Wisdom - Chapter 18
Holy Bible

1 உம் தூயவர்களுக்கோ பேரொளி இருந்தது. அவர்களுடைய குரலை எதிரிகள் கேட்டார்கள். ஆனால் அவர்களின் உருவங்களைக் காணவில்லை. தங்களைப்போலத் துன்புறாததால் தூயவர்களைப் பேறுபெற்றோர் என்று கருதினார்கள்.
2 அப்பொழுது உம் தூயவர்கள் அவர்களுக்குத் தீமை எதுவும் செய்யாததால், எகிப்தியர்கள் நன்றியுணர்வு கொண்டிருந்தார்கள்; தங்களது பழைய பகைமைக்கு மன்னிப்புக் கேட்டார்கள். 
3 இருளுக்கு மாறான ஒளிப்பிழம்பாம் நெருப்புத் தூணை உம் மக்களுக்குக் கொடுத்தீர். முன்பின் அறியாத பாதையில் அது அவர்களுக்கு வழி காட்டியாய் விளங்கியது: மாட்சி பொருந்திய அப்பயணத்தில் அது வெம்மை தணிந்த கதிரவனாய் இருந்தது.
4 திருச்சட்டத்தின் அழியாத ஒளியை உலகிற்கு வழங்க வேண்டிய உம் மக்களை எகிப்தியர்கள் சிறைப்பிடித்தார்கள். இவ்வாறு, அடைத்துவைத்தவர்களே இருளில் அடைக்கப்படவேண்டியது பொருத்தமே.
5 எகிப்தியர்கள் உம் தூயவர்களின் குழந்தைகளைக் கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு குழந்தை மட்டும் சாவிலிருந்து காப்பாற்றப்பட்டது. எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக அவர்களின் பெருந்தொகையான குழந்தைகளின் மாய்ந்துவிட்டீர்: அவர்கள் அனைவரையும் பெரும் வெள்ளத்தில் ஒருசேர மூழ்கடித்தீர்
6 தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது.
7 நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
8 எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.
9 நல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்: நன்மைகளையும் இடர்களையும் ஒன்றுபோலப் பகிர்ந்து கொள்வார்கள் எனினும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்: மூதாதையர்களின் புகழ்ப்பாக்களை அதே வேளையில் பாடிக்கொண்டிருந்தார்கள்.
10 ஆனால் பகைவர்கள் கதறியழுத குரல்கள் எதிரொலித்தன: தங்கள் குழந்தைகளுக்காக எழுப்பிய புலம்பல்கள் எங்கும் பரவின.
11 அடிமையும் தலைவரும் ஒரே வகையில் தண்டிக்கப்பட்டார்கள்: குடிமகனும் மன்னரும் ஒரே பாங்காய்த் துன்புற்றார்கள்:
12 எண்ணிலடங்காதோர் ஒரே வகைச் சாவுக்கு உள்ளாகி, எல்லாரும் ஒருமிக்க மடிந்து கிடந்தனர். உயிரோடிருந்தவர்களால் அவர்களைப் புதைக்கவும் இயலவில்லை. அவர்களின் பெருமதிப்பிற்குரிய வழித் தோன்றல்கள் ஒரே நொடியில் மாண்டு போனார்கள்.
13 மந்திரவாதிகளுக்குச் செவிசாய்த்து அவர்கள் எதையுமே நம்ப மறுத்துவிட்டாலும், தங்கள் தலைப்பேறுகள் கொல்லப்பட்ட போது, இம்மக்கள் இறைமக்கள் என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.
14 எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில்,
15 எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர்வீரனைப்போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது.
16 உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது: மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்தபோதிலும், விண்ணகத்தை தொட்டுக் கொண்டிருந்தது.
17 உடனே அச்சுறுத்தும் கனவுக் காட்சிகள் அவர்களைக் கலங்கடித்தன: எதிர்பாராத பேரச்சம் அவர்களைத் தாக்கியது.
18 அங்கு ஒருவரும் இங்கு ஒருவருமாக அவர்கள் குற்றுயிராய் விழுந்தபோது, தாங்கள் மடிவதன் காரணத்தை வெளிப்படுத்தினார்கள்.
19 ஏனெனில் தாங்கள் பட்ட துன்பத்தின் காரணத்தை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் சாகாதபடி அவர்களைத் தொல்லைப்படுத்திய கனவுகள் அதை முன்னறிவித்திருந்தன.
20 நீதிமான்களும் இறப்பை நுகர நேர்ந்தது. பாலைநிலத்தில் இருந்த மக்கள் கூட்டம் கொள்ளைநோயால் தாக்குண்டது. ஆயினும் உமது சினம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
21 குற்றமற்றவர் ஒருவர் அவர்களுக்காகப் பரிந்துபேச விரைந்தார்: திருப்பணி என்னும் தம் படைக்கலம் தாங்கியவராய், மன்றாட்டையும் பரிகாரத்திற்கான நறுமணப் புகையையும் ஏந்தியவராய், உமது சினத்தை எதிர்த்து நின்று அழிவை முடிவுறச் செய்தார்: இவ்வாறு, தாம் உம் அடியார் என்று காட்டினார்.
22 உடலின் வலிமையாலோ படைக்கலங்களின் ஆற்றலாலோ அவர் உமது சினத்தை மேற்கொள்ளவில்லை; ஆனால் எங்கள் மூதாதையர்க்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் உடன்படிக்கையையும் நினைவூட்டி வதைப்போனைத் தம் சொல்லால் தோல்வியுறச் செய்தார். 
23 செத்தவர்களின் பிணங்கள் ஒன்றன்மீது ஒன்று விழுந்து பெரும் குவியலாய்க் கிடந்தன. அப்போது அவர் குறுக்கிட்டு உமது சினத்தைத் தடுத்து நிறுத்தி, எஞ்சியிருந்தோரை அது தாக்காமல் செய்துவிட்டார்.
24 அவர் அணிந்திருந்த நீண்ட ஆடையில் உலகு அனைத்தும் பொறிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த நான்கு கல் வரிசையிலும் மூதாதையரின் மாட்சிமிகு பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவர் தலையில் இருந்த மணிமுடியில் உமது மாட்சி வரையப்பட்டிருந்தது.
25 அழிப்போன் இவற்றைக் கண்டு பின்வாங்கினான். அச்சம் அவனை ஆட்கொண்டது. உமது சினத்தை ஓரளவு சுவைத்ததே அவனுக்குப் போதுமானது.

Holydivine