Hosea - Chapter 14
Holy Bible

1 இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா: நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்.
2 இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்: நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்:
3 அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்: குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்: எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, எங்கள் கடவுளே! என்று இனிச் சொல்லமாட்டோம்: திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான் எனச் சொல்லுங்கள்.
4 அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்: அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது.
5 நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்: அவன் லீலிபோல் மலருவான்: லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான்.
6 அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்: அவன் பொலிவு ஒலிவமரம் போல் இருக்கும்: லெபனோனைப்போல் அவன் நறுமணம் பரப்புவான்.
7 அவர்கள் திரும்பிவந்து என் நிழலில் குடியிருப்பார்கள்: கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும்.
8 இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவி சாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்: நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும்.
9 ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்: பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்: ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை: நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்: மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.

Holydivine