Job - Chapter 32
Holy Bible

1 யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால் இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள்.
2 அப்பொழுது பூசியனும், இராமின் வீட்டைச் சார்ந்த பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ சீற்றம் அடைந்தான்.
3 யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால் அவர்மீது சினம் கொண்டான். மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான். ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை.
4 எலிகூ யோபிடம் பேச இதுவரை காத்திருந்தான். ஏனெனில், அவனை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள்.
5 அந்த மூவரும் தகுந்த மறுமொழி தரவில்லை எனக் கண்ட எலிகூ இன்னும் ஆத்திரம் அடைந்தான்.
6 ஆகவே பூசியனும் பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ பேசத் தொடங்கினான்: நான் வயதில் சிறியவன்: நீங்களோ பெரியவர். ஆகவே, என் கருத்தை உங்களிடம் உரைக்கத் தயங்கினேன்: அஞ்சினேன்.
7 நான் நினைத்தேன்: 'முதுமை பேசட்டும்: வயதானோர் ஞானத்தை உணர்த்தட்டும்.'
8 ஆனால், உண்மையில் எல்லாம் வல்லவரின் மூச்சே, மனிதரில் இருக்கும் அந்த ஆவியே உய்த்துணர்வை அளிக்கின்றது.
9 வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை: முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை.
10 ஆகையால் நான் சொல்கின்றேன்: எனக்குச் செவி கொடுத்தருள்க! நானும் என் கருத்தைச் சொல்கின்றேன்.
11 இதோ! உம் சொற்களுக்காகக் காத்திருந்தேன், நீங்கள் ஆய்ந்து கூறிய வார்த்தைகளை, அறிவார்ந்த கூற்றை நான் கேட்டேன்.
12 உங்களைக் கவனித்துக் கேட்டேன்: உங்களுள் எவரும் யோபின் கூற்று தவறென எண்பிக்கவில்லை. அவர் சொற்களுக்கு தக்க பதில் அளிக்கவுமில்லை.
13 எச்சரிக்கை! 'நாங்கள் ஞானத்தைக் கண்டு கொண்டோம்: இறைவனே அவர்மீது வெற்றி கொள்ளட்டும்: மனிதரால் முடியாது' என்று சொல்லாதீர்கள்!
14 என்னை நோக்கி யோபு தம்மொழிகளைக் கூறவில்லை: உங்கள் சொற்களில் அவருக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.
15 அவர்கள் மலைத்துப் போயினர்: மீண்டும் மறுமொழி உரையார்: அவர்கள் ஒரு வார்த்தையும் சொல்வதற்கில்லை.
16 அவர்கள் பேசவில்லை: நின்று கொண்டிருந்தாலும் பதில் சொல்லவில்லை: நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா?
17 நானும் எனது பதிலைக் கூறுவேன்: நானும் எனது கருத்தை நவில்வேன்.
18 ஏனெனில், சொல்லவேண்டியவை என்னிடம் நிறையவுள்ளன: என் உள்ளத்தில் ஆவி என்னை உந்துகின்றது.
19 இதோ! என் நெஞ்சம் அடைபட்ட திராட்சை இரசம் போல் உள்ளது: வெடிக்கும் புது இரசத் துருத்தி போல் உள்ளது.
20 நான் பேசுவேன்: என் நெஞ்சை ஆற்றிக் கொள்வேன்: வாய்திறந்து நான் பதில் அளிக்க வேண்டும்.
21 நான் யாரிடமும் ஒருதலைச் சார்பாய் இருக்கமாட்டேன்: நான் யாரையும் பொய்யாகப் புகழ மாட்டேன்.
22 ஏனெனில், பசப்பிப் புகழ எனக்குத் தெரியாது: இல்லையேல், படைத்தவரே விரைவில் என்னை அழித்திடுவார்.

Holydivine