத்து இனத்தாரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்.
5 ஏனெனில், ஆபிரகாம் என் குரலுக்குச் செவிசாய்த்து என் நியமங்களையும் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்தான்″ என்றார்.
6 எனவே ஈசாக்கு கெராரிலேயே தங்கிவிட்டார்.
7 அங்குள்ளவர்கள் அவர் மனைவியைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது, 'அவள் என் சகோதரி' என்றார். ஏனெனில் ரெபேக்கா பார்வைக்கு அழகுள்ளவராய் இருந்ததால், அவ்விடத்து மனிதர் தம்மைக் கொல்வார்களென்று நினைத்து, அவள் 'என் மனைவி' என்று சொல்ல அஞ்சினார்.
8 பல நாள்கள் அவர் அங்கு வாழ்ந்த பின் ஒருநாள் பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கு சாளரம் வழியாகப் பார்க்க நேர்ந்தபோது, ஈசாக்கு தம் மனைவி ரெபேக்காவைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.
9 உடனே அபிமெலக்கு ஈசாக்கை அழைத்து, ″அவள் உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே! பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய்?″ என்று கேட்டான். அதற்கு அவர், ″ஒரு வேளை அவளை முன்னிட்டு நான் சாக நேரிடலாம் என்று நினைத்ததே காரணம்″ என்று அவனுக்குப் பதில் அளித்தார்.
10 அபிமெலக்கு, ″நீ ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? குடி மக்களுள் எவனாகிலும் உன் மனைவியோடு படுத்திருந்தால், பழி எங்கள் மீது அல்லவா விழச்செய்திருப்பாய்?″ என்றான்.
11 மேலும், ″இந்த மனிதனையோ அவன் மனைவியையோ தொடுபவன் கொல்லப்படுவது உறுதி″ என்று அபிமெலக்கு தன் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தான்.
12 ஈசாக்கு அந்த நாட்டில் பயிரிட்டு அதே ஆண்டில் நூறுமடங்கு அறுவடை செய்தார். ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்கினார்.
13 அவர் செல்வமுடையவர் ஆனார். செல்வத்திற்குமேல் செல்வம் பெற்று மாபெரும் செல்வரானார்.
14 மேலும் அவருக்கு ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் இருந்தன. வேலைக்காரர் பலர் இருந்தனர். எனவே பெலிஸ்தியர் அவர்மீது பொறாமை கொண்டனர்.
15 அவர் தந்தை ஆபிரகாமின் காலத்தில் அவருடைய வேலையாள்கள் தோண்டிய கிணறுகளையெல்லாம் பெலிஸ்தியர் மண்ணால் நிரப்பித் தூர்த்து விட்டனர்.
16 மேலும் அபிமெலக்கு ஈசாக்கை நோக்கி, ″நீ எங்களைவிட வலிமையுள்ளவனாய் இருப்பதால், எங்களை விட்டு அகன்று போ″ என்றான்.
17 எனவே, ஈசாக்கு அங்கிருந்து வெளியேறிக் கெரார் பள்ளத்தாக்கில் குடியேறி வாழலானார்.
18 அங்கே, தம் தந்தை ஆபிரகாமின் காலத்தில் தோண்டப்பட்டு, அவர் இறந்த பின் பெலிஸ்தியரால் மூடப்பட்ட கிணறுகளை அவர் தோண்டித் தூரெடுத்தார்; தம் தந்தை இட்டிருந்த அதே பெயர்களால் அவற்றை அழைத்தார்.
19 பின் அவருடைய வேலைக்காரர் நீர்ப்படுகையில் தோண்ட, அங்கே பொங்கியெழும் நீரூற்றைக் கண்டனர்.
20 ஆனால், கெராரில் இருந்த மேய்ப்பர்கள் ஈசாக்கின் மேய்ப்பர்களோடு, ″இந்தத் தண்ணீர் எங்களதே″ என்று வாதாடினர். இவ்வாறு அவர்கள் அவரோடு தகராறு செய்ததால் அந்தக் கிணற்றுக்கு அவர் 'ஏசேக்கு' என்று பெயரிட்டார்.
21 மீண்டும் அவர்கள் வேறொரு கிணறு தோண்டினர். முன்புபோல் அதைப் பற்றியும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அதற்குச் 'சித்னா' என்று அவர் பெயரிட்டார்.
22 அவர் அவ்விடத்தை விட்டகன்று, வேறொரு கிணற்றைத் தோண்டினார். இம்முறை வாக்குவாதம் ஒன்றும் ஏற்படவில்லை. அதன் பொருட்டு, ″ஆண்டவர் நம் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார். நாட்டில் நாம் வளர்ச்சியுறுவோம்″ என்று சொல்லி, அதற்கு 'இரகபோத்து' என்று பெயரிட்டார்.
23 பின் அவர் அவ்விடத்திலிருந்து பெயேர்செபாவுக்குப் போனார்.
24 அன்றிரவு ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ″உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நானே, அஞ்சாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். உனக்கு ஆசி வழங்கி, என் ஊழியன் ஆபிரகாமின் பொருட்டு உனது வழிமரபைப் பெருகச் செய்வேன்″ என்றார்.
25 எனவே ஈசாக்கு அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவரது திருப்பெயரைப் போற்றினார்; அங்கே கூடாரம் அடித்துத் தங்கினார். ஈசாக்கின் வேலைக்காரர் அங்கே ஒரு கிணறு வெட்டினர்.
26 அப்பொழுது கெராரிலிருந்து அபிமெலக்கு தன் உற்ற நண்பன் அகுசாத்துடனும் படைத்தலைவன் பிக்கோலுடனும் அவரிடம் வந்தான்.
27 அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி, ″நீங்கள் என்னை வெறுத்து உங்களிடமிருந்து விரட்டிவிட்டு, இப்பொழுது என்னிடம் வருவது ஏன்?″ என்றார்.
28 அவர்கள் மறுமொழியாக, ″ஆண்டவர் உம்மோடு இருக்கிறாரென்று தெளிவாகக் கண்டோம். ஆதலால் நமக்குள், எங்களுக்கும் உமக்குமிடையே, ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம். நாங்கள் உம்மோடு உடன்படிக்கை செய்து கொள்வோம்.
29 நாங்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை. உம்மை நல்ல முறையில் நடத்தி, சமாதானமாய் அனுப்பி வைத்தோம். அதுபோல ஆண்டவரின் ஆசி பெற்ற நீரும் எங்களுக்கு எவ்விதத் தீமையும் செய்யாதிருப்பீர்″ என்றனர்.
30 ஈசாக்கு அவர்களுக்கு விருந்து அளித்தார். அவர்களும் உண்டு குடித்தனர்.
31 அதிகாலையில் அவர்கள் எழுந்து, ஒருவருக்கொருவர் வாக்குறுதி அளித்தனர். பின் ஈசாக்கு அவர்களை அனுப்பி வைத்தார். அவர்களும் அவரிடமிருந்து சமாதானமாய்ப் பிரிந்து சென்றனர்.
32 அதே நாளில் ஈசாக்கின் வேலைக்காரர், தாங்கள் தோண்டிய கிணற்றைக் குறித்துச் செய்தி கொண்டு வந்து 'தண்ணீர் கண்டோம்' என்றனர்.
33 ஆதலால் அவர் அதற்குச் 'சிபா' என்று பெயரிட்டார். எனவே அந்நகருக்கு பெயேர்செபா என்னும் பெயர் இன்றுவரை வழங்கி வருகிறது.
34 ஏசா நாற்பது வயதானபோது, இத்தியன் பெயேரியின் மகள் யூதித்தையும் இத்தியன் ஏலோனின் மகள் பாசமத்தையும் மணந்துகொண்டான்.
35 இவர்களால் ஈசாக்கும் ரெபேக்காவும் மனக்கசப்பு அடைந்தனர்.

Holydivine