Job - Chapter 17
Holy Bible

1 என் உயிர் ஊசலாடுகின்றது: என் நாள்கள் முடிந்துவிட்டன: கல்லறை எனக்குக் காத்திருக்கின்றது.
2 உண்மையாகவே, எள்ளி நகைப்போர் என்னைச் சூழ்ந்துள்ளனர்: என் கண்முன் அவர்தம் பகைமையே நிற்கின்றது.
3 நீரே எனக்குப் பணையமாய் இருப்பீராக! வேறுயார் எனக்குக் கையடித்து உறுதியளிப்பார்?
4 அறியமுடியாதபடி அவர்கள் உள்ளத்தை அடைத்துப் போட்டீர்: அதனால் அவர்கள் மேன்மையடைய விடமாட்டீர்.
5 கைம்மாறு கருதி நண்பர்க்கு எதிராயப் புறங்கூறுவோரின் பிள்ளைகளின் கண்களும் ஒளியிழந்துபோம்.
6 என் இனத்தார்க்கு அவர் என்னைப் பழிச் சொல்லாக்கியுள்ளார்: என்னைக் காண்போர் என்முன் துப்புகின்றனர்.
7 கடுந்துயரால் என் கண்கள் மங்குகின்றன: என் உறுப்புகளெல்லாம் நிழல்போலாகின்றன.
8 இதைக்கண்டு நேர்மையானவர் திகைக்கின்றனர்: குற்றமற்றோர் இறைப்பற்று இல்லார் மேல் சீற்றமடைகின்றனர்.
9 நேர்மையாளர் தம் நெறியைக் கடைப்பிடிப்பர்: கறையற்ற கையினர் இன்னும் வலிமை அடைவர்.
10 ஆனால், இப்பொழுது நீங்கள் எல்லாரும் திரும்பி வாருங்கள். வந்தாலும் ஞானமுள்ள எவரையும் உங்களில் காணமாட்டேன்.
11 கடந்தன என் நாள்கள்: தகர்ந்தன என் திட்டங்கள்: அவ்வாறே ஆயின என் இதய நாட்டங்கள்.
12 அவர்கள் இரவைப் பகலாகத் திரிக்கின்றனர்: ஒளி இருளுக்கு அண்மையில் உளது என்கின்றனர்.
13 இருள் உலகையே என் இல்லமென எதிர்பார்ப்பேனாகில், என் படுக்கையை இருளிலே விரிப்பேனாகில்,
14 படுகுழியை நோக்கி என் தந்தையே என்றும், புழுவை நோக்கி என் தாயே, என் தமக்கையே என்றும் புகல்வேனாகில்,
15 பின் எங்கே என் நம்பிக்கை? என் நம்பிக்கையைக் காணப்போவது யார்?
16 நாம் ஒன்றாய்ப் புழுதிக்குப் போகும் போது, இருள் உலகில் வாயில்வரை அது இறங்குமா?

Holydivine