Job - Chapter 10
Holy Bible

1 என் உள்ளம் என் வாழ்வை அருவருக்கின்றது: என் ஆற்றாமையைத் தாராளமாய்க் கொட்டித் தீர்ப்பேன்: உள்ளத்தில் கசப்பினை நான் உரைத்திடுவேன்.
2 நான் கடவுளிடம் சொல்வேன்: என்னைக் கண்டனம் செய்யாதீர்: என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம் என்னவெனச் சாற்றுவீர்.
3 என்னை ஒடுக்குவதும் உமது கையின் படைப்பை இகழ்வதும் உலுத்தர் சூழ்ச்சயில் உளம் மகிழ்வதும் உமக்கு அழகாமோ?
4 ஊனக் கண்களா உமக்கு உள்ளன? உண்மையில், மானிடப்பார்வையா உமது பார்வை?
5 மானிட நாள்கள் போன்றவோ உம் நாள்கள்? மனிதரின் வாழ்நாள் அனையவோ உம் ஆண்டுகள்?
6 பின், ஏன் என் குற்றங்களைத் துருவிப் பார்க்கிறீர்? ஏன் என் பாவங்களைக் கிளருகின்றீர்?
7 நான் குற்றமற்றவன் என நீர் அறிந்தாலும், உம் கையினின்று என்னைத் தப்புவிப்பவர் ஒருவருமில்லை.
8 என்னை வனைந்து வடிவமைத்து உண்டாக்கின உம் கைகள்: இருப்பினும், நீரே என்னை அழிக்கின்றீர்.
9 தயைகூர்ந்து நினைத்துப் பாரும்! களிமண்போல் என்னை வனைந்தீர்: அந்த மண்ணுக்கே என்னைத் திரும்பச் செய்வீரோ?
10 பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா? தயிர்போல் என்னை நீர் உறைக்கவில்லையா?
11 எலும்பும் தசைநாரும் கொண்டு என்னைப் பின்னினீர்: தோலும் சதையும் கொண்டு என்னை உடுத்தினீர்.
12 வாழ்வையும் இரக்கத்தையும் எனக்கு வழங்கினீர்: என் உயிர் மூச்சை உம் கரிசனை காத்தது.
13 எனினும், இவற்றை உம் உள்ளத்தில் ஒளித்திருந்தீர்: இதுவே உம் மனத்துள் இருந்ததென நான் அறிவேன்.
14 நான் பாவம் செய்தால், என்னைக் கவனிக்கிறீர்: என் குற்றத்தை எனக்குச் சுட்டிவிடகாட்டாது விடமாட்டீர்: நான் குற்றம் புரிந்தால் அதை என்மீது சுமத்தாது விடீர்.
15 நான் தீங்கு செய்தால், ஐயோ ஒழிந்தேன்! நான் நேர்மையாக இருந்தாலும் தலைதூக்க முடியவில்லை: ஏனெனில், வெட்கம் நிறைந்தாலும் வேதனையில் உள்ளேன்.
16 தலைநிமிர்ந்தால் அரிமாபோல் எனை வேட்டையாடுவீர்: உம் வியத்தகு செயல்களை எனக்கெதிராய்க் காட்டுவீர்:
17 எனக்கெதிராய்ச் சான்றுகளைப் புதுப்பிக்கிறீர்: என்மீது உமது சீற்றத்தைப் பெருக்குகிறீர்: எனக்கெதிராய்ப் போராட்டத்தைப் புதிதாக எழுப்புகிறீர்.
18 கருப்பையிலிருந்து என்னை ஏன் வெளிக் கொணர்ந்தீர்? கண் ஏதும் என்னைக் காணுமுன்பே நான் இறந்திருக்கலாகாதா?
19 உருவாகதவன் போலவே இருந்திருக்கக்கூடாதா? கருவறையிலிருந்தே கல்லறைக்குப் போயிருப்பேனே:
20 என்னுடைய நாள்கள் சிலமட்டுமே: என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால், மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்:
21 பின்னர், இருளும் இறப்பின் நிழலும் சூழ்ந்த திரும்ப இயலாத நாட்டிற்குப் போவேன்.
22 அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த இருண்ட நாடு: அங்கு ஒழுங்கில்லை: ஒளியும் இருள்போல் இருக்கும்.

Holydivine