Numbers - Chapter 32
Holy Bible

1 ரூபன் புதல்வருக்கும் காத்துப் புதல்வருக்கும் ஆடு, மாடுகள் பெருந்திரளாயிருந்தன: அவர்கள் யாசேர் நாட்டையும், கிலயாது நாட்டையும் கண்டனர்: அந்த இடம் ஆடு, மாடுகளுக்கேற்றதாக இருந்தது.
2 எனவே அவர்கள் மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகியோரிடம் வந்து,
3 அற்றரோத்து, தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலயாலே, செபாம், நெபோ, பெயோன் ஆகிய பகுதிகள்
4 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் பார்வையில் ஆண்டவர் அடக்கிய நிலப் பகுதிகள் ஆடு, மாடுகளுக்கு ஏற்றவை: உம் அடியார்களுக்கு ஆடு மாடுகள் உண்டு என்றனர்.
5 மேலும் அவர்கள், உங்கள் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைத்தால் இந்த நாடு உம் அடியார்களுக்கு உடைமையாகத் தரப்படட்டும்: எங்களை யோர்தானுக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டாம் என்றனர்.
6 ஆனால் மோசே காத்துப் புதல்வரிடமும் ரூபன் புதல்வரிடமும் கூறியது: நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க உங்கள் சகோதரர் மட்டும் போருக்குப் போக வேண்டுமா?
7 ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி ஏன் இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்கிறீர்கள்?
8 அவர்கள் நாட்டைப் பார்ப்பதற்குக் காதேசுபர்னேயாவிலிருந்து நான் உங்கள் மூதாதையரை அனுப்பியபோது அவர்களும் இவ்வாறே செய்தனர்.
9 அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்கினுள் சென்று நாட்டைக் கண்டபோது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்தனர்.
10 அந்நாளில் ஆண்டவருக்குச் சினம் மூண்டது: அவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறியது:
11 எகிப்திலிருந்து வெளிவந்தவர்களில் இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய ஒருவரும் நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியநாட்டினைக் காணமாட்டார்கள்: ஏனெனில் அவர்கள் என்னை முழுமையாகப் பின்பற்றவில்லை.
12 எபுன்னேயின் புதல்வன் காலேபும், நூனின் புதல்வன் யோசுவாவும் இதற்கு விதிவிலக்கு: ஏனெனில் அவர்கள் ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியுள்ளனர்.
13 அத்துடன் ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது: அவர் இப்பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அவர்களை அலையச் செய்தார்: ஆண்டவர் பார்வையில் தீயன செய்த தலைமுறை அனைத்தும் அழியுமட்டும் இது நடந்தது.
14 இப்போதும் நீங்கள் உங்கள் மூதாதையருக்குப் பதிலாகப் பாவ மனிதராக எழும்பிவிட்டீர்கள். இஸ்ரயேலுக்கு எதிராக உள்ள ஆண்டவரின் கோபக் கனலை இன்னும் கடுமையாக்கி விடுகிறீர்களே!
15 அவரைப் பின்பற்றுவதைவிட்டு நீங்கள் விலகினால் அவரும் அவர்களைப் பாலைநிலத்தில் விட்டு விடுவார்: இம்மக்கள் அனைவரையும் நீங்கள் அழியப் பண்ணுவீர்கள்.
16 பின்னும் அவர்கள் அவரிடம் நெருங்கி வந்து, நாங்கள் இங்கே எங்கள் மந்தைகளுக்குப் பட்டிகளையும், தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் கட்டுவோம்:
17 ஆயினும் நாங்கள் இஸ்ரயேல் மக்களை அவர்கள் இடத்திற்குக் கொண்டு சேர்க்குமளவும் அவர்கள் முன்பாகப் போர்க்கலம் தாங்கிச் செல்ல ஆயத்தமாயிருப்போம்: எங்கள் பிள்ளைகள் இந்நாட்டுக் குடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அரண் சூழ் நகர்களில் வாழ்வார்கள்:
18 இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளும்வரை நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டோம்.
19 நாங்கள் யோர்தானுக்கு அக்கரையிலும் அதற்கப்பாலும் அவர்களுடன் எதையும் உடைமையாக்கிக் கொள்வோம். ஏனெனில் எங்கள் உரிமைச் சொத்து கிழக்கே யோர்தானுக்கு இக்கரையில் கிடைத்துள்ளது என்றார்கள்.
20 மோசே அவர்களிடம் கூறியது: நீங்கள் இதைச் செய்தால் ஆண்டவர் முன் போர்க்கலம் தாங்கிச் சென்றால்,
21 உங்களில் போர்க்கலந்தாங்கியோர் ஒவ்வொரு வரும் ஆண்டவர்முன், அவர் தமக்கு முன் எதிரிகளை விரட்டி அடிக்கும் மட்டும், யோர்தானைக் கடந்து சென்றால்
22 நாடு ஆண்டவர் முன்னிலையில் பணிந்தடங்கும்: அதன் பின்பு நீங்கள் திரும்பி வருவீர்கள்: ஆண்டவருக்கு இஸ்ரயேலுக்குமுரிய கடமையை நிறைவேற்றியவராவீர்கள்: இந்த நாடும் ஆண்டவர் முன்னிலையில் உங்கள் உடைமையாகிவிடும்.
23 ஆனால் நீங்கள் இதைச் செய்யாவிட்டால் நீங்கள் ஆண்டவருக்கெதிராகப் பாவம் செய்திருக்கிறீர்கள்: உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிப்பது திண்ணம்.
24 உங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் உங்கள் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டுங்கள்: நீங்கள் வாக்களித்ததையே இப்பொழுது செய்யுங்கள்.
25 காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மோசேயிடம், எம் தலைவர் கட்டளைப்படியே உம் அடியார்கள் செய்வோம்:
26 எங்கள் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் மந்தைகள், கால்நடைகள் அனைத்தோடும் கிலயாதின் நகர்களில் தங்கியிருப்பர்:
27 ஆனால் எம் தலைவர் ஆணைப்படியே உம் அடியார் ஒவ்வொருவரும் போர்க்கலந் தாங்கியவராய் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்காகத் தொடர்ந்து செல்வோம் என்றனர்.
28 இதுபற்றி மோசே, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் மக்களின் குலங்களில் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள் ஆகியோருக்குக் கட்டளை கொடுத்தார்.
29 மோசே அவர்களிடம், காத்துப் புதல்வரிலும் ரூபன் புதல்வரிலும் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்குப் போர்க்கலந் தாங்கிய ஒவ்வொருவரும் உங்களோடு யோர்தானைக் கடந்து செல்வர்: நாடு உங்களுக்கு முன் பணிந்தடங்கும்: பின் நீங்கள் கிலயாது நாட்டை அவர்களுக்கு உடைமையாகக் கொடுக்க வேண்டும்:
30 ஆனால் அவர்கள் போர்க்கலந்தாங்கி உங்களோடு கடந்து செல்லாவிட்டால் கானான் நாட்டில் உங்களுக்கிடையே அவர்களும் உடைமைகள் பெறுவர் என்றார்.
31 காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மறுமொழியாக, ஆண்டவர் உம் அடியார்களுக்குச் சொன்னபடியே நாங்கள் செய்வோம்:
32 நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் போர்க் கலந்தாங்கிக் கானான் நாட்டுக்குள் தொடர்ந்து செல்வோம்: எங்கள் உரிமைச் சொத்தான உடைமை யோர்தானுக்கு அப்பால் எங்களுடனேயே இருக்கும் என்றனர்.
33 மோசே, காத்துப் புதல்வர், ரூபன் புதல்வர், யோசேப்பு மகன் மனாசேயின் பாதிக் குலத்தவர் ஆகியோருக்கு எமோரிய மன்னன் சீகோனின் அரசையும் பாசான் மன்னன் ஓகின் அரசையும், நிலப்பகுதி நாடு முழுவதையும், அதன் நகர்களையும், அதைச் சுற்றியுள்ள எல்லைப்புற நகர்களையும் கொடுத்தார்.
34 காத்துப் புதல்வர் தீபோன், அற்றரோத்து, அரோயேர்,
35 அற்றரோத்து சோபான், யாசேர், யோக்பகா,
36 பெத்நிம்ரா, பெத்காரான் ஆகிய அரண்சூழ் நகர்களையும் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டினர்.
37 ரூபன் புதல்வர் எஸ்போன், எலயாலே, கிரியத்தாயிம்,
38 நெபோ, பாகால்மெகோன், (இந்த பெயர்கள் மாற்றப்பட்டன) சிப்மா ஆகியவற்றைக் கட்டினார்கள்: அவர்கள் கட்டிய நகர்களுக்குப் பெயர் சூட்டினர்.
39 மனாசே மகன் மாக்கிர் புதல்வர் கிலயாதுக்குச் சென்று அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்திவிட்டனர்.
40 மோசே கிலயாதை மனாசே மகன் மாக்கீருக்குக் கொடுத்தார்: அவர் அதில் வாழ்ந்தார்.
41 மனாசே மகன் யாயிர் புறப்பட்டுச் சென்று அவற்றின் சிற்றூர்களைக் கைப்பற்றிக் கொண்டார்: அவற்றை அவர் அவ்வோத்துயாயிர் என்று அழைத்தார்.
42 நோபாகு என்பவர் புறப்பட்டுச் சென்று கெனாத்தையும், அதன் சிற்றூர்களையும் கைப்பற்றிக்கொண்டார்: அவர் அதைத் தம் பெயராலேயே நோபாகு என்று அழைத்தார்.

Holydivine