Wisdom - Chapter 16
Holy Bible

1 எனவே அவர்கள் அவற்றைப் போன்ற உயிரினங்களால் தக்கவாறு தண்டிக்கப்பட்டார்கள்: விலங்குக் கூட்டத்தால் வதைக்கப்பட்டார்கள்.
2 இத்தகைய தண்டனைக்கு மாறாக நீர் உம் மக்களுக்குப் பரிவு காட்டினீர்: சுவை மிகுந்த அரிய உணவாகிய காடைகளை அவர்களுக்கு உண்ணக் கொடுத்தீர்: இவ்வாறு, அவர்களது ஆவலைத் தணித்தீர்.
3 எகிப்தியர்கள் உணவு அருந்த விரும்பியபோதிலும், அவர்கள்மீது ஏவப்பட்ட அருவருக்கத்தக்க விலங்குகளால் உணவின்மேல் அவர்களுக்கு இருந்த நாட்டமே அற்றுப் போயிற்று. உம் மக்களோ சிறிது காலம் வறுமையில் வாடியபின் அருஞ்சுவை உணவை உண்டார்கள்.
4 ஏனெனில் கொடுமை செய்தவர்கள் கடுமையான பற்றாக்குறைக்கு ஆளாகவேண்டியிருந்தது. உம் மக்களுக்கோ அவர்களுடைய பகைவர்கள் எவ்வாறு அல்லல் படுகிறார்கள் என்று மட்டும் காட்டவேண்டியிருந்தது.
5 உம் மக்கள்மேல் காட்டு விலங்குகள் கடுஞ்சீற்றத்துடன் பாய்ந்தபோது, நெளிந்து வந்த நச்சுப் பாம்புகளின் கடியால் அவர்கள் அழிந்துகொண்டிருந்தபோது, உமது சினம் இறுதிவரை நீடிக்கவில்லை.
6 எச்சரிக்கப்படவேண்டிச் சிறிது காலம் அவர்கள் துன்பத்திற்கு உள்ளானார்கள். உமது திருச்சட்டத்தின் கட்டளையை நினைவூட்ட மீட்பின் அடையாளம் ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 
7 அப்போது அதை நோக்கித் திரும்பியோர் தாங்கள் பார்த்த பொருளால் அன்று, அனைவருக்கும் மீட்பரான உம்மாலேயே மீட்புப் பெற்றார்கள்.
8 இதனால் எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுவிப்பவர் நீரே என்று எங்கள் பகைவர்களை நம்பச் செய்தீர்.
9 ஏனெனில் அவர்கள் வெட்டுக்கிளிகளாலும் ஈக்களாலும் கடியுண்டு மாண்டார்கள். அவர்கள் உயிரைக் காப்பதற்கு மருந்து எதுவும் காணப்படவில்லை. அவர்கள் இத்தகையவற்றால் தண்டிக்கப்படத் தக்கவர்கள்.
10 ஆனால் நச்சுப் பாம்புகளின் பற்களால்கூட உம் மக்களை வீழ்த்த முடியவில்லை. உமது இரக்கம் அவர்களுக்குத் துணைநின்று நலம் அளித்தது.
11 உம் சொற்களை அவர்கள் நினைவுகூரும் பொருட்டு அவர்கள் கடிபட்டார்கள்: ஆனால் உடனே நலம் அடைந்தார்கள். அவர்கள் ஆழ்ந்த மறதிக்கு உள்ளாகி, உம் பரிவை உதறித்தள்ளாதபடி இவ்வாறு நடந்தது.
12 பச்சிலையோ களிம்போ அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை: ஆனால், ஆண்டவரே, உமது சொல்லே எல்லா மனிதர்க்கும் நலம் அளிக்கிறது.
13 வாழ்வின்மேலும் சாவின்மேலும் உமக்கு அதிகாரம் உண்டு. மனிதர்களைப் பாதாளத்தின் வாயில்வரை கொண்டு செல்கிறீர்: மீண்டும் அங்கிருந்து கொண்டு வருகிறீர்.
14 மனிதர் தம் தீய பண்பினால் ஒருவரைக் கொன்று விடுகின்றனர். ஆனால் பிரிந்த உயிரை அவர்களால் திருப்பிக் கொணர முடியாது. சிறைப்பட்ட ஆன்மாக்களை அவர்களால் விடுவிக்கவும் முடியாது.
15 ஒருவரும் உமது கையினின்று தப்ப முடியாது.
16 உம்மை அறிய மறுத்துவிட்ட இறைப்பற்றில்லாதவர்கள் உமது கைவன்மையால் வதைக்கப்பட்டார்கள்: பேய்மழையாலும் கல்மழையாலும் கடும் புயலாலும் துன்புறுத்தப்பட்டு, தீயால் அறவே அழிக்கப்பட்டார்கள்.
17 எல்லாவற்றையும்விட நம்பமுடியாதது எது என்றால், அனைத்தையும் அவிக்கக்கூடிய தண்ணீரில் அந்த நெருப்பு இன்னும் மிகுதியாய்க் கொழுந்துவிட்டு எரிந்ததுதான்! ஏனெனில் அனைத்துலகும் நீதிமான்களுக்காகப் போராடுகிறது.
18 கடவுளின் தண்டனைத் தீர்ப்பு தங்களைப் பின்தொடர்கிறது என்பதை இறைப்பற்றில்லாதவர்கள் கண்டுணருமாறும், அவர்களுக்கு எதிராய் அனுப்பப்பட்ட உயிரினங்கள் எரிந்து விடாதவாறும், நெருப்பின் அனல் சில வேளைகளில் மட்டுப்படுத்தப்பட்டது.
19 மற்றும் சில வேலைகளில் நீதியற்ற நாட்டின் விளைச்சலை அழிக்கவே தண்ணீர் நடுவிலும் அந்நெருப்பு முன்னைவிட மிகக் கடுமையாக எரிந்தது.
20 இவற்றுக்கு மாறாக உம் மக்களை வானதூதரின் உணவால் ஊட்டி வளர்த்தீர்: எல்லா இனிமையும் பல்சுவையும் கொண்ட உணவை, அவர்களது உழைப்பு இல்லாமலே படைக்கப்பட்ட உணவை வானத்திலிருந்து அவர்களுக்கு அளித்தீர்.
21 நீர் அளித்த உணவூட்டம் உம் பிள்ளைகள்பால் நீர் கொண்டிருந்த இனிய உறவைக் காட்டியது; ஏனெனில் அந்த உணவு உண்போரின் சுவையுணர்விற்கு ஏற்றவாறு மாறி, அவரவர் விரும்பிய சுவை தந்தது. 
22 கல்மழையில் கனன்றெரிந்து, கடும் மழையில் சுடர்விட்ட நெருப்பே பகைவர்களுடைய விளைச்சலை அழித்தது என்று அவர்கள் அறிந்துகொள்ளுமாறு, பனியும் பனிக்கட்டியும் உருகிடாமல் நெருப்பின் அனலைத் தாங்கின.
23 ஆனால் அதே நெருப்பு, நீதிமான்கள் ஊட்டம் பெறும்படி தனது இயல்பான ஆற்றலை மீண்டும் மறந்துவிட்டது.
24 படைத்தவரான உமக்கு ஊழியம் புரிகின்ற படைப்பு நெறிகெட்டோரைத் தண்டிக்க முனைந்து நிற்கிறது: உம்மை நம்பினோரின் நலனை முன்னிட்டு அது பரிவோடு தணிந்து போகிறது.
25 எனவே அந்நேரத்திலேயே படைப்பு எல்லா வகையிலும் தன்னை மாற்றியமைத்துக் கொண்டது: தேவைப்பட்டவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, எல்லாரையும் பேணிக் காக்கும் உமது வள்ளன்மைக்குப் பணிந்தது.
26 ஆண்டவரே, மனிதரைப் பேணிக்காப்பது நிலத்தின் விளைச்சல் அல்ல. மாறாக, உமது சொல்லே உம்மை நம்பினோரைக் காப்பாற்றுகிறது என நீர் அன்புகூரும் உம் மக்கள் இதனால் அறிந்துகொள்வார்கள்.
27 நெருப்பினால் எரிபடாதது காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றாலேயே வெப்பம் அடைந்து எளிதில் உருகிற்று.
28 கதிரவன் எழுமுன்பே மக்கள் எழுந்து உமக்கு நன்றி கூறவும் வைகறை வேளையில் உம்மை நோக்கி மன்றாடவும் வேண்டும் என்று இதனால் உணர்த்தப்பட்டது.
29 ஏனெனில் நன்றி கொன்றோரின் நம்பிக்கை குளிர்காலத்து உறைபனிபோல் உருகிவிடும்: பயனற்ற தண்ணீர்போல் ஓடிவிடும்.

Holydivine