Isaiah - Chapter 24
Holy Bible

1 இதோ, ஆண்டவர் பூவுலகை வெறுமையாக்கிப் பாழடையச் செய்து, அதன் நிலப்பரப்பை உருக்குலையச் செய்து, அதில் வாழ்வோரைச் சிதறடிப்பார். 
2 அப்பொழுது மக்களுக்கு எப்படியோ அப்படியே குருக்களுக்கும், பணியாளனுக்கு எவ்வாறோ அவ்வாறே அவன் தலைவனுக்கும், பணிப்பெண்ணுக்கு எப்படியோ அப்படியே அவள் தலைவிக்கும், வாங்குபவனுக்கு எவ்வாறோ அவ்வாறே விற்பவனுக்கும், கடன் கொடுப்பவனுக்கு எப்படியோ அப்படியே கடன் வாங்குபவனுக்கும், வட்டிக்குக் கொடுத்
3 நாடு முற்றிலும் பாழடைந்து போகும்: முழுவதும் சூறையாடப்படும். ஏனெனில், இது ஆண்டவர் கூறிய வார்த்தை.
4 நிலம் புலம்பி வாடுகின்றது. மண்ணுலகில் தளர்ந்து வாடுகின்றது, மண்ணுலக மக்களுள் உயர்ந்தோர் தளர்ச்சியுறுவர்.
5 நாடு அதில் குடியிருப்போரால் தீட்டுப்பட்டுள்ளது: ஏனெனில் அவர்கள் சட்டங்களை மீறினார்கள்: நியமங்களைச் சீர்குலைத்தார்கள்: என்றுமுள உடன்படிக்கையை முறித்தார்கள்.
6 ஆதலால், சாபம் நாட்டை விழுங்குகிறது. அதில் குடியிருப்போர் குற்றப்பழியில் சிக்கியுள்ளனர். அதில் வாழ்வோர் நெருப்பில் எரிந்து போகின்றனர்: சிலரே எஞ்சியிருப்பர்.
7 திராட்சை இரசம் அழுகின்றது: திராட்சைக் கொடி தளர்கின்றது: அக்களிக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.
8 மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது. அக்களித்திருந்தோரின் ஆரவாரம் அடங்கிவிட்டது: யாழின் இன்னிசை நின்றுவிட்டது.
9 பாடலுடன் அவர்கள் திராட்சை இரசம் குடிக்கமாட்டார்கள்: மதுவும் குடிப்போருக்குக் கசப்பாயிருக்கும்.
10 குழப்பத்தின் நகர் தகர்க்கப்பட்டது: யாரும் நுழையாதபடி வீடெல்லாம் பூட்டப்பட்டது. 
11 திராட்சை இரசத்திற்காகத் தெருக்களில் கூச்சல் எழுகின்றது: மகிழ்ச்சி எல்லாம் மங்கி மறைகின்றது: விழாக்கள் நாட்டிலிருந்து அகற்றப்பட்டன.
12 பாழடைந்த நிலையே நகரில் எஞ்சியிருக்கின்றது: நுழைவாயில்கள் நொறுக்கப்பட்டும் பாழாய்க் கிடக்கின்றன.
13 நாட்டில் மக்களுக்கு நேரிடுவது ஒலிவமரத்தை உலுக்குவது போலவும், அறுவடைக்குத் தப்பிய திராட்சைப் பழங்களைப் பறிப்பது போலவும் உள்ளது.
14 எஞ்சியிருப்போர் தங்கள் குரலை உயர்த்தி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கின்றார்கள்: ஆண்டவரின் மாட்சி பற்றி மேற்கிலிருந்து ஆரவாரம் செய்கின்றார்கள்.
15 ஆதலால் கீழ்த்திசையில் ஆண்டவரைப் பெருமைப் படுத்துங்கள்: கடற்கரை நாடுகளில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள்.
16 மண்ணுலகின் எல்லையிலிருந்து நீதியுள்ளவருக்கு மாட்சி என்ற புகழ்ப்பாடலை நாங்கள் கேட்கின்றோம்: நானோ, இளைத்துப் போனேன், இளைத்துப் போனேன், எனக்கு ஐயோ, கேடு: எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்: துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றார்கள் என்றேன்.
17 உலகில் குடியிருப்போரே, திகில், படுகுழி, கண்ணி, உங்களுக்கெதிரில் இருக்கின்றன.
18 திகிலின் ஓசைகேட்டு ஓடுபவர் படுகுழியில் வீழ்வார்: படுகுழியிலிருந்து ஏறுகின்றவர் கண்ணியில் சிக்கிக் கொள்வார்: ஏனெனில், விண்ணின் மடைகள் திறக்கப்படுகின்றன: நிலத்தின் அடித்தளங்கள் அதிர்கின்றன.
19 பூவுலகம் நொறுங்கிச் சிதறுகின்றது: நிலவுலகம் பிளந்து விரிகின்றது: மண்ணுலகம் அதிர்ந்து நடுங்குகின்றது. 
20 குடிவெறியரைப் போல் மண்ணுலகம் தள்ளாடுகின்றது: குடிசைபோல் அது இடம் பெயர்ந்து செல்கின்றது: அதன் குற்றப்பழி பாரச்சுமையாய் அதை அழுத்துகின்றது: அது வீழ்ச்சியடையும்: இனி ஒருபோதும் எழாது.
21 அந்நாளில் ஆண்டவர் வானத்தில் வான் படைகளையும் நிலவுலகில் நிலவுலக மன்னர்களையும் தண்டிப்பார்.
22 கைதிகளாய் அவர்கள் படுகுழியில் ஒன்றுதிரட்டப்படுவார்கள்: சிறைக்கூடத்தில் அடைக்கப்படுவார்கள். நாள் பல சென்றபின் தண்டிக்கப்படுவார்ககள்.
23 நிலா நாணமுறுவாள்: கதிரவன் வெட்கமடைவான்: ஏனெனில், படைகளின் ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் அரசாள்வார். அவர்களின் பெரியோர் முன்னிலையில் அவர்தம் மாட்சி வெளிப்படும்.

Holydivine