Isaiah - Chapter 27
Holy Bible

1 அந்நாளில் ஆண்டவர் தம் கொடிய, பெரிய, வலிமைமிகு வாளால் லிவியத்தான் என்னும் விரைந்தோடும் பாம்பை-லிவியத்தான் என்னும் நெளிந்தோடும் பாம்பை-தண்டிப்பார்: கடலில் இருக்கும் அந்தப் பெரும் நாகத்தை அவர் வெட்டி வீழ்த்துவார்.
2 அந்நாளில் ஒரு கனிமிகு திராட்சைத்தோட்டம் இருக்கும்: அதைப்பற்றிப் பாடுங்கள்.
3 ஆண்டவராகிய நானே அதன் பாதுகாவலர்: இடையறாது அதற்கு நான் நீர் பாய்ச்சுகின்றேன்: எவரும் அதற்குத் தீங்கு விளைவிக்காதவாறு இரவும் பகலும் அதற்குக் காவலாய் இருக்கின்றேன்.
4 சினம் என்னிடம் இல்லை: நெருஞ்சியையும் முட்புதரையும் என்னோடு போரிடச் செய்தவன் எவன்? நான் அவற்றிற்கு எதிராக அணி வகுத்துச்சென்று, அவற்றை ஒருங்கே நெருப்புக்கு இரையாக்குவேன்.
5 அவர்கள் என்னைப் புகலிடமாகக் கொண்டு வலிமை பெறட்டும்: என்னோடு அவர்கள் ஒப்புரவு செய்து கொள்ளட்டும், என்னோடு அவர்கள் சமாதானம் செய்து கொள்ளட்டும்.
6 வருங்காலத்தில் யாக்கோபு வேரூன்றி நிற்பான்: இஸ்ரயேல் பூத்து மலருவான்: உலகத்தையெல்லாம் கனிகளால் நிரப்புவான். 
7 அவனை அடித்து நொறுக்கியோரை ஆண்டவர் அடித்து நொறுக்கியது போல், அவனையும் அவர் அடித்து நொறுக்கியது உண்டோ? அவனை வெட்டி வீழ்த்தியோரை அவர் வெட்டி வீழ்த்தியதுபோல், அவனையும் அவர் வெட்டி வீழ்த்தியது உண்டோ?
8 துரத்தியடித்து வெளியேற்றியதன் மூலம் அவர் அவனோடு போராடினார்: கீழைக்காற்றின் நாளில் சூறைக்காற்றால் அவனைத் தூக்கி எறிந்தார்.
9 ஆதலால் இதன் வாயிலாய் யாக்கோபின் குற்றத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும். அவனது பாவம் அகற்றப்பட்டதன் முழுப் பயன் இதுவே: சுண்ணாம்புக் கற்களை உடைத்துத் தூள் தூளாக்குவது போல அவர் அவர்களின் பலிபீடக் கற்களுக்குச் செய்வார்: அசேராக் கம்பங்களும் தூபபீடங்களும் நிலைநிற்காதவாறு
10 அரண் சூழ்ந்த நகரம் தனித்து விடப்பட்டுள்ளது: குடியிருப்பாரின்றிப் பாழாய்க் கிடக்கிறது. பாலைநிலம் போல் புறக்கணிக்கப்பட்டுள்ளது: ஆங்கே, கன்றுக்குட்டி மேய்கின்றது, படுத்துக்கிடக்கின்றது: அதில் தழைத்துள்ளவற்றைத் தின்று தீர்க்கின்றது.
11 உலர்ந்த அதன் கிளைகள் முறிக்கப்படுகின்றன: பென்டிர் வந்து அவற்றைச் சுட்டெறிப்பர்: ஏனெனில் உணர்வற்ற மக்களினம் அது: ஆதலால், அவர்களைப் படைத்தவர் அவர்கள் மீது இரக்கம் காட்டார்: அவர்களுக்கு ஆதரவு அருளார்.
12 அந்நாளில் ஆண்டவர் பேராற்றின் வாய்க்கால் முதல் எகிப்தின் பள்ளத்தாக்குவரை புணையடிப்பார்: இஸ்ரயேல் மக்களே, நீங்கள் ஒருவர்பின் ஒருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.
13 அந்நாளில் பெரியதோர் எக்காளம் முழங்கும். அப்பொழுது, அசீரியா நாட்டில் சிதறுண்டோரும் எகிப்து நாட்டுக்குத் துரத்தப்பட்டோரும் திரும்பி வருவர். எருசலேமின் திருமலையில் அவர்கள் ஆண்டவரை வழிபடுவார்கள்.

Holydivine