Job - Chapter 28
Holy Bible

1 வெள்ளிக்கு விளைநிலம் உண்டு: பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.
2 மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது: கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.
3 மனிதர் இருளுக்கு இறுதி கண்டு, எட்டின மட்டும் தோண்டி, இருட்டிலும் சாவின் இருளிலும் கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.
4 மக்கள் குடியிருப்புக்குத் தொலையில் சுரங்கத்தைத் தோண்டுவர்: வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்: மனிதரிடமிருந்து கீழே இறங்கி ஊசலாடி வேலை செய்வர்.
5 மேலே நிலத்தில் உணவு விளைகின்றது: கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.
6 நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்: பொன்துகளும் அதில் கிடைக்கும்.
7 அதற்குச் செல்லும் பாதையை, ஊன் உண்ணும் பறவையும் அறியாது: கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.
8 வீறுகொண்ட விலங்குகள் அதன் மேல் சென்றதில்லை: சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.
9 கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்: மலைகளின் அடித்தளத்தையே பெயர்த்துப் புரட்டிடுவர்.
10 பாறைகள் நடுவே சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்: விலையுயர் பொருளையே அவர்களது கண் தேடும்.
11 ஒழுகும் ஊற்றுகளைத் தடுத்து நிறுத்துகின்றனர்: மறைவாய் இருப்பதை ஒளிக்குக் கொணர்கின்றனர்.
12 ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?
13 மனிதர் அதன் மதிப்பை உணரார்: வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.
14 'என்னுள் இல்லை' என உரைக்கும் ஆழ்கடல்: 'என்னிடம் இல்லை' என இயம்பும் பெருங்கடல்.
15 தங்கத்தைக் கொடுத்து அதைப் பெறமுடியாது: வெள்ளியால் அதன் விலையை நிறுக்க இயலாது.
16 ஓபீர்த் தங்கமும் கோமேதகமும் அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!
17 பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா: பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.
18 மணியும் பவளமும் அதற்கு இணையில்லை: மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.
19 எத்தியோப்பிய புட்பராகம் அதற்கு இணையல்ல: பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.
20 அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்? எங்குள்ளது அறிவின் உறைவிடம்?
21 வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும் ஒளிந்துள்ளது: வானத்துப் பறவைகளுக்கும் மறைவாய் உள்ளது.
22 படுகுழியும் சாவும் பகர்கின்றன: அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது:
23 அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்: அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!
24 ஏனெனில், வையகத்தின் எல்லை வரை அவர் காண்கின்றார்: வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.
25 காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது, நீரினை அளவையால் அளந்தபோது,
26 மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது, இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,
27 அவர் ஞானத்தைக் கண்டார்: அதைப்பற்றி அறிவித்தார்: அதை நிலைநாட்டினார்: இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.
28 அவர் மானிடர்க்குக் கூறினார்: ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்: அதுவே ஞானம்: தீமையை விட்டு விலகுங்கள்: அதுவே அறிவு.

Holydivine