Hosea - Chapter 10
Holy Bible

1 இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக்கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது: எவ்வளவு மிகுதியாகக் கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாய்ப் பலிபீடங்களை அமைத்தது: எத்தகைய சிறப்புடன் நாடு செழிப்புற்றதோ, அதற்கு இணையாய்ச் சிலைத் தூண்கள் சிறப்புப் பெற்றன.
2 இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள், தங்கள் குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்: ஆண்டவர் அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்திடுவார்: அவர்களுடைய சிலைத் தூண்களை நொறுக்கிடுவார்.
3 அப்போது அவர்கள், நமக்கு அரசன் இல்லை: ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை: அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்? என்பார்கள்.
4 வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகின்றார்கள். பொய்யாணை இட்டு உடன்படிக்கை செய்கின்றார்கள்: ஆதலால், வயலின் உழவுச் சால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும். 
5 சமாரியாவில் குடியிருப்போர் பெத்தாவேனிலுள்ள கன்றுக் குட்டியை முன்னிட்டு நடுங்குவர்: அதன் மேன்மை இப்பொழுது மறைந்துபோயிற்று: அதைக் குறித்து அதன் மக்கள் துயர் அடைவார்கள்: அதன் குருக்களும் அதற்காகப் புலம்புவார்கள்.
6 அதுவே அசீரியாவிலுள்ள யாரேபு மன்னனுக்கு அன்பளிப்பாகக் கொண்டுபோகப்படும். எப்ராயிம் வெட்கமடைவான், இஸ்ரயேல் தன் ஆலோசனையால் நாணமடைவான்.
7 சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்துபோவான்.
8 இஸ்ரயேலின் பாவமாகிய சிலை வழிபாட்டின் உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்: முள்களும், முட்புதர்களும் அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்: அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, எங்களை மூடிக்கொள்ளுங்கள் குன்றுகளைப் பார்த்து, 'எங்கள்மேல் விழுங்கள்' என்று சொல்வார்கள்.
9 இஸ்ரயேலர் கிபயாவில் தங்கியிருந்த நாளிலிருந்தே பாவம் செய்து வந்தார்கள்: கிபயாவில் பொல்லார்மேல் எழுந்த கடும் போர் அவர்கள்மேலும் வராதா?
10 நான் வந்து அவர்களைத் தண்டிப்பேன்: அவர்கள் செய்த இரட்டைத் தீச் செயல்களுக்குத் தண்டனை வழங்கும் பொருட்டு அவர்களுக்கு எதிராக வேற்றினத்தார் ஒன்றுகூடுவர்.
11 எப்ராயிம், நன்றாகப் பழக்கப்பட்டதும், புணையடிக்க விரும்புவதுமான பசுவாய் இருக்கின்றான்: நானோ அதன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்: எப்ராயிமை ஏரில் பூட்டுவேன்: யூதா உழுவான்: யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான். 
12 நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்: அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்: உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்: ஏனெனில் ஆண்டவர் வந்து நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கிவந்துவிட்டது.
13 நீங்கள் கொடுமையை உழுதீர்கள்: தீவினையை அறுவடை செய்தீர்கள்: பொய்ம்மைக் கனியைத் தின்றீர்கள்: உங்கள் தேர்ப்படைகளின் மேலும், வீரர்களின் எண்ணிக்கையின் மேலும் நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்.
14 ஆதலால் உங்கள் மக்களிடையே போர்க் குரல் எழும்பும்: உங்கள் அரண்கள் யாவும் அழிக்கப்படும்: போரின் நாளில் பெத்தர்பேலைச் சல்மான் அழித்தபோது அன்னையர் தம் பிள்ளைகளோடு மோதியடிக்கப்பட்டது போல அது இருக்கும்.
15 பெத்தேலே! உன் கொடிய தீவினைக்காக உனக்கும் இவ்வாறே செய்யப்படும். பொழுது விடியும்போது இஸ்ரயேலின் அரசன் அழிந்து போவது உறுதி.

Holydivine