Job - Chapter 6
Holy Bible

1 யோபு கூறிய பதிலுரையாவது:
2 ஓ! என் வேதனைகள் உண்மையாகவே நிறுக்கப்பட்டு, என் இன்னல்கள் அனைத்தும் சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே!
3 கடற்கரை மணலிலும் இப்போது அவை கனமானவை: பதற்றமான என் சொற்களுக்குக் காரணமும் அதுவே:
4 எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் தைத்துள்ளன: அவற்றின் நஞ்சு என் உயிரைக் குடிக்கின்றது: கடவுளின் அச்சுறுத்தல்கள் எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன.
5 காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க, அது கனைக்குமா? காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா?
6 சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா? துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா?
7 அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது: அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே!
8 ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்? நான் ஏங்குவதை இறைவன் ஈந்திடமாட்டாரா?
9 அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா? தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா?
10 அதுவே எனக்கு ஆறுதலாகும்: அழிக்கும் அல்லலிலும் அகமகிழ்வேன்: தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்: ஏனெனில் தூயவரின் சொற்களை மறுத்தேனில்லை.
11 நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது? என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது?
12 என் வலிமை கல்லின் வலிமையோ? என் சதை வெண்கலத்தாலானதோ?
13 இதோ! என்னில் உதவி ஏதுமில்லை: என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது.
14 அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர் எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர்.
15 காய்ந்துவிடும் காட்டாற்றுக் கண்ணிகள் போலும் சிற்றாறுகள்போலும் வஞ்சினத்தனர் என் உறவின் முறையார்.
16 அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்: அவற்றின் மேற்பகுதியை உறைபனி மூடி நிற்கும்.
17 வெப்பக் காலத்திலோ அவை உருகி மறைந்துபோம்: வெயில் காலத்திலோ அவை இடந்தெரியாது ஒழியும்.
18 வணிகர் கூட்டம் தம் வழியை மாற்றுகின்றது: பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது.
19 தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்: நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர்.
20 அவர்கள் நமிபியிருந்தனர்: ஆனால், ஏமாற்றமடைகின்றனர்: அங்கு வந்தடைந்தனர்: ஆனால் திகைத்துப் போகின்றனர்.
21 இப்போது நீங்களும் எனக்கு அவ்வாறே ஆனீர்கள்: என் அவலம் கண்டீர்கள்: அஞ்சி நடுங்குகின்றீர்கள்.
22 எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ, உம் செல்வத்திலிருந்து என் பொருட்டுக் கையூட்டுக் கொடும் என்றோ சொன்னதுண்டா?
23 எதிரியின் கையினின்று என்னைக் காப்பாற்றும் என்றோ, கொடியவர் பிடியினின்று என்னை மீட்டருளும் என்றோ நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா?
24 அறிவு புகட்டுக! அமைதியடைவேன்: என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக!
25 நேர்மையான சொற்கள் எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால், நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?
26 என் வார்த்தைகளைக் கண்டிக்க எண்ணலாமா? புலம்புவோரின் சொற்கள் காற்றுக்கு நிகராமா?
27 திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்: நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள்.
28 பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்: உங்கள் முகத்திற்கெதிரே உண்மையில் பொய் சொல்லேன்,
29 போதும் நிறுத்துங்கள்: அநீதி செய்ய வேண்டாம்! பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே:
30 என் நாவில் அநீதி உள்ளதா? என் அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா?

Holydivine