Psalms - Chapter 42
Holy Bible

1 கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?
3 இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று; 'உன் கடவுள் எங்கே?' என்று என்னிடம் தீயோர் கேட்கின்றனர்.
4 மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது.
5 என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
6 என் நெஞ்சம் மிகவும் தளர்ந்துள்ளது; ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும், எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலும் உம்மை நான் நினைத்துக்கொண்டேன்.
7 உம் அருவிகள் இடியென முழங்கிட ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது; உம் சிற்றலைகளும் பேரலைகளும் என்மீது புரண்டோடுகின்றன.
8 நாள்தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்; இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்; எனக்கு வாழ்வளிக்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன்.
9 என் கற்பாறையாகிய இறைவனிடம் 'ஏன் என்னை மறந்தீர்; எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்' என்கின்றேன்.
10 'உன் கடவுள் எங்கே?' என்று என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது, என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது.
11 என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

Holydivine