Isaiah - Chapter 52
Holy Bible

1 விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்: திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்: விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான்.
2 சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எழுந்துநில்: அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
3 ஆண்டவர் கூறுவது இதுவே: விலையின்றி விற்கப்பட்டீர்கள்: பணமின்றி மீட்கப்படுவீர்கள்.
4 ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: முன்னாளில் என் மக்கள் தங்கி வாழ்வதற்கு எகிப்திற்குச் சென்றார்கள்: அசீரியன் காரணம் எதுவுமின்றி அவர்களை ஒடுக்கினான்.
5 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது? என்கிறார் ஆண்டவர். ஈட்டுத்தொகை செலுத்தாது என் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்: அவர்களை ஆளுவோர் நற்பெருமை பேசுகின்றனர்: எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகின்றது, என்கிறார் ஆண்டவர்.
6 ஆதலால் என் மக்கள் எனது பெயரை அறிந்து கொள்வார்கள். இதைச் சொல்லுகிறவர் நானே என்பதை அந்நாளில் உணர்ந்து கொள்வார்கள்: இதோ, நான் இங்கே இருக்கின்றேன்.
7 நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, உன் கடவுள் அரசாளுகின்றார் என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!
8 இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்: அவர்கள் அக்களிப்பு ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்: ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர்.
9 எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.
10 பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்: மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
11 திரும்பிச் செல்லுங்கள், திரும்பிச் செல்லுங்கள்: அங்கிருந்து வெளியேறுங்கள்: தீட்டானதைத் தொடாதீர்கள்: ஆண்டவரின் கலங்களை ஏந்திச்செல்வோரே, அந்நாட்டினின்று வெளியேறுங்கள்: உங்களையும் தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள்.
12 நீங்கள் அவசரப்பட்டு வெளியேறப் போவதில்லை: தப்பியோடுவது போல் செல்வதுமில்லை: ஏனெனில், ஆண்டவர் உங்கள்முன்னே செல்வார்: இஸ்ரயேலின் கடவுள் உங்கள்பின்னே பாதுகாப்பாய் இருப்பார்.
13 இதோ, என் ஊழியர் சிறப்படைவார்: அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.
14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்: அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது: மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.
15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்: அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்: ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்: தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.

Holydivine