Job - Chapter 24
Holy Bible

1 குறித்த காலத்தை எல்லாம் வல்லவர் ஏன் வெளிப்படுத்தவில்லை? அவரை அறிந்தோரும் ஏன் அவர் தம் நாள்களைக் காணவில்லை?
2 தீயோர் எல்லைக்கல்லை எடுத்துப்போடுகின்றனர். மந்தையைக் கொள்ளையிட்டு மேய்கின்றனர்.
3 அனாதையின் கழுதையை ஓட்டிச் செல்கின்றனர். விதவையின் எருதை அடகாய்க் கொள்கின்றனர்.
4 ஏழையை வழியினின்று தள்ளுகின்றனர். நாட்டின் வறியோர் ஒன்றாக ஒளிந்து கொள்கின்றனர்.
5 ஏழைகள் உணவுதேடும் வேலையாய்க் காட்டுக் கழுதையெனப் பாலைநிலத்தில் அலைகின்றனர்: பாலைநிலத்தில் கிடைப்பதே அவர்கள் பிள்ளைகளுக்கு உணவாகும்.
6 கயவரின் கழனியில் அவர்கள் சேகரிக்கின்றனர்: பொல்லாரின் திராட்சைத் தோட்டத்தில் அவர்கள் பொறுக்குகின்றனர்.
7 ஆடையின்றி இரவில் வெற்று உடலாய்க் கிடக்கின்றனர்: வாடையில் போர்த்திக் கொள்ளப் போர்வையின்றி இருக்கின்றனர்:
8 மலையில் பொழியும் மழையால் நனைகின்றனர்: உறைவிடமின்றிப் பாறையில் ஒண்டுகின்றனர்:
9 தந்தையிலாக் குழந்தையைத் தாயினின்று பறிக்கின்றனர்: ஏழையின் குழந்தையை அடகு வைக்கின்றனர்.
10 ஆடையின்றி வெற்றுடலாய் அலைகின்றனர்: ஆறாப்பசியுடன் அரிக்கட்டைத் தூக்குகின்றனர்.
11 ஒலிவத் தோட்டத்தில் எண்ணெய் ஆட்டுகின்றனர்: திராட்சைத் பிழிந்தும் தாகத்தோடு இருக்கின்றனர்.
12 நகரில் இறப்போர் முனகல் கேட்கின்றது: காயமடைந்தோர் உள்ளம் உதவிக்குக் கதறுகின்றது: கடவுளோ அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.
13 இன்னும் உள்ளனர் ஒளியை எதிர்ப்போர்: இவர்கள் அதன் வழியை அறியார்: இவர்கள் அதன் நெறியில் நில்லார்.
14 எழுவான் கொலைஞன் புலரும் முன்பே: ஏழை எளியோரைக் கொன்று குவிக்க: இரவில் திரிவான் திருடன் போல.
15 காமுகனின் கண் கருக்கலுக்காய்க் காத்திருக்கும்: கண்ணெதுவும் என்னைக் காணாது என்றெண்ணி: முகத்தை அவனோ மூடிக் கொள்வான்!
16 இருட்டில் வீடுகளில் கன்னம் இடுவர்: பகலில் இவர்கள் பதுங்கிக் கிடப்பர்: ஒளியினை இவர்கள் அறியாதவரே!
17 ஏனென்றால் இவர்களுக்கு நிழல் காலைபோன்றது: சாவின் திகில் இவர்களுக்குப் பழக்கமானதே!
18 வெள்ளத்தில் விரைந்தோடும் வைக்கோல் அவர்கள்: பார்மேல் அவர்கள் பங்கு சபிக்கப்பட்டது: அவர்தம் திராட்சைத் தோட்டத்தை எவரும் அணுகார்.
19 வறட்சியும் வெம்மையும் பனிநீரைத் தீய்க்கும்: தீமை செய்வோரைப் பாதாளம் விழுங்கும்.
20 தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்: புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும். அவர்கள் கொடுமை மரம்போல் முறிந்துபோம்.
21 ஏனெனில், மகவிலா மலடியை இழிவாய் நடத்தினர்: கைம்பெண்ணுக்கு நன்மையைக் கருதினாரில்லை.
22 இருப்பினும், கடவுள் தம் வலிமையால் வலியோரின் வாழ்வை நீட்டிக்கிறார்: அவர்கள் தம் வாழ்வில் நம்பிக்கையோடு இருந்தாலும் நிலைக்கமாட்டாhகள்.
23 அவர் அவர்களைப் பாதுகாப்புடன் வாழவிடுகிறார்: அவர்களும் அதில் ஊன்றி நிற்கிறார்கள்: இருப்பினும் அவரது கண் அவர்கள் நடத்தைமேல் உள்ளது.
24 அவர்கள் உயர்த்தப்பட்டனர்: அது ஒரு நொடிப்பொழுதே: அதன்பின் இல்லாமற் போயினர்: எல்லோரையும் போல் தாழ்த்தப்பட்டனர்: கதிர் நுனிபோல் கிள்ளி எறியப்பட்டனர்.
25 இப்படி இல்லையெனில், என்னைப் பொய்யன் என்றோ, என் மொழி தவறு என்றோ, எண்பிப்பவன் எவன்?

Holydivine