Hosea - Chapter 5
Holy Bible

1 குருக்களே, இதைக் கேளுங்கள்: இஸ்ரயேல் குடும்பத்தாரே, கவனியுங்கள்: அரசனின் வீட்டாரே, செவி கொடுங்கள்: உங்களுக்கு எதிராகவே தீர்ப்புத் தரப்படுகின்றது: நீங்கள் மிஸ்பாவில் ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்: தாபோர்மீது விரிக்கப்பட்ட வலையுமாயிருக்கின்றீர்கள்.
2 வஞ்சகர்கள் கொலைத் தொழிலில் ஆழ்ந்துள்ளார்கள்: அவர்கள் அனைவரையும் தண்டிப்பேன்.
3 எப்ராயிமை நான் அறிந்திருக்கிறேன்: இஸ்ரயேல் எனக்கு மறைவானதன்று: எப்ராயிமே! நீ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்: இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கின்றது:
4 அவர்களுடைய கடவுளிடம் திரும்பிவர அவர்களின் செயல்கள் விடுவதில்லை: ஏனெனில், விபசாரப் புத்தி அவர்களை ஆட்கொண்டுள்ளது: ஆண்டவரைப்பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.
5 இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு எதிராகச் சான்று கூறும்: இஸ்ரயேலும் எப்ராயிமும் தங்கள் தீச்செயலால் இடறிவிடுவார்கள்: யூதாவும் அவர்களோடு இடறிவிழுவான்.
6 தங்கள் ஆடு மாடுகளோடு அவர்கள் ஆண்டவரைத் தேடிப் போவார்கள்: ஆனால் அவரைக் காணமாட்டார்கள்: அவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.
7 ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்: ஏனெனில் அன்னியப் பிள்ளைகளைப் பெற்றார்கள்: இப்பொழுதே அவர்களையும் அவர்கள் நிலங்களையும் அமாவாசை விழுங்கப் போகிறது.
8 கிபயாவில் கொம்பு ஊதுங்கள்: இராமாவில் எக்காளம் முழக்குங்கள்: பெத்தாவேனில் போர்க்குரல் எழுப்புங்கள்: பென்யமின்! உன்னைப் பின் தொடருகின்றார்கள்.
9 தண்டனை வழங்கப்படும் நாளில் எப்ராயிம் பாழாவான்: இஸ்ரயேலின் குலங்களுக்கு உறுதியாய் நேரிடப் போவதையே அறிவிக்கின்றேன்.
10 யூதாவின் தலைவர்கள் எல்லைக்கல்லைத் தள்ளி வைக்கிறவர்களுக்கு ஒப்பாவார்கள்: அவர்கள் மேல் என் கோபத்தை வெள்ளப்பெருக்கைப்போல் கொட்டித் தீர்ப்பேன்.
11 எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்: தண்டனைத் தீர்ப்பால் நொறுக்கப்படுகின்றான்: அவன் வீணான கட்டளைகளைப் பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான்.
12 ஆகையால் எப்ராயிமுக்கு நான் விட்டில்போல் இருக்கின்றேன்: யூதாவின் வீட்டாருக்குப் புற்றுநோய்போல் இருக்கின்றேன்.
13 எப்ராயிம் தன் பிணியைக் கண்டுகொண்டான்: யூதா தன் காயத்தை உணர்ந்து கொண்டான்: எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி, யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான். ஆனால், உங்களைக் குணமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.
14 ஏனெனில், நான் எப்ராயிமுக்குச் சிங்கத்தைப் போலவும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக்குட்டியைப்போலவும் இருப்பேன்: நானே அவர்களைக் கவ்விப் பிடிப்பேன்: தூக்கிக்கொண்டு போவேன்: விடுவிப்பவன் எவனுமே இரான்.
15 தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று, என்னைத் தேடி வரும்வரை, நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன். தங்கள் துன்பத்திலே அவர்கள் என்னைத் தேடுவார்கள்.

Holydivine