Isaiah - Chapter 57
Holy Bible

1 நேர்மையாளர் அழிந்து போகின்றனர்: இதை மனத்தில் கொள்வார் எவரும் இல்லை: இறைப்பற்றுடையோர் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்: அதைக் கருத்தில் கொள்வார் எவரும் இல்லை: ஏனெனில் நேர்மையாளர் தீமையின் முன்னின்று எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.
2 அவர்கள் அமைதிக்குள் சென்றடைகின்றனர்: நேர்மையான வழிமுறையைப் பின்பற்றுவோர் தம் இறுதிப் படுக்கைகளில் இளைப்பாறுகின்றனர்.
3 சூனியக்காரியின் மக்களே, விபசாரன், விலைமாதின் வாரிசே, அருகில் வாருங்கள்.
4 யாரைப் பார்த்து நீங்கள் நகைக்கின்றீர்கள்? யாருக்கு எதிராக வாயைப்பிளந்து நாக்கை நீட்டுகின்றீர்கள்? நீங்கள் கொடுமையின் பிள்ளைகளன்றோ! பொய்மையின் சந்ததியன்றோ!
5 கருவாலி மரத் தோப்பிலும், பசுமையான மரம் ஒவ்வொன்றின் கீழும் காமத்தீயால் எரிகிறீர்கள்: பள்ளத்தாக்குகளில், பாறைப் பிளவுகளின் அடிப்புறத்தில், உங்கள் பச்சிளங் குழந்தைகளைக் கொல்கிறீர்கள்.
6 பள்ளத்தாக்கின் வழவழப்பான கற்களினின்று உருவான சிலைகளே உன் பங்கு: ஆம், அவையே உன் பங்கு: அவற்றிற்கு நீ நீர்மப்பலியை ஊற்றியுள்ளாய்: உணவுப் படையலைப் படைத்துள்ளாய்: இவற்றால் நான் அமைதி அடைவேனோ?
7 வானாளவ உயர்ந்து நிற்கும் மலைமேல் உன் மஞ்சத்தை வைத்துள்ளாய்: பலிசெலுத்துமாறு அங்கு ஏறிப்போனாய்.
8 கதவுக்கும் கதவின் நிலைக்கும் பின்னால் உன் நினைவுக்குறியை வைத்தாய்: என்னை விட்டுவிட்டு உன் மஞ்சத்தைத் திறந்தாய்: ஏறிச்சென்று அதை விரிவாக்கினாய்: நீ எவருடைய படுக்கையை விரும்பினாயோ, அவர்களோடு ஓர் உடன்பாடு செய்து கொண்டாய்: அவர்களின் திறந்த மேனியைக் கண்டாய்.
9 நீ எண்ணெயுடன் மோலேக்கிடம் சென்றாய்: நறுமணப் பொருட்களைப் பெருக்கிக் கொண்டாய்: தொலை நாடுகளுக்கு உன் தூதர்களை அனுப்பினாய்: பாதாளம் மட்டும் அனுப்பினாய்.
10 உன் வழிப்பயணம் தொலைவானதால் களைத்துப் போனாய்: ஆயினும், இது வீண் என்று நீ சொல்லவில்லை: உன் கையில் புதியதோர் ஆற்றல் பெற்றாய்: ஆதலால் நீ சோர்ந்து போகவில்லை.
11 யாருக்கு நீ அஞ்சி நடுங்கினாய்? நீ என்னிடம் பொய் சொன்னாயே! நீ என்னை நினைவுகூரவில்லை: என்னைப் பற்றி உன் மனத்தில் எண்ணவுமில்லை! வெகுகாலமாய் நான் அமைதியாய் இருந்ததால் அன்றோ நீ எனக்கு அஞ்சாதிருக்கின்றாய்?
12 உன் நேர்மையையும் செயல்களையும் எடுத்துரைப்பேன்: அவை உனக்கு உதவா.
13 நீ துணை வேண்டிக் குரல் எழுப்பும்போது, நீ திரட்டிய சிலைகள் உன்னை விடுவிக்கட்டும்! காற்று அவை அனைத்தையும் அடித்துக் கொண்டுபோம்: வெறும் மூச்சே அவற்றை ஊதித் தள்ளிவிடும்: என்னிடம் அடைக்கலம் புகுவோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்: என் திருமலையை உடைமையாய்ப் பெறுவர்.
14 அமையுங்கள்: பாதையை அமையுங்கள்: அதைத் தயார் செய்யுங்கள்: என் மக்களின் வழியிலிருக்கும் தடையை அகற்றுங்கள் என்று கூறப்படும்.
15 உயர்ந்தவரும் உன்னதரும் காலம் கடந்து வாழ்பவரும், தூயவர் என்ற பெயரைக் கொண்டவரும் கூறுவது இதுவே: உயர்ந்த தூய இடத்தில் நான் உறைகின்றேன்: நொறுக்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்: நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான்
16 ஏனெனில், என்றென்றும் நான் குற்றஞ்சாட்டமாட்டேன்: எப்பொழுதும் சினம் கொண்டிருக்கமாட்டேன்: ஏனெனில், நான் தோற்றுவித்த உயிர் மூச்சாகிய மனித ஆவி என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும்.
17 பேராசை என்னும் தீமையை முன்னிட்டு நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து, அவனை அடித்து நொறுக்கினேன்: சீற்றம் கொண்டு என்னை அவனுக்கு மறைத்துக் கொண்டேன்: அவனோ என்னைவிட்டு விலகி மனம்போன போக்கிலே சென்றான்.
18 அவன் சென்ற பாதைகளைக் கண்டேன்: ஆயினும் அவனைக் குணமாக்குவேன்: அவனை நடத்திச் சென்று அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளிப்பேன்.
19 அவனுக்காக அழுவோரின் உதடுகளில் நன்றி ஒலி எழச்செய்வேன்: அமைதி! தொலையில் இருப்போருக்கும் அருகில் இருப்போருக்கும் அமைதி! என்கிறார் ஆண்டவர். அவர்களை நான் நலமடையச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.
20 கொடியவரோ கொந்தளிக்கும் கடல்போல் இருக்கின்றனர்: அந்தக் கடலால் அமைதியாயிருக்க இயலாது: அதன் நீர்த்திரள்கள் சேற்றையும் சகதியையும் கிளறிவிடுகின்றன:
21 கொடியவர்களுக்கு அமைதியே இல்லை, என்கிறார் என் கடவுள்.

Holydivine