Job - Chapter 14
Holy Bible

1 பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு. வருத்தமோ மிகுதி.
2 மலர்போல் பூத்து அவர்கள் உலர்ந்து போகின்றனர்: நிழல்போல் ஓடி அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.
3 இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்? தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?
4 அழுக்குற்றதினின்று அழுக்கற்றதைக் கொணர முடியுமா? யாராலும் முடியவே முடியாது.
5 அவர்களுடைய நாள்கள் உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை உம்மிடம் உள்ளது: அவர்கள் கடக்க இயலாத எல்லையைக் குறித்தீர்.
6 எனவே அவர்களிடமிருந்து உம் பார்வையைத் திருப்பும்: அப்பொழுது, கூலியாள்கள் தம் நாள் முடிவில் இருப்பது போல், அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.
7 மரத்திற்காவது நம்பிக்கையுண்டு: அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்: அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.
8 அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும், அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,
9 தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்: இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.
10 ஆனால், மனிதர் மடிகின்றனர்: மண்ணில் மறைகின்றனர்: உயிர் போனபின் எங்கே அவர்கள்?
11 ஏரியில் தண்ணீர் இல்லாது போம்: ஆறும் வறண்டு காய்ந்துபோம்.
12 மனிதர் படுப்பர்: எழுந்திருக்கமாட்டார்: வானங்கள் அழியும்வரை அவர்கள் எழுவதில்லை: அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.
13 ஓ! என்னைப் பாதாளத்தில் ஒளித்து வைக்கமாட்டீரா? உமது சீற்றம் தணியும்வரை மறைத்து வைக்கமாட்டீரா? என்னை நினைக்க ஒருநேரம் குறிக்கமாட்டீரா?
14 மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா? எனக்கு விடிவு வரும்வரை, என் போராட்ட நாள்களெல்லாம் பொறுத்திருப்பேன்.
15 நீர் அழைப்பீர்: உமக்கு நான் பதிலளிப்பேன்: உம் கைவினையாம் என்னைக் காண விழைவீர்.
16 அப்பொழுது, என் காலடிகளைக் கணக்கிடுவீர்: என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.
17 என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்: என் குற்றத்தை மூடி மறைத்தீர்.
18 ஆனால் மலை விழுந்து நொறுங்கும்: பாறையும் தன் இடம்விட்டுப் பெயரும்.
19 கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்: நிலத்தின் மண்ணை வெள்ளம் அடித்துப்போகும்: இவ்வாறே ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.
20 ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்: ஒழிந்துபோவான் அவனும்: அவனது முகத்தை உருக்குலைத்து, விரட்டியடிப்பீர்.
21 புதல்வர்கள் புகழ்பெறினும் அவன் அறிந்தான் இல்லை: கதியிழந்தாலும் அதை அவன் கண்டான் இல்லை.
22 அவன் உணர்வது தன் ஊனின் வலியையே: அவன் புலம்புவது தன் பொருட்டே.

Holydivine