Psalms - Chapter 102
Holy Bible

1 ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக்குரல் உம்மிடம் வருவதாக! 
2 நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்! 
3 என் வாழ்நாள்கள் புகையென மறைகின்றன; என் எலும்புகள் தீச்சூழையென எரிகின்றன. 
4 என் இதயம் புல்லைப்போலத் தீய்ந்து கருகுகின்றது; என் உணவையும் நான் உண்ண மறந்தேன். 
5 என் பெருமூச்சின் பேரொலியால், என் எலும்புகள் சதையோடு ஒட்டிக் கொண்டன. 
6 நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்; பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன். 
7 நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்; கூரைமேல் தனிமையாய் இருக்கும் பறவைபோல் ஆனேன். 
8 என் எதிரிகள் நாள்முழுதும் என்னை இழித்துரைக்கின்றனர்; என்னை எள்ளி நகையாடுவோர் என் பெயரைச் சொல்லிப் பிறரைச் சபிக்கின்றனர். 
9 சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்; என் மதுக்கலவையோடு கண்ணீரைக் கலக்கின்றேன். 
10 ஏனெனில், உமது சினத்திற்கும் சீற்றத்திற்கும் உள்ளானேன்; நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர். 
11 மாலை நிழலைப்போன்றது எனது வாழ்நாள்; புல்லென நான் உலர்ந்து போகின்றேன். 
12 ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்; உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும். 
13 நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்; இதோ! குறித்த காலம் வந்துவிட்டது. 
14 அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்; அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர். 
15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 
16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 
17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். 
18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 
19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். 
20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். 
21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும்; எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். 
22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். 
23 என் வாழ்க்கைப் பாதையின் நடுவில் ஆண்டவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்; அவர் என் ஆயுளைக் குறுக்கிவிட்டார். 
24 நான் உரைத்தது: "என் இறைவா! என் வாழ்நாளின் இடையில் என்னை எடுத்துக் கொள்ளாதேயும்; உமது காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ? 
25 முற்காலத்தில் நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்; விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ! 
26 அவையோ அழிந்துவிடும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்; அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்; அவையும் மறைந்துபோம். 
27 நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது. 
28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! 

Holydivine