Psalms - Chapter 7
Holy Bible

1 என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.
2 இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்; விடுவிப்போர் எவரும் இரார்.
3 என் கடவுளாகிய ஆண்டவரே, நான் இவற்றைச் செய்திருந்தால் -என் கை தவறிழைத்திருந்தால்,
4 என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு நான் தீங்கிழைத்திருந்தால், என் பகைவனைக் காரணமின்றிக் காட்டிக்கொடுத்திருந்தால் -
5 எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்; என்னைத் தரையில் தள்ளி மிதித்து நசுக்கட்டும்; என் பெருமையைப் புழுதியில் புதைக்கட்டும். (சேலா)
6 ஆண்டவரே, சினங்கொண்டு எழுந்தருளும்; என் பகைவரின் சீற்றத்தை அடக்க வாரும்; எனக்காக விழித்தெழும்; ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர் நீர் ஒருவரே.
7 எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி உம்மைச் சூழச் செய்யும்; அவர்கள்மீது உயரத்தினின்று ஆட்சி செலுத்தும்.
8 ஆண்டவரே, நீரே மக்களினத்தார் அனைவருக்கும் நீதி வழங்குபவர்; ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.
9 பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள்.
10 கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.
11 கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன்.
12 பொல்லார் மனமாற்றம் அடையாவிடில், அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்; வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.
13 கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்; அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்;
14 ஏனெனில், பொல்லார் கொடுமையைக் கருக்கொள்கின்றனர்; அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி, பொய்ம்மையைப் பெற்றெடுக்கின்றனர்.
15 அவர்கள் குழியை வெட்டி ஆழமாகத் தோண்டுகின்றனர்; அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுகின்றனர்;
16 அவர்கள் செய்த கேடு அவர்கள் தலைக்கே திரும்பும். அவர்கள் செய்த கொடுமை அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.
17 ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன்; உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவேன்.

Holydivine