Isaiah - Chapter 6
Holy Bible

1 உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்: அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.
2 அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்: ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன: ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்: இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்: மற்ற இரண்டால் பறந்தனர்.
3 அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்: மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்.
4 கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்ள் அசைந்தன: கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.
5 அப்பொழுது நான்: ஐயோ, நான் அழிந்னே. ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்: தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்: படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே என்றேன்.
6 அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார்.
7 அதனால் என் வாயைத் தொட்டு, இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது: உன் பாவம் மன்னிக்கப்பட்டது, என்றார்.
8 மேலும் யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும் என்றேன்.
9 அப்பொழுது அவர், நீ இந்த மக்களை அணுகி, 'நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள்: உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணராதிருங்கள்' என்று சொல்.
10 அவர்கள் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி இந்த மக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்: காதுகளை மந்தமாகச் செய்: கண்களை மூடச்செய் என்றார்.
11 அதற்கு நான், என் தலைவரே! எத்துணை காலத்திற்கு இது இவ்வாறிருக்கும்? என்று வினவினேன். அதற்கு அவர், நகரங்கள் அழிந்து குடியிருப்பார் இல்லாதனவாகும்: வீடுகளில் வாழ்வதற்கு மனிதர் இரார்: நாடு முற்றிலும் பாழ்நிலமாகும்:
12 ஆண்டவர் மனிதர்களைத் தொலை நாட்டிற்குத் துரத்தி விடுவார்: நாட்டில் குடியிருப்பாரின்றி வெற்றிடங்கள் பல தோன்றும்: அதுவரைக்குமே இவ்வாறிருக்கும்.
13 பத்தில் ஒரு பங்கு மட்டும் நாட்டில் எஞ்சியிருந்தாலும் அதுவும் அழிக்கப்படும்: தேவதாரு அல்லது கருவாலி மரம் வெட்டி வீழ்த்தப்பட்டபின் அடிமரம் எஞ்சியிருப்பதுபோல் அது இருக்கும். அந்த அடிமரம்தான் தூய வித்தாகும், என்றார்.

Holydivine