Numbers - Chapter 35
Holy Bible

1 எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 தாங்கள் உடைமையாக்கிக் கொண்ட உரிமைச் சொத்திலிருந்து லேவியர் குடியிருப்பதற்காக நகர்களைக் கொடுக்கும்படி இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு: அவற்றுடன் நகர்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் லேவியருக்குக் கொடுக்க வேண்டும்.
3 இந்நகரில் அவர்கள் தங்கியிருப்பர்: இவற்றின் மேய்ச்சல் நிலங்கள் அவர்கள் கால்நடைகளுக்கும், மந்தைகளுக்கும், வீட்டு விலங்குகள் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
4 நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் மேய்ச்சல் நிலங்கள் நகரின் சுவரைச் சுற்றிலும் ஆயிரம் முழம் அகலமாய் இருக்கும்.
5 நகருக்கு வெளியில் கிழக்கே இரண்டாயிரம் முழமும், தெற்கே இரண்டாயிரம் முழமும், மேற்கே இரண்டாயிரம் முழமும், வடக்கே இரண்டாயிரம் முழமும் நீங்கள் அளக்க வேண்டும். இதுநடுவே இருக்கும் நகர்களுக்கு இது மேய்ச்சல் நிலமாகும்.
6 நீங்கள் லேவியருக்குக் கொடுக்க வேண்டிய நகர்களாவன: கொலையாளி தப்பியோடித் தஞ்சம் புகம் அடைக்கல நகர்கள் ஆறு: அவை தவிர நாற்பத்திரண்டு நகர்கள்.
7 மேய்ச்சல் நிலங்கள் உட்பட நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் மொத்த நகர்கள் நாற்பத்தெட்டு.
8 இஸ்ரயேல் மக்களின் உடைமையிலிருந்து நீங்கள் கொடுக்கும் நகர்களைப் பொறுத்த வரை குலங்களில் பெரியவற்றிலிருந்து மிகுதியாகவும், சிறியவற்றிலிருந்து குறைவாகவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குலமும் உடைமையாக்கியுள்ள உரிமைச் சொத்தின் விகிதப்படி அதன் நகர்களை லேவியருக்குக் கொடுக்க வேண்டும்.
9 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
10 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாட்டுக்குள் நுழையும் போது,
11 உங்களுக்காக அடைக்கல நகர்களைத் தேர்ந்து கொள்ளுங்கள்: தற்செயலாய் ஓர் ஆளைக் கொல்பவன் எவனும் அங்கே ஓடிச் சென்று புகலிடம் பெறுவான்.
12 இந்த நகர்கள் பழிவாங்குவோனிடமிருந்து உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும்: இதனால் கொலை செய்தவன் நீதித் தீர்ப்புக்காக மக்கள் கூட்டமைப்புக்கு முன் நிற்கும் முன்னரே அவன் சாகவேண்டியதில்லை.
13 நீங்கள் கொடுக்கும் நகர்கள் ஆறும் அடைக்கல நகர்களாயிருக்கும்.
14 யோர்தானுக்கு அப்பால் மூன்று நகர்களும், கானான் நாட்டுக்குள் மூன்று நகர்களும், நீங்கள் அடைக்கல நகர்களாகக் கொடுக்க வேண்டும்.
15 இந்த ஆறு நகர்களும் இஸ்ரயேல் மக்களுக்கும்,அன்னியருக்கும் அவர்களிடையே தற்காலிகமாகத் தங்கியிருப்போருக்கும் அடைக்கல நகர்களாயிருக்கும்: தற்செயலாய் ஓர் ஆளைக் கொல்பவன் எவனும் அங்கே ஓடிச் சென்று புகலிடம் பெறலாம்.
16 ஆனால் அவன் ஓர் இரும்புக் கருவியினால் ஒருவனை அடிக்க அவன் இறந்தால் அவன் ஒரு கொலைகாரன்: அந்தக் கொலைகாரன் கொல்லப்பட வேண்டும்.
17 ஒரு மனிதன் சாகும்படி கையில் ஒரு கல்லை வைத்து அடித்து அவன் இறந்தாலும் அவன் ஒரு கொலைகாரனே: அந்தக் கொலைகாரனும் கொல்லப்பட வேண்டும்.
18 அல்லது ஒரு மனிதன் சாகும்படி கையில் மர ஆயதம் ஒன்றை வைத்து அவனை அடித்து அவன் இறந்தாலும் அவன் ஒரு கொலைகாரனே: அந்தக் கொலைகாரனும் கொல்லப்பட வேண்டும்.
19 இரத்தப் பழி வாங்குவோன்தான் கொலைகாரனைக் கொல்ல வேண்டும்: அவனைச் சந்திக்கும்போது அவன் அவனைக் கொல்ல வேண்டும்.
20 மேலும் பகை முன்னிட்டு அவன் அவனை விழத்தள்ளினால் அல்லது பதுங்கியிருந்து எறிந்து அவன் மடிந்தால்,
21 அவன் பகை முன்னிட்டு அவன் அவனைக் கையினால் அடித்து அவன் மடிந்தால், அடித்தவன் கொல்லப்பட வேண்டும்: அவன் ஒரு கொலைகாரன்: இரத்தப்பழி வாங்குவோன் கொலைகாரனைச் சந்திக்கும் போதே அவனைக் கொன்று விடவேண்டும்.
22 ஆயினும் பகை ஏதுமின்றித் திடீரென்று அவனைக் கீழே விழத்தள்ளி, அல்லது பதுங்கியிராமலேயே எதையாவது அவன் மேல் எறிந்து,
23 கொலைகாரனுக்கும் இரத்தப்பழி வாங்குவோனுக்குமிடையில் இந்த நீதித் தீர்ப்புகளைக் கொண்டு மக்கள் கூட்டமைப்பு தீர்ப்பு வழங்க வேண்டும்.
24 மக்கள் கூட்டமைப்பினர் இரத்தப் பழி வாங்குவோன் கையிலிருந்து கொலைகாரனைக் காப்பாற்ற வேண்டும்: அவன் ஓடித் தஞ்சம் புகுந்த அடைக்கல நகருக்கு மக்கள் கூட்டமைப்பினர் அவனைத் திரும்பக் கொண்டு வர வேண்டும்:
25 தூய தைலத்தால் திருநிலைப்படுத்தப்பட்ட தலைமைக் குரு இறக்குமட்டும் அவன் அதில் தங்குவான்.
26 ஆனால் அவன் ஓடித் தஞ்சம் புகுந்திருந்த அடைக்கல நகரின் எல்லைக்கு அப்பால் எப்போதாவது போயிருந்து,
27 அவனை இரத்தப்பழி வாங்குவோன் அடைக்கல நகரின் எல்லைகளுக்கு வெளியே கண்டு அவனை வெட்டினால் இரத்தப்பழி வாங்குவோன் மேல் பழி இராது.
28 ஏனெனில் அவன் தன் தலைமைக் குரு இறக்கும்வரை தன் அடைக்கல நகரில்தான் தங்கியிருக்க வேண்டும்: தலைமைக் குரு இறந்த பின்னர்தான் அந்தக் கொலைகாரன் தனக்குரிய நாட்டுக்குத் திரும்பிச் செல்லலாம்.
29 என்றும் எங்கும் உங்களுக்கு இதுவே நீதி நியமம்.
30 எவனாவது இன்னொருவனைக் கொன்றால் சாட்சிகளின் வாக்குமூலம் முன்னிட்டுக் கொலைகாரன் கொல்லப்பட வேண்டும்: ஆனால் ஒரே சாட்சியின் கூற்றை வைத்து ஒருவனும் கொல்லப்படக் கூடாது.
31 மேலும் மரண தண்டனைக்குரிய கொலைக்காரன் ஒருவனின் உயிருக்காக ஈட்டுத்தொகை எதுவும் நீங்கள் வாங்க வேண்டாம்: அவன் கொல்லப்படத்தான் வேண்டும்.
32 அடைக்கல நகருக்குள் ஓடித் தஞ்சம் புகுந்து விட்டு, தலைமைக் குரு இறக்கும் முன் தனக்குரிய நாட்டில் குடியிருக்கும்படி ஒருவன் திரும்பிச் சென்றால் அவனிடமிருந்து ஈட்டுத் தொகை எதுவும் நீங்கள் வாங்க வேண்டாம்.
33 நீங்கள் வாழும் நாட்டைத் தீட்டுப்படுத்தாதீர்கள். இரத்தம் நாட்டைத் தீட்டுப்படுத்தும், நாட்டுக்காக, அதில் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக அதனைச் சிந்தினவனின் இரத்தமே ஈடு செய்ய முடியும்.
34 நீங்கள் வாழும் நாட்டை நீங்கள் கறைப்படுத்தவே கூடாது. நான் அதன் நடுவில் வாழ்கிறேன்: நானே இஸ்ரயேல் மக்கள் நடுவில் வாழும் ஆண்டவர்.

Holydivine