Wisdom - Chapter 11
Holy Bible

1 தூய இறைவாக்கினர் ஒருவரின் வாயிலாக இஸ்ரயேலர்களுடைய செயல்களை ஞானம் சிறப்புறச் செய்தது.
2 குடியிருப்பாரற்ற பாழ்வெளி வழியாக அவர்கள் பயணம் செய்தார்கள்: மனித நடமாட்டமற்ற இடங்களில் தங்கள் கூடாரங்களை அமைத்தார்கள்.
3 தங்கள் பகைவர்களை எதிர்த்து நின்றார்கள்: போரிட்டு எதிரிகளைத் துரத்தினார்கள்.
4 இஸ்ரயேலர்களுக்குத் தாகம் எடுத்தபோது உம்மை மன்றாடினார்கள். உடனே செங்குத்தாக பாறைகளிலிருந்து தண்ணீர் வழிந்தோடியது. கடினமான பாறையிலிருந்து அவர்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டார்கள்.
5 எவற்றால் பகைவர்கள் தண்டிக்கப்பட்டார்களோ அவற்றாலேயே சிக்கலான நேரங்களில் இஸ்ரயேலர் நன்மை அடைந்தார்கள்.
6 குழந்தைகளைக் கொல்லவேண்டும் என்று எதிரிகள் பிறப்பித்திருந்த ஆணையைக் கண்டிக்க, வற்றாத ஊற்றிலிருந்து ஓடும் ஆற்று நீருக்கு மாறாக, குருதியால் கலங்கி மாசுபட்ட நீரை அவர்களுக்குக் கொடுத்தீர்:
7 இஸ்ரயேலருக்கோ எதிர்பாரா வகையில் மிகுதியான தண்ணீர் வழங்கினீர்.
8 அவர்களுடைய பகைவரை எவ்வாறு தண்டித்தீர் என்பதை அவ்வேளையில் அவர்களை வாட்டிய தாகத்தால் காட்டினீர்.
9 இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட பொழுது இரக்கத்தால் பயிற்றுவிக்கப்பட்டனர் என்றும், கடவுள் சினம்கொண்டு தீர்ப்பளிக்கும்பொழுது இறைப்பற்றில்லாதவர்கள் எவ்வாறு வதைக்கப்படுவார்கள் என்றும் இதன் வாயிலாக அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
10 ஏனெனில் ஒரு தந்தை எச்சரிப்பதுபோல, நீர் இஸ்ரயேலரைச் சோதித்தீர். ஆனால் இரக்கமற்ற மன்னர் தீர்ப்பு அளிப்பதுபோல, நீர் எதிரிகளைக் கூர்ந்து சோதித்துப் பார்த்தீர்.
11 இஸ்ரயேலர்களுக்கு அருகில் இருந்தபோதும், தொலைவில் இருந்தபோதும், எகிப்தியர்கள் பெருந்துயருற்றார்கள்.
12 இருமடங்கு துயரம் அவர்களை ஆட்கொண்டது. கடந்த கால நிகழ்ச்சிகளை நினைத்து, ஏங்கிப் பெருமூச்சு விட்டார்கள்.
13 தங்களுக்கு வந்துற்ற தண்டனைகளால் நீதிமான்கள் நன்மை அடைந்தார்கள் என்று எகிப்தியர்கள் கேள்வியுற்றபோது, அது ஆண்டவரின் செயல் என்று உணர்ந்து கொண்டார்கள்.
14 எவரை முன்னொரு காலத்தில் குழந்தையாக இருந்தபோது அவர்கள் வெளியே எறிந்தார்களோ, எவரை நகைத்துப் புறக்கணித்தார்களோ, அவர்களைக் குறித்தே நிகழிச்சிகளின் முடிவில் வியப்புற்றார்கள். ஏனெனில், நீதிமான்கள் கண்டிராத தாகத்தை எதிரிகள் கொண்டிருந்தார்கள்.
15 எகிப்தியர்கள் பகுத்தறிவற்ற பாம்புகளையும் பயனற்ற விலங்குகளையும் வணங்கினார்கள். இவ்வாறு நெறி தவறத் தூண்டிய அவர்களுடைய அறிவற்ற தீய எண்ணங்களுக்காக அவர்களைப் பழிவாங்கும் பொருட்டு, பகுத்தறிவில்லா உயிரினங்களின் கூட்டத்தை அவர்கள்மீது நீர் ஏவி விட்டீர்.
16 ஒருவர் எதனால் பாவம் செய்கிறாரோ அதனாலேயே அழிந்து போவார் என்பதை இதனால் அவர்களுக்கு அறிவுறுத்தினீர்.
17 ஏனெனில் உருவமற்ற பருப்பொருளைக் கொண்டு உலகைப் படைத்த எல்லாம் வல்ல உமது கைவன்மைக்கு கரடிகளின் கூட்டத்தையோ துணிவுள்ள சிங்கங்களையோ அவர்கள்மிது அனுப்பி வைப்பது முடியாததன்று.
18 புதிதாகப் படைக்கப்பட்ட, முன்பின் பார்த்திராத, சீற்றம் நிறைந்த காட்டு விலங்குகளையோ, வெப்ப மூச்சுவிடும் விலங்குகளையோ, ஏப்பமாக அடர்ந்த புகைப்படலத்தை வெளியிடும் விலங்குகளையோ, கண்களில் தீப்பொறி பறக்கும் விலங்குகளையோ, அவர்கள்மீது அனுப்பி வைப்பது உம் கைவன்மைக்கு இயலாததன்று.
19 அவை மனிதர்களைத் தாக்கி முற்றிலும் அழித்துவிடக் கூடியவை மட்டுமல்ல, தங்கள் தோற்றத்தாலேயே அவர்களை அச்சுறுத்திக் கொன்றுவிடக்கூடியவை.
20 இவை இன்றியே மனிதர்கள் ஒரே மூச்சினால் வீழ்த்தப்பட்டிருப்பார்கள். நீதியால் துரத்தப்பட்டு, உமது ஆற்றலின் மூச்சினால் சிதறடிக்கப்பட்டிருப்பார்கள். ஆயினும் நீர் அனைத்தையும் அளவோடும் கணக்கோடும் நிறையோடும் ஏற்பாடு செய்தீர்.
21 உமது மாபெரும் ஆற்றலை எப்போது நீர் காட்ட இயலும். உமது கைவன்மையை எதிர்த்து நிற்க எவரால் இயலும்?
22 தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் தூசிபோலவும் நிலத்தின் மீது விழும் காலைப்பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம் முழுவதும் உம் கண்முன் உள்ளது.
23 நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார்மீதும் இரங்குகின்றீர்: மனிதர்கள் தங்களுடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர்.
24 படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்!
25 உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது, உம்மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான் காப்பாற்றப்படக்கூடும்?
26 ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்: ஏனெனில் அவை யாவும் உம்முடையன.

Holydivine