Wisdom - Chapter 3
Holy Bible

1 நீதி மான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது.
2 அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது.
3 அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.
4 மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
5 சிறிதளவு அவர்கள் தண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.
6 பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்: எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார்.
7 கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள்: அரிதாள் நடுவே தீப்பொறிபோலப் பரந்து சுடர்விடுவார்கள்:
8 நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்: மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார்.
9 அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும். 
10 ஆனால் இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப தண்டிக்கப்படுவார்கள்: ஏனெனில் அவர்கள் நீதிமான்களைப் புறக்கணித்து, ஆண்டவரை எதிர்த்தார்கள்.
11 ஞானத்தையும் நற்பயிற்சியையும் இகழ்பவர்கள் இரங்கத்தக்கவர்கள். அவர்களது நம்பிக்கை வீணானது: அவர்கள் உழைப்பு வெறுமையானது: அவர்களின் செயல்கள் பயனற்றவை.
12 அவர்களுடைய மனைவியர் அறிவற்றவர்கள்: அவர்களின் பிள்ளைகள் தீயவர்கள்: அவர்களுடைய வழிமரபினர் சபிக்கப்பட்டவர்கள்.
13 தூய்மை இழக்காத, தவறான உடலுறவு கொள்ளாத மலடி பேறுபெற்றவர்: மனிதரைக் கடவுள் சந்திக்க வரும்போது அப்பெண் கனி தருவார்.
14 நெறிகெட்ட செயல்களைச் செய்யாத, ஆண்டவருக்கு எதிராகத் தீயவற்றைத் திட்டமிடாத அண்ணகர்களும் பேறுபெற்றோர். அவர்களது பற்றுறுதிக்குச் சிறப்புக் கைம்மாறு வழங்கப்படும்: ஆண்டவரின் கோவிலில் அவர்களுக்கு இனிமைமிக்க பங்கு அளிக்கப்படும்.
15 நல்ல உழைப்பின் பயன் புகழ்ச்சிக்குரியது. அறிவுத்திறனின் ஆணிவேர் அசைவுறாதது.
16 விபசாரிகளின் மக்கள் முதிர்ச்சி அடையமாட்டார்கள்: தவறான உடலுறவால் பிறப்பவர்கள் வேரோடு அழிவார்கள்.
17 அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தாலும், அவர்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்: முதுமையின் இறுதிக் கட்டத்திலும் அவர்கள் மதிப்புப் பெறமாட்டார்கள்.
18 அவர்கள் இளமையில் இறந்தால் அவர்களுக்கு நம்பிக்கை இராது: தீர்ப்புநாளில் ஆறுதல் கிடைக்காது.
19 நேர்மையற்ற தலைமுறையின் முடிவு மிகக் கொடியது.

Holydivine