Numbers - Chapter 36
Holy Bible

1 யோசேப்பு புதல்வரைச் சார்ந்த குடும்பங்களில் மனாசே மகனான மாக்கிரின் புதல்வனான கிலயாதின் மைந்தரது குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர் வீடுகளின் தலைவர்கள், மோசேயிடமும், இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகிய பெரியோர்களிடமும் சென்றனர்.
2 அவர்கள் கூறியது: இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்துக்காக நாட்டைத் திருவுளச்சீட்டு முறையில் கொடுக்கும்படி ஆண்டவர் எம் தலைவராகிய உமக்குக் கட்டளையிட்டார். எம் சகோதரன் செலோபுகாதின் உரிமைச் சொத்தை அவர் புதல்வியருக்குக் கொடுக்கும்படியும் ஆண்டவரால் உமக்குக் கட்டளையிடப்பட்டது.
3 ஆனால் இஸ்ரயேல் மக்களின் வேறு குலங்களின் புதல்வர்களை அவர்கள் மணம் புரிந்தால் அவர்களின் உரிமைச் சொத்து எங்கள் மூதாதையர் உரிமைச் சொத்திலிருந்து எடுக்கப்பட்டு அவர்களுக்குச் சொந்தமான குலத்தின் உரிமைச் சொத்துடன் சேர்க்கப்பட்டுவிடும்: இவ்வாறு திருவுளச் சீட்டால் எங்களுக்குக் கிடைத்த உரிமைச் சொத்து குறைய நேரிடும்.
4 அத்துடன் இஸ்ரயேல் மக்களுக்கு மீட்பின் ஆண்டு வரும்போது அவர்கள் உரிமைச் சொத்து அவர்களுக்குரிய குலத்தின் உரிமைச் சொத்துடன் சேர்க்கப்படும்: இவ்வாறு அவர்களின் உரிமைச் சொத்து எங்கள் மூதாதையரின் உரிமைச் சொத்திலிருந்து குறைய நேரிடும்.
5 மோசே ஆண்டவரின் வார்த்தைப்படியே மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: யோசேப்புப் புதல்வரின் குலம் கூறுவது சரியே:
6 செலொபுகாதின் புதல்வியரைக் குறித்து ஆண்டவர் கட்டளையிடுவது இதுவே. தாங்கள் விரும்பியோரை அவர்கள் மணம் முடிக்கட்டும்: ஆனால் தங்கள் தந்தையின் குலக் குடும்பத்திற்குள் மட்டுமே அவர்கள் மணம் முடிக்க வேண்டும்.
7 இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்து ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றப்படக்கூடாது: இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் குல உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
8 இஸ்ரயேல் மக்களில் எந்த ஒரு குலத்திலும் உரிமைச் சொத்தில் உடைமை கொண்ட ஒவ்வொரு பெண்ணும் தன் தந்தையின் குலத்திலுள்ள குடும்பம் ஒன்றிலேயே மனைவி ஆவாள். இதனால் இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் உரிமைச் சொத்தில் உடைமை கொண்டிருப்பார்.
9 எனவே ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு எந்த உரிமைச் சொத்தும் மாற்றப்படக் கூடாது: இஸ்ரயேல் மக்களின் குலங்கள் ஒவ்வொன்றும் தன் உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
10 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலோபுகாதின் புதல்வியர் செய்தனர்.
11 செலோபு காதின் புதல்வியரான மக்லா, திர்சா, ஒக்லா, மில்கா, நோவா ஆகியோர் தங்கள் தந்தையாரின் சகோதரர் புதல்வரையே மணந்தனர்.
12 அவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் புதல்வர் குடும்பங்களில் மணம் புரிந்தனர். எனவே அவர்களின் உரிமைச் சொத்து அவர்கள் தந்தையர் குலக்குடும்பத்திற்கே சொந்தமாயிருந்தது.
13 எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்துள்ள மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே வழியாக ஆண்டவர் விதித்த கட்டளைகளும் நீதிச் சட்டங்களும் இவையே.

Holydivine